Friday, July 17, 2015

குறுந்தொகை-219





தலைவி கூற்று

(தலைவன் சிறைப்புறத்தில் இருப்பத் தலைவி தோழிக்குக் கூறுவாளாய்த் தன் துயரின் மிகுதி கூறி, “தலைவர் நம் துயர் நீக்க இதுசெவ்வி” என்று உணர்த்தியது.)


நெய்தல் திணை - பாடலாசிரியர் வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்

இனி பாடல்-


பயப்பென் மேனி யதுவே நயப்பவர்
   
நாரி னெஞ்சத் தாரிடை யதுவே
   
செறிவுஞ் சேணிகந் தன்றே யறிவே
   
ஆங்கட் செல்க மெழுகென வீங்கே

வல்லா கூறி யிருக்கு முள்ளிலைத்
   
தடவுநிலைத் தாழைச் சேர்ப்பர்க்
   
கிடமற் றோழியெந் நீரிரோ வெனினே.


                              -வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்


    தோழி--, பசலையானது எனது மேனியின் கண்ணது;  காதல் அவரது அன்பற்றநெஞ்சமாகிய செல்லுதற்கரிய இடத்தின்கண்ணது; எனது அடக்கமும்,  நெடுந்தூரத்தில்.நீங்கியது;  எனது அறிவு,  தலைவர் உள்ள இடத்திற்கே செல்வேம் அதன்பொருட்டு எழுவாயாக என்று, நம்மால் மாட்டாதவற்றைக் கூறி இங்கே தங்கி இருக்கும்; எந்தத் தன்மையில் உள்ளீரோ என்றுபரிவு கூர்ந்து வினாவிக் குறைதீர்ப்பராயின், முள் அமைந்த இலையை உடைய, பருத்த அடியை உடைய தாழையை உடையகடற்கரைத் தலைவருக்கு,  இது தக்க செவ்வியாகும்.



     (கருத்து) தலைவர் வரைவதற்கு ஏற்ற சமயம் இது.

     (வி-ரை.) பகற்குறிக்கண் நிகழும் இடையீட்டால் வருந்திய தலைவி,தலைவன் வரைந்து கோடலை விரும்பிக் கூறியது இது. இதன்கண் தன்நிலையைப் புலப்படுத்தி, இது நீங்குதற்குரிய செவ்வி இதுவென்றுதலைவன் உணரும்படி கூறினாள், அவன் அதனை உணர்ந்து விரைவில் வரைந்து கொள்வான் என்பது கருதி.

No comments: