Monday, December 28, 2015

நம்ம தலைவர்




நம்ம தலைவர் திருவள்ளுவரை பின்பற்றுபவர்
எப்படிச் சொல்ற...
யாராயிருந்தாலும் இரண்டு அடிதான்

2)தலைவருக்கு பிடித்த குறள் எது தெரியுமா?
 எது
 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூஉ மழை

3) நம்ம டிவியெல்லாம் பார்க்கிறோமே..அது யாரால
   அதுதான் தலைவர் சொல்லிட்டாரே "கூகுளாலன்னு"

4) தலைவர் போதையில என்ன பேசறார்
  மதுவிலக்கு அமல் படுத்தணூமாம்

5) தலைவருக்கு பிடிக்காத வார்த்தை என்ன தெரியுமா
  "அம்மா"

6) தலைவருக்கு மாடுகளைப் பிடிக்காது..ஏன் தெரியுமா?
  அவை அம்மான்னு கத்துமாம்

Thursday, December 24, 2015

கதை அல்ல நிஜம்...


அமெரிக்காவில் பிராஜெக்ட் மேலாளராய் வேலை செய்யும் ஒருவருக்கு  திருமணம் நடந்து, ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.
கணவன்,மனைவி..தங்கள் குழந்தையுடன்  சென்னை வந்தனர்.

அவர்களை வரவேற்க வந்த இரு வீட்டாரும், குழந்தையை வாங்கி கொஞ்சினர்.பின்னர் மந்தைவெளியில் உள்ள தன் வீட்டிற்குச் செல்ல இஞ்சினீயர் கிளம்பினார்.ஆனால் மனைவியோ தனது வீட்டிற்கே முதலில் போக வேண்டும் என்றார்.இதில் இரு தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது.

உடன் பெண்ணின் தந்தை, 'மகளையும், பேரனையும் நான்தான் அழைத்துச் செல்வேன்..நீங்கள் எங்களுடன் வருவதானால் வாருங்கள் அல்லது நீங்கள் மட்டும் உங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்' என்று கூறி மகளையும், பேரனையும் காரில் அழைத்துச் சென்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கணவர், விமான நிலைய போலீசிற்குச் சென்று, 'மனைவியும், மகனும் மாயமாகி விட்டனர்.அவர்களை கண்டுபிடித்து தாருங்கள்' எனப் புகார் கொடுத்தார்.போலீஸ் விசாரணையில் பெண்ணின் தந்தையே பெண்ணை அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

இதை அடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தியதோடு, 'இரு வீட்டாரையும் ஈகோவை விட்டு அனுசரித்துச் செல்ல அறிவுறுத்தினர்.மனைவியின் விருப்பப்படி அவருடன் சேலம் சென்று இரு நாட்கள் இருந்துவிட்டு பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள்'என்றனர்.

இச் செய்தி ஒரு செய்தியா என்று சிலர் நினைக்கக் கூடும்..ஆனால் எனக்கு இது முக்கியச் செய்தி ஆகப் பட்டது.

பெண்கள் கணவன் வீட்டிற்குத்தான் முதலிடம் தர வேண்டும் என்று குறுகிய நோக்கம் இருந்த காலம் எல்லாம் போய் விட்டது.திருமணமானதும்..பெண்களின் பிறந்தவீடு உறவு முடிந்துவிட்டது..இனி புகுந்த வீடுதான் என்பதெல்லாம்..பழங்கதை.பிள்ளையைப் பெற்றோர்..தன் மகன் என எண்ணுவதைப்போல..பெண்ணைப் பெற்றோருக்கும்..அப்பெண் அவர்கள் வீட்டுக் குழந்தை..பெற்றோரால் பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்டவள்..ஒவ்வொரு வயதிற்கும்..ஒவ்வொரு வித அலங்காரம் பண்ணி குழந்தை வளர்ச்சியை ரசித்தவர்கள்.அவளுக்கு பையனுக்கு இணையாகக் கல்வியறிவை ஊட்டியவர்கள்.எந்த அளவிலும்..பெண்ணைப் பெற்றோர்..பிள்ளையைப் பெற்றொரைவிடக் குறைந்தவர்கள் அல்ல..அதே போல பிள்ளையின் மீது நீங்கள் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்களோ..அதில் எள்ளளவு பாசமும் குறையாமல் பெண் மீது பாசம் வைத்துள்ளவர்கள் அவர்கள்.

ஆகவே..வயதில் பெரியவர்களான பெற்றோர்கள்..இன்றைய காலகட்டத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல நடந்து கொள்ளுங்கள்.

நான் மேலே சொன்ன செய்தியில், கணவனும் சரி,பிள்ளையைப் பெற்றோரும் சரி...நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறாய்..முதலில் உன் வீட்டிற்குச் சென்று உன் பெற்றோருடன் சில நாட்கள் இருந்து விட்டு வா..என்று சொல்லியிருந்தால்..அந்தப் பெண்ணும் மகிழ்ந்திருப்பாள்..தனது மாமியார்,மாமனார் மீது நல்ல எண்ணமும் உருவாகி இருக்கும்...திட்டமிட்டப்படி இல்லாமல் விரைவில் தன் பெற்றோர் வீட்டிலிருந்து கிளம்பியிருப்பாள்.

மேலும் பெண்ணின் தந்தையும் சற்று விட்டுக் கொடுத்து தன் பெண்ணிடம்..'நீ அவர்கள் வீட்டில் இரண்டு நாள் இருந்துவிட்டு கணவன், குழந்தையை அழைத்துக் கொண்டு நம் வீட்டிற்கு வந்து சில நாள் தங்கலாம்' என்று அறிவுறுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் இப்போதைய தேவை..புரிந்துணர்வும்..விட்டுக் கொடுத்தலுமே...இதை அனைவரும் புரிந்து கொண்டால்..பிரச்னை இல்லை.


வயதானவர்கள் தங்கள் பிடிவாதத்தால்...ஒரு அருமையான உறவுகளிடையே கடைசிவரை ஒரு பிளவு ஏற்பட்டு விட்டதை ஏன் உணர மறுக்கிறார்கள்.

கணவனானாலும் சரி..மனைவியானாலும் சரி..அவர்களுக்கான முடிவுகளை அவர்களே எடுத்துக் கொள்ள வேண்டிய வயதை அடைந்து விட்டனர்..அவர்களுக்குள் பேசி முடிவெடுக்கட்டும்.இடையே ..இரு தரப்பு பெற்றோரும் தங்கள் எல்லையை உணர்ந்து..அத்துடன் நிற்க வேண்டும்.

இன்னமும் சென்ற நூற்றாண்டிலேயே இருப்பதில்  கேடுதான் விளையும்.

Wednesday, December 23, 2015

M.G.R.,


தமிழர்களால் மறக்க முடியாத..பிறப்பால் ஒரு மலையாளியானவர்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில்..வந்து..தமிழ் மக்களின் தலைவர்களில் ஒருவராகி..ஓரளவு திறம்பட ஆட்சி புரிந்து மறைந்த நடிகர்..அரசியல்வாதி.
பல நடிகர்களுக்கு முதல்வர் பதவி கனவு இவரால் ஏற்பட்டது..ஆனால் இவர் கடந்து வந்த பாதை கரடுமுரடானது என்பதை இவர்கள் ஏன் நினைப்பதில்லை.
அடிப்படையில் காங்க்கிரஸ்காரரான இவர்..அண்ணாவின் கொள்கைகளால் கவரப்பட்டு தி.மு.க.வில் இணைந்தார்.அதற்குபின்..அண்ணாவாலேயே எம்.ஜி.ஆர். வந்து முகத்தைக் காட்டினாலே ஒட்டு கிடைக்கும் என பாராட்டப் பட்டார்.
எம்.ஆர்.ராதாவால் தனிப்பட்ட சில காரணங்களால் சுடப்பட இவரது புகைப்படத்தைப் போட்டு தி.மு.க. தேர்தலில் ஓட்டுக் கேட்டது.
இவர் வேறு..கட்சி வேறு என ரசிகர்கள் நினைக்கவில்லை.
ஒரு சமயம் இவரே..'காமராஜர் என் தலைவர்..அண்ணா என் வழிகாட்டி'என்றபோது மக்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
அந்த அளவு கட்சியில் ஒன்றிய இவர் கட்சியின் பொருளாளரும் ஆனார்.அண்ணாவின் மறைவுக்குப் பின் நெடுஞ்செழியன் தான் முதல்வராக ஆகியிருக்க வேண்டும்.,ஆனால் கலைஞர் முதல்வர் ஆனதற்கு இவரும் ஒரு காரணம்.ஆனால் அப்பொதெல்லாம் இவர் தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று எல்லாம் கேட்டதில்லை.
கட்சியின் பொருளாளர் என்ற முறையில் கட்சியின் கணக்கு கேட்ட போது..கலைஞரால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.தி.மு.க. விலிருந்து விலக்கப்பட்டார்.உடன் இவர் அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.பின் அவர் உயிரிருந்தவரை வெற்றி முகம்.
படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்ற காமராஜரையே தோற்கடித்த மக்கள் உண்மையிலேயே படுத்துக் கொண்டு ஜெயிக்கவைத்தது இவர் ஒருவரைத்தான்.
முன்னாள் ஜனாதிபதி கிரி அவர்கள் மறைந்த போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.,மயானபூமிக்கு செல்கிறார்.அங்கு வந்திருந்த எதிர்க்கட்சி தலைவரான கலைஞர் கடைசியில் நின்றுக்கொண்டிருந்தார்..அவரைக்கூப்பிட்டு தன் பக்கத்தில் நிற்க வைத்துக்கொண்டார்.அந்த பண்பு இன்று திராவிட கட்சியினரிடையே இல்லையே ஏன்?
இவர் மறைவுக்குப் பின்..கட்சி இரண்டாக உடைந்தது..இவர் மனைவி ஜானகி அணி,ஜெயலலிதா அணி..
எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட கட்சி உடைந்ததை அவர்கள் தொண்டர்களால் ஏற்க முடியவில்லை.இரண்டு அணியும் மீண்டும் ஒன்றானதுமே மக்கள் கட்சியை மீண்டும் அங்கீகரித்தனர்.
இன்றும் பல கிராம மக்களிடையே எம்.ஜி.ஆர்.கட்சிதான்..இரட்டை இலை எம்.ஜி.ஆர்.சின்னம் இதுதான் அ.தி.மு.க.
சரி விஷயத்திற்கு வருவோம்..அவர் போல வரலாம் என பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர்..ஆரம்பிக்கின்றனர்..

ஆமாம்..இன்றைய நிலையில் எம்.ஜி.ஆர்.வாரிசு யார்...

அண்ணாவின் மறைவிற்குப்பின் சில ஆண்டுகள் கழிந்து தி.மு.க. உடைந்து தோன்றிய கட்சி அண்ண திராவிட முன்னேற்ற கழகம்.அந்த சமயத்தில் பல திராவிட கட்சிகள் அண்ணாவை சொந்தம் கொண்டாடின.(அண்ணாவின் மனைவியையும்,குடும்பத்தையும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்).எம்.ஜி.ஆர்.தனிப்புகழ்ப் பெற்று ஆட்சியைப் பிடித்ததும் ..நான் தான் அவர் வாரிசு..என அவரே சொல்லி விட்டார் என்றார் பாக்கியராஜ்.(வசதியாக சினிமாவில் தன் வாரிசு என்று சொன்னதை மறைத்து விட்டார்).பின்,சத்யராஜ் சில படங்களில் எம்.ஜி.ஆர்.அணிவதுபோல உடைகளை அணிந்து அவரது பாணியில் நடித்தார்.திருநாவுக்கரசர் எம்.ஜி.ஆர்.அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர்.கழகம் ஆரம்பித்தார்.
இது எல்லாம் பழங்கதை.தமிழக கட்சிகளின் தற்போதைய நிலை.....
விஜயகாந்த்- தன்னைத்தானே கறுப்பு எம்.ஜி.ஆர்.எனக் கூறிக்கொண்டார்.தன்னை அவர் வாரிசு என்றார்.இப்படி சொல்வதால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற காலம் போயிற்று.சினிமாவில் நல்லவராக நடிப்பவர்கள் அனைவரும் நல்லவரல்ல என மக்கள் உணர்ந்துக் கொண்டார்கள்.

ஜெயலலிதா-
எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சி இவரிடம் இருக்கலாம்.அதனால் இவர் அவரது வாரிசாக முடியுமா?இவர் உண்மையிலேயே வாரிசு என்றால்..அவர் மறைந்ததும் கட்சி உடைந்த போது இவர் தலைமை வெற்றி பெற்றிருக்க வேண்டுமே..மீண்டும் கட்சி இணைந்ததும் தானே வெற்றிப் பெற்றார்.இது எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சி.,எம்.ஜி.ஆரின் சின்னம் இரட்டை இலை..இதுதான் இன்றுவரை அவருக்கு துணை இருக்கிறது.

ஆனால்..இவர்களில் யார் உண்மையான வாரிசு?
யாருமே இல்லை..
ஒரு காமராஜ்தான்
ஒரு அண்ணாதான்...
ஒரு எம்.ஜி.ஆர்.தான்
மக்கள் மட்டுமே இவர்களது வாரிசுகள்.

பெரியாரின் பெருந்தன்மை



கல்கி அவர்களின் மகள் ஆனந்திக்கு திருமணம் நிச்சயமாகி...கல்கி திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு பெரியாரை அழைக்கப் போனார்.பெரியாரும் தனக்கு அன்று எதுவும் வேலை இல்லை என்றும்,கண்டிப்பாக வருவதாகவும் கூறினார்.திருமணம் கல்கி தோட்டத்தில் நடந்தது.காலையில் பெரியார் வரவில்லை.

ஒரு வேளை..பெரியாருக்கு..அவசர வேலை ஏதாவது வந்திருக்கும் என கல்கி எண்ணினார்.

மதியம் 12மணி வாக்கில்..கல்கியின் வீட்டிற்கு ஒரு வேனில் பெரியார் வந்தார்.

திருமணம் நடந்த இடத்திற்கு அருகில்..கல்கியின் இல்லம் இருந்தது.அவரது இல்லத்தில் அப்போது கலைவாணர்,சின்ன அண்ணாமலை..மற்றும் சில எழுத்தாளர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

பெரியாரைப் பார்த்த அவர்கள் உடனே..ஓடோடி..கல்கியை அழைத்து வந்தனர்.

கல்கி..ஆனந்தியையும்..புது மாப்பிள்ளையையும் பெரியார் காலில் விழுந்து ஆசி பெறச் சொன்னார்.பெரியார் உடனே...கொஞ்சம் விபூதி..குங்குமம் கொண்டுவரச்சொல்லி அவர்கள் நெற்றியில் இட்டார்.

பின்..கல்கி..அவரிடம்..'ஐயா..காலையில் உங்களை எதிர்ப்பார்த்தேன்...ஏதாவது வேலை வந்துவிட்டதா' என்றார்.

அதற்கு பெரியார் 'எந்த வேலையும் இல்லை..திருமணத்திற்கு பல உறவினர்கள்,நண்பர்கள் வந்திருப்பார்கள்.அவர்கள் எதிரே,திருமணத்திற்கு கறுப்பு சட்டையுடன் நான் வருவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.அதனால் தான் வரவில்லை'என்றார்.

அடுத்த கல்கி இதழில்..பெரியார் மணமக்களுக்கு விபூதி,குங்குமம் இடுவதை புகைப்படத்துடன் வெளியிட ஆசிரியர் குழுவினர் முயல..கல்கி அவர்களைக் கூப்பிட்டு..கண்டித்ததுடன் 'பெரியார் விபூதி இட்டது..அவர் நம்பிக்கையால் அல்ல...அவர் தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்ததாக அர்த்தம் இல்லை.நமது நம்பிக்கைகளை அவர் மதித்தார் அவ்வளவுதான்.இது அவர் பெருந்தன்மையைக் காட்டுகிறது'என்று சொல்லி அந்த புகைப்படங்களைக் கிழித்தார்.

இது கல்கியின் பெருந்தன்மை.


Sunday, December 20, 2015

நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் - 4



1967ல்..பாமா விஜயம் என்னும் நகைச்சுவைப் படம் பாலசந்தர் கதை, வசனம், இயக்கத்தில் வந்து சக்கைப் போடு போட்டது.இப்படத்தில் டி.எஸ்.பாலையா,நாகேஷ்,முத்துராமன், சுந்தரராஜன், காஞ்சனா,சௌகார் ஜானகி, ராஜஸ்ரீ, ஜெயந்தி ஆகியோர் நடித்திருந்தனர்.

நிம்மதியாக வாழ்ந்து வந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில். அவர்கள் இல்லத்தின் அருகே வரும் ஒரு நடிகையின் பிரவேசம்..அந்த வீட்டின் மூன்று மகன்களையும், மருககள்களையும் எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதை சிரித்து..சிரித்து மகிழுமாறு கொடுத்திருந்தார் இயக்குநர்.தவிர்த்து, பேராசை பெரு நஷ்டம் என்ற படிப்பினையையும் இப்படம் உணத்தியது.

பாலசந்தர் படங்களில் எல்லாமே, வெளியே தெரியாமல். சற்று ஆழ்ந்து பார்த்தால் சமுதாயத்திற்கு ஒரு செய்தி இருக்கும்.அவற்றை அவ்வப்போது அந்தப் படங்கள் பற்றி எழுதுகையில் பார்க்கலாம்.

பாமாவிஜயத்தில் குடும்பத்தின் தலைவனாக பாலையாவின் நடிப்பு மிகவும் பாராட்டுதலைப் பெற்றது.தவிர்த்து, வீட்டு குழந்தைகளுடன் அவரும் "வரவு எட்டணா..செலவு பத்தணா" பாடலில் குரல் கொடுத்ததும், அதன் படப்பிடிப்பு நேர்த்தியும் அருமை.இப்படத்தின், மற்றொரு சிறந்த பாடலாக"ஆனி முத்து வாங்கி வந்தேன்' என்பதையும் குறிப்பிடலாம்.

இதே ஆண்டு வெளிவந்த மற்றொரு நகைச்சுவைப் படம் "அனுபவி ராஜா அனுபவி"

பாலசந்தருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் சில தலைவர்களுடன் பரிச்சயம் இருந்தது.அவர்களில் குறிப்பித்தக்க ஒருவர் அரங்கண்ணல்.அவர் கதை எழுதி தயாரித்த  படம் "அனுபவி ராஜா அனுபவி". இதற்கான திரைக்கதையும், இயக்கமும் நம் பாலசந்தருடையது.

இப்படத்தில் நாகேஷ் இரட்டை வேடத்தில் நடித்தார்.அவரது நகைச்சுவை நடிப்பிற்கு ஈடு கொடுத்து முத்துராமன் நாயகனாக நடித்தார்.மற்றும், ராஜஸ்ரீ, மனோரமா ஆகியோரும் இருந்தனர்.இப்படப்பாடல்களும் புகழ் பெற்றன.இப்படிச் சொன்னதும் இசை, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வனாதன் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

டி.எம்.சௌந்தரராஜனும், மனோரமாவும் இணைந்து .தூத்துக்குடி தமிழில் பாடியிருந்த "முத்துக் குளிக்க வாரீயளா?" அனைத்து ரசிகனையும் பல ஆண்டுகள் முணுமுணுக்க வைத்தது.

தவிர்த்து, "அழகிருக்குது உலகிலே, ஆசை இருக்குது மனசுலே .அனுபவி ராஜா அனுபவி' என்ற பாடல்..

அன்றைய மதராஸில் இருந்த ஏமாற்று பேர் வழிகள், போலி வாழ்க்கை ஆகியவற்றை குறிக்கும் வகையில் கவியரசு எழுதிய "மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' என்ற பாடல்...இப்படத்திற்கு மேலும் வலு சேர்த்தன என்றால் மிகையில்லை.

மொத்தத்தில்  இரண்டு நகைச்சுவை படங்களும் பாலசந்தருக்கு பெரும் வெற்றியைத் தந்தன எனலாம்.

Friday, December 18, 2015

நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் = 3



தமிழ்த் திரைப்படங்களில் முதல் முழு நீள நகைச்சுவைப் படம் 'சபாபதி' எனலாம்.

பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் புகழ் பெற்ற இந்த நாடகத்தை திரைப்படமாக எடுக்கலாம் என ஏ.டி.கிருஷ்ணசாமி கூற அவருடன் சேர்ந்து ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் இயக்கி, தயாரித்த படம் இது.

1941ல் வெளிவந்த இப்படத்தில் டி.ஆர்.ராமசந்திரன், காளி என்.ரத்தினம் ஆகியோர் நடித்திருந்தனர்.அந்நாளில் காளி என்.ரத்தினமும், சி.டி.ராஜகாந்தம் இருவரும் இணைந்த காமெடி..என்.எஸ்.கே., மதுரம் ஆகியோர்க்கு இணையாக பேசப் பட்டது.

ஆர்.பத்மா என்னும் 'லக்ஸ்' சோப்பின் அன்றைய பிரபல மாடலாகத் திகழ்ந்தவர் கதாநாயகியாக நடித்தார்.

நாயகன் பெயரும்,வேலைக்காரன் பெயரும் 'சபாபதி' என ஒன்றாய் இருப்பதை வைத்து நல்ல காமெடி செய்திருப்பர்.தமிழ் வாத்தியாராக சாரங்கபாணி நடித்திருப்பார்.இந்தப் படம் இன்றும் தொலைக்காட்சி சேனல்களில் ஒலி/ஒளி பரப்பானால் அதைப் பார்க்கும் மக்கள் அன்று அதிகம் இருப்பர்.இப்படக் காமெடி வசனங்கள் இன்றும் மாறி..மாறி வேறு படங்களில் வந்த வண்ணம் உள்ளன.

இப்படத்திற்குப் பின் படு முட்டாளானவர்களை 'சபாபதி" என்பர்.

இப்படம் மொத்தம் 40000 ரூபாயில் எடுத்து முடிக்கப் பட்ட படமாகும்.கதாநாயகன் சம்பளம் மாதம் 35 ரூபாய் ஆகும்

Thursday, December 17, 2015

நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் - 2



இத் தொடரின் ஆரம்பப் பதிவில் அடுத்த வீட்டுப் பெண் படம் பற்றி பார்த்தோம்.

இப்பதிவு மற்றொரு மிகச் சிறந்த நகைச்சுவை திரைப்படம் பற்றியது..

தமிழ்த்திரையுலகில்..இதுவரை வந்த நகைச்சுவை படங்களில் முதல் இடத்தைப் பிடிப்பது 'காதலிக்க நேரமில்லை' திரையுலக மும்மூர்த்திகளில் ஒருவராகத் திகழ்ந்த ஸ்ரீதர் கதை,வசனம்,இயக்கத்தில் அவர் சொந்த நிறுவனமான சித்ராலயா தயாரிப்பு இப்படம்.

இப்படத்தில் முத்துராமன்,பாலையா,நாகேஷ்,ஆகியோர் நடித்துள்ளனர்.ரவிச்சந்திரனின் முதல் படம்.

கதாநாயகிகளாக காஞ்சனா,ராஜஸ்ரீ ஆகியோர் நடித்திருந்தனர்.

கண்ணதாசன் பாடல்களை எழுத எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். அனைத்துப் பாடல்களும் அருமை.

என்ன பார்வை உந்தன் பார்வை' 'நெஞ்சத்தை அள்ளித் தா' உங்க பொன்னான கைகள்' அனுபவம் புதுமை' நாளாம் நாளாம் ஆகிய பாடல்கள் இனிமை என்றாலும், சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பெய்தது போன்ற இனிமை..'விஸ்வநாதன் வேலை வேணும்' பாடலும், சீர்காழி கோவிந்த ராஜன் பாடிய 'காதலிக்க நேரமில்லை' பாடலும்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசை.பி.பி.ஸ்ரீநிவாஸ்,ஜேசுதாஸ்,சுசீலா ஆகியோர் கலக்கியிருப்பார்கள்

இப்படம் வெள்ளிவிழா கண்டது.இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது.

.நாகேஷ், பாலையா பற்றி குறிப்பிடாவிடின்..இந்த இடுகை முற்று பெறாததாகவே இருக்கும்.

இருவர் நடிப்பும் அருமை.குறிப்பாக நாகேஷ் தான் எடுக்கப் போகும் படத்தின் கதையை பாலையாயிடம் கூறும் இடம்..உம்மணாமூஞ்சிகளையும் வாய் விட்டு சிரிக்க வைக்கும்.
இப்படிப்பட்ட நகைச்சுவைப் படம் ஒன்று மீண்டும் தமிழில் வருமா?

காலம்தான் பதில் சொல்லும்.

Tuesday, December 15, 2015

நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள்



தமிழில் முழுநீள நகைச்சுவை படங்கள் எனக் கணக்கெடுத்தால்...இருகைவிரல்களில் அடக்கிவிடலாம்.

அப்படிப்பட்ட சில படங்கள் குறித்துப் பார்ப்போம்

முதலாவதாக...மறக்கமுடியாத படம், அஞ்சலி பிக்சர்ஸ் 'அடுத்த வீட்டுப் பெண்'

1960ஆம் ஆண்டு இப்படம் வந்தது.டி.ஆர்.ராமச்சந்திரன்,தங்கவேலு,சாரங்கபாணி,ஃப்ரண்ட் ராமசாமி.ஏ.கருணாநிதி..ஆகிய சிரிப்பு நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தனர்.அஞ்சலிதேவி கதாநாயகியாய் நடித்ததுடன்..இப்படத்தின் தயாரிப்பாளராயும் இருந்தார்.படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆகியும்..இன்றும் பார்த்தால் ரசிக்கவைக்கும் படம்.

கதாநாயகன்..அடுத்த வீட்டுப் பெண்ணை காதலிக்கும் படம்.அவளைக் கவர தான் ஒரு பாடகன் என்று சொல்லி..தான் வாயை அசைக்க..நண்பனை பாட வைக்கும் யுக்தி முதலில் இப்படத்திலேயே காட்டப்பட்டது.பின்னாளில் இதே போன்ற காட்சி பல படங்களில் காபி அடிக்கப்பட்டது.

ஆதி நாராயண ராவ் இசையில்..தஞ்சை ராமையாதாஸ் எழுதியிருந்த அனைத்துப் பாடல்களும் அருமை.

பி.சுசீலா பாடிய, 'கன்னித் தமிழ் மனம் வீசுதடி' 'மலர்க்கொடி நானே' ஆகியபாடல்களும்

பி.பி.எஸ்.பாடிய, 'மாலையில் மலர்ச் சோலையில்' வாடாத புஷ்பமே' ஆகிய பாடல்கள் தேனாய் இனிப்பவை.

'கண்ணாலே பேசி..பேசி' என்ற பாடலில் ராமையாதாஸ் சொல் விளையாட்டு விளையாடி இருப்பார்..
கொல்லாதே..செல்லாதே,துள்ளாதே
வாடுதே,ஓடுதே,ஆடுதே
அழகிலே,நினைவிலே,மலரிலே,வலையிலே
என்றெல்லாம்..அருமை..அருமை..

இப்படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் வந்து மாபெரும் வெற்றி பெற்றது.

இயக்குநர் வேதாந்தம் ராகவையா..

இன்று நகைச்சுவை படம் எடுக்க நினைக்கும்..தயாரிப்பாளர்கள் கதை வேண்டி நின்றால்..இப்படத்தை ரீமேக் செய்யலாம்.அப்படி ரீமேக்கில் வந்தாலும் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் என நிச்சயம் சொல்வேன்.

அடுத்த இடுகையில் வேறொரு நகைச்சுவை படம் பற்றி பார்ப்போம்.

Sunday, December 13, 2015

தலைவர் போகாத சிறை



1)நான் கடைசியா எழுதிய புத்தகத்தை படித்து விட்டீர்களா?
உங்கள் ஒவ்வொரு புத்தகத்தையும் படித்ததும் , இது அப்படித்தான் இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்..ஆனால் எண்ணம் நிறைவேறவில்லையே

2)அந்த எழுத்தாளரின் நாலாவது படைப்பு சிம்ப்ளி சூபர்ப்
அப்படியா..அந்த புத்தகம் பெயர்..
நான் அவரது நாலாவது பெண் சுஜாதாவைச் சொன்னேன்

3)தலைவர்- (மேடையில்) நம் நாட்டில் எத்தனையோ சிறைச்சாலைகள் உள்ளன.ஆனால் நானோ என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ இது வரை ஒரு சிறைச்சாலைக்கு போனது இல்லை
தொண்டர்-போகாத அந்த ஒரு சிறைச்சாலை எது தலைவா?

4)உங்க உடம்பை முழுதும் சோதனை பண்ணியாச்சு...நோய்க்கான காரணம் தெரியலை..ஆமாம்..புகையிலை போடற பழக்கம் உண்டா?
அஞ்சாறு ஏக்கரிலே போட்டிருக்கேன்..

5)அந்த டைலர் கிட்ட எதைக் கொடுத்தாலும் பிடிக்கிற மாதிரி தைத்துடறார்..அதற்குத் தான் சண்டை போட்டுட்டு வரேன்..
 பிடிச்சா மகிழ்ச்சி அல்லவா அடையணும்..ஏன் சண்டை போடறே!

Friday, December 11, 2015

மனிதரில் இத்தனை வகையா!!!!!



மனிதர்கள் பலவிதம்..ஒருவர் போல ஒருவர் இருப்பதில்லை.சிலர் பேசிக்கொண்டே இருப்பார்கள்.சிலர்..தேர்ந்தெடுத்து சொற்களை வெளியிடுவார்கள்.ஒரு சிலரோ...வாயைத் திறந்தாலே..முத்து உதிர்ந்துவிடும் போல எண்ணி வாயைத் திறக்க மாட்டார்கள்.

என் நண்பர் ஒருவர்..பெயர் வேண்டாமே..எதிலும் குறை சொல்பவராகவே இருப்பார்.நண்பர்கள் பற்றியோ..அரசியல் பற்றியோ பேசும் போது..எளிதில் உணர்ச்சி வசப்பட்டு..கடுமையாக தாக்கிப் பேசுவார்.இதனால்..நண்பர்கள் இவரை விட்டு..அவ்வப்போது விலகுவர்.

வேறு ஒரு நண்பர்..இவர் பத்திரிகைகளில் அரசியல் விமரிசகர்.அவரிடம்..'உன்னால் எப்படி..குடைந்து..குடைந்து பார்த்து அரசியல்வாதிகள் பற்றி எழுத முடிகிறது?'என்றபோது, அவர்..'நான் வக்கீலுக்கு படித்தவன்..அதனால் ஓட்டை எங்கு என்று அறிந்துக் கொள்ளமுடியும்.அதனால் அவர்கள் குறைகளை..கண்டுபிடிப்பது எளிதாய் இருக்கிறது..ஆகவே..அவர்களுடன் நான் புத்திசாலியாக இருக்கிறேன்'(?!) என்றார்.

சில நண்பர்கள்..தங்கள் சுய லாபத்திற்காக பழகுவர்.அவர்கள் நினைத்த காரியம் முடிந்ததும்..நம்மை கழட்டி விட்டு விடுவார்கள்.

சிலர் எப்போதும் ..விரக்தியாகவே..இருப்பார்கள்.இவர்கள் வாயைத்திறந்தாலே..'எல்லாம் மோசம்..நாடு பாழாகிக் கொண்டிருக்கிறது.நாட்டை யாரும் காப்பாற்ற முடியாது' என்று பேசுவார்கள்.

வேறு சிலர்..தான் தவறு செய்தாலும்..அதை மறைத்து பழியை பிறர் மீது போடுவார்கள்.இவர்கள் தங்கள் காரியத்தை சாதிக்க..பிறரை பலிகடா ஆக்கவும் தயங்க மாட்டார்கள்.

ஒரு சிலர்..பழகவே..கூச்சப் படுவர்.சிலரோ..எதோ பறிகொடுத்தாற்போல சோகத்திலேயே இருப்பர்.சிலர் வேலை செய்யாமலேயே..நெளுவெடுப்பர்.சிலர் பயந்த சுபாவத்துடன் இருப்பர்.

இதையெல்லாம் எப்படி போக்குவது...நண்பர்கள் உயிர் காப்பான் என்பார்களே..அது பொய்யா?

மனோபாவம்....இதை மாற்றிக் கொண்டால்..நம் குணங்களும் மாறும்.ஒருவரின் மனோபாவம்.. மற்றவர்களை குறை சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.நாளாக..ஆக..எதிலும் எல்லாவற்றிலும் குறை காண்பது என்ற வழக்கம் ஏற்பட்டு விடுகிறது.

பின் அதுவே..நாம் செய்யும் செயல்களைத் தூண்டுகிறது.இவற்றிலிருந்து ஒருவனால் மீண்டு வரமுடியுமா? கண்டிப்பாக முடியும்...

வெற்றியும்...தோல்வியும்..பயமும்..தைர்யமும்..சோகமும்..இன்பமும்..நாம் நம் மனதை எப்படி பழக்கப்படுத்திக் கொள்கிறோமோ..அப்படியே அமையும்.எதிலும் சந்தோஷம்,துணிவு,வெற்றி காண மனதை மாற்றிக்கொள்ளுங்கள்.

ஒரு காரியத்தில்..வெற்றி அடைய வேண்டும் என்பவர்கள்..எதிலும் நல்லதையே பார்க்கிறார்கள்.எந்த காரியத்தையும் முடிக்க முடியும் என எண்ணுகிறார்கள்.இவர்கள் சிறிய..சிறிய காரியங்களாக எடுத்து..அதில் சாதனை புரிந்து..வெற்றி மனோபாவத்தை வலிமைப்படுத்துகிறார்கள்.

வெற்றியடைபவர்கள்..கருங்கல்லை..கருங்கல்லாய் பார்ப்பதில்லை.ஒரு சிற்பமாக பார்ப்பார்கள்.

வெற்றிகாண விரும்புபவர்கள்..வாய்ப்பை எதிர் நோக்கிக்கொண்டிருப்பர்.

ஆரம்ப தோல்வி கண்டு மனதளர்ச்சி வேண்டாம்.தோல்வி இல்லா மனிதன் இல்லை.தோல்வி ஒரு பாடம்..தோல்வி ஒரு அனுபவம்.அடுத்த முறை வெல்வேன் என தோல்வியடைவோர் எண்ண வேண்டும்.

உங்கள் மனோபாவம்தான் வெற்றிக்கான பாதை.நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.அதை பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.எதிலும் வெற்றி..எதிலும் வாய்ப்பு..எக்கஷ்டம்
வந்தாலும் மீளுதல்..இதுவே நம் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

இந்த மனோபாவம் என்னும் தோழன்தான் உங்களுடன்..உங்கள் மனம் இயங்கும் வரை..உணர்ச்சி துடிப்புகள் அடங்கும் வரை..இருக்கப் போகிறவன்.

அவன்தான் உங்கள் தோழன்.

அவன்தான் உங்கள் உயிர் காக்கும் தோழன்.

Wednesday, December 9, 2015

கணையாழி கடைசிப் பக்கங்கள் _ சுஜாதா


தில்லி மிருகக்காட்சிசாலையிலிருந்து இரண்டு சிங்கங்கள் தப்பித்துச் சென்றன

சில மாதங்கள் கழித்து யமுனை நதிக்கரையில் அவை மீண்டும் சந்தித்துக்கொண்டன.ஒரு சிங்கம் மிக ஒல்லியாக ஒடிந்து புல்லிலும், கல்லிலும் தடுக்கிக்கொண்டிருந்தது.
மற்றது புஷ்டியாக இருந்தது.அது, "நண்பா, ஏன் இப்படி இளைத்து விட்டாய்" என்று கேட்டது.

"என்ன செய்வது! எனக்குச் சாமர்த்தியம் போதவில்லை.பகலெல்லாம் பதுங்கி இரவெல்லாம் அலைந்தேன்.ஆகாரம் ஏதும் அகப்படவில்லை.வேட்டையாடும் சாமர்த்தியம் எனக்கு மறந்துவிட்டது.நீ மட்டும் எப்படி இவ்வளவு புஷ்டியாக இருக்கிறாய்?" என்றது

"பைத்தியமே! ரொம்ப சிம்பிள்.செகரடேரியட் போய் இரவோடு இரவாக ஃபைல்களுக்குப் பின் ஒளிந்து கொண்டேன்.அவ்வப்போது ஒரு அண்டர் செக்ரட்டரி , ஒரு டெபுடி செக்ரட்டரி என்று அந்தப் பக்கம் செல்பவர்களை இழுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.ஒருவரும் கவனிக்கவில்லை"

"பின் ஏன் அந்த சுகத்தை விட்டு வந்துவிட்டாய்?"

"கடைசியில் ஒரு தப்புப் பண்ணிவிட்டேன்.டீ கொண்டுவரும் பையன் ஒருவனை ஒருநாள் சாப்பிட்டுவிட்டேன். உடனே கண்டுபிடித்துவிட்டார்கள்"

Sunday, November 29, 2015

பயனில சொல்பவன்



அவன் வேலைசெய்யும் நிறுவனம் பெரியது.ஆனாலும் நான் இல்லாவிடில் அந்த நிறுவனமே இயங்காது..என்பான்.
ஏதேனும் விவரம் அவனைக் கேட்டால்..அதற்கு பதில் சொல்வதற்கு..தேவையில்லாமல் ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு..நாம் கேட்ட விவரத்தை சரியாக சொல்ல மாட்டான்.
தான் அதி புத்திசாலி..மற்றவர்கள் முட்டாள்கள் என்பது அவன் எண்ணம்.
ஒருமுறை அவன் வேலைசெய்யும் நிறுவனத்தின் அதிபர்..ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து..நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய பணத்திற்கான காசோலையை வாங்கிவரச் சொல்லி அவனை அனுப்பினார்.அவனும்..பயனில்லாமல்..தேவையில்லா இடங்களுக்கு எல்லாம் சென்றுவிட்டு..அந்த வாடிக்கையாளர் இருப்பிடம் சேர்ந்த போது..அவர் நீண்ட நேரம் இவனுக்காகக் காத்திருந்துவிட்டு வெளிநாட்டிற்குக் கிளம்பிவிட்டார்.
நிறுவன அதிபர் இவனை நீ எப்போது அங்குப் போனாய்? என்றார்.
இவனும் நேரத்தைச் சொன்னான்.
நான் உன்னைக் காலையிலேயே போகச் சொன்னேனே..என்றவரிடம்..இவன் ஊர் சுத்திய உண்மையைக் கூற முடியுமா? அதனால்..
"அது சார்..காலைலேயே கிளம்பினேனா..அண்ணா சாலையில் ஒரு அரசியல் கட்சி ஊர்வலம்..டிராஃபிக்ல மாட்டிக் கிட்டேன்.அங்கிருந்துத் தப்பி ராயப்பேட்டை போனேனா அங்கு ஒரு ஆக்ஸிடெண்ட்..டிராஃபிக் திருப்பி விட்டாங்க..மந்தவெளிக்கு ராஜா அண்ணாமலைபுரம் வழியா வந்து சேர்ந்தேன்.." இப்படி சொல்லிக் கோண்டே போனான்..
எது எப்படியோ..நிறுவனத்திற்கு வர வேண்டிய பணம் வரவில்லை.அந்தக் கோபத்தில் இருந்த அதிகாரி..இவனது பயனற்ற சொற்களை கெட்க விரும்பவில்லை.அவனை ஒரு உபயோகமற்றவன் என்று முடிவெடுத்தார்.
அவன் அவரது வெறுப்பை சம்பாதித்துக் கொண்டான்.

சொன்னக் காரியத்தை முடிக்காமல் பயனற்றவற்றைகளைப் பற்றி ஒருவன் பேசிக் கொண்டிருப்பானாயின் அது அவனையே பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.

நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை

தவிர்த்து..பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவனை எல்லோரும் இகழ்வர்

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்

Saturday, November 28, 2015

வள்ளுவரும்...இன்பத்துப்பாலும்



உனதழகு

வாட்டுது
என்னை

வண்ண
மயிலாள்

உனைக்
காணின்

மயங்கா
மனமும்

மயங்கிடும்
எனில்

நான்
எம்மாட்டு

இது
சாதாரணன் எழுதுவது...

இதைத்தான்
வள்ளுவன் இன்பத்துப் பாலில் முதல் அதிகாரமான தகை அணங்குறுத்தல் அதிகாரத்தில் முதல் குறளில் சொல்லியுள்ளார்.


அணங்குகொல் ஆய்மயில்  கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு

(எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ!! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்)

Friday, November 27, 2015

கொஞ்சி விளையாடும் தமிழ்



நண்பர் ஒருவர் நம்மை 5 மணிக்கு சந்திப்பதாகச் சொல்கிறார்..ஒரு முக்கிய விஷயம் குறித்து பேச..ஆனால் 5-15 ஆகியும் அவர் வரவில்லை..பின் அவர் வருகிறார்.உடன் நாம் என்ன சொல்வோம்,,"ஏன் 15 மணித்துளி தாமதம்..ஒவ்வொரு மணித்துளியும் ஒரு யுகமாய் கழிந்தது' என்கிறோம்..

எதையோ எதிர்ப்பார்த்து காத்திருக்கையில்.. நேரம் போகாது..கடிகாரம் மெல்ல ஓடுவது போல இருக்கும்..

காதலன் காதலியை 6 மணிக்கு கடற்கரையில் சந்திப்பதாகக் கூறுகிறான்..காதலி வந்து வழக்கமான இடத்தில் அமர்கிறாள்.காதலன் வரக் காணோம். போவோர்,வருவோர் எல்லாம் அவளை ஒரு மாதிரி பார்த்துப் போகிறார்கள்...அவளுக்கு சங்கடமாய் இருக்கிறது..காதலன் 6-10க்கு வருகிறான்.."சாரி..டியர்..டிராஃபிக் அதிகம்..அதுதான்..'என்கிறான்..

காதலிக்கு கோபம் வருகிறது,,'உங்களுக்கென்ன ஏதோ ஒரு சாக்கு..ஆனால் இங்கு காத்திருக்கும் எனக்கல்லவா..தர்மசங்கடம்..போவோர் வருவோர் பார்வையிலிருந்து தப்ப முடியவில்லை..10 நிமிடங்கள் கடப்பது பத்து மணிநேரம் கடந்தாற் போல் இருக்கிறது' என அவனிடம் ஊடல் கொள்கிறாள்

இது இன்று..நேற்றல்ல..அன்றிலிருந்து எப்போதும் நடப்பதுதான்..என்பதை குறுந்தொகையில் இந்த பாடல் மூலம் புலப்படுகிறது.

தலைவன் மறுநாள் காலை வருவதாக முதல்நாள் செய்தி வருகிறது.பகல் நேரத்தைக் கூட அவள் கடந்து விட்டாள்..ஆனல் இரவைக் கடப்பது என்பது கடலைக் கடப்பதைவிட பெரிதாக இருக்கும் போலிருக்கிறதாம்..என் உயிர் போவதற்குள்..'கடந்து விட முடியுமா?' என்கிறாள்.



எல்லை கழிய முல்லை மலர

கதிர்சினந் தணிந்த கையறு மாலை

உயிர்வரம்பு ஆக நீந்தின மாயின்

எவன் கொல்? வாழி தோழி!

கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!!



-கங்குல வெள்ளத்தார் - முல்லைத் திணை-387

பகலின் எல்லை முடிந்து..முல்லைப் பூக்கள் மலரத் தொடங்கிவிட்ட மாலை நேரம்.சூரியனின் சினம் தணிந்து வரும் இரவு நேரம்.இதை என் உயிர் போவதற்கு முன்னால் நீந்தி கடந்து விட முடியுமா? தோழி என்கிறாள்.இரவு வெள்ளம் கடலை விட பெரிதாக இருக்கிறதாம்..

அதாவது தலைவன் வரும் முன்னர் இரவை கடப்பது ..இரவு நீண்டுக் கொண்டேப் போகிறதாம்..அதற்குள் அவள் உயிர் போய்விடுமா? என்கிறாள்.

காத்திருப்பது சுகம் என்றாலும்..காத்திருக்கும் நேரம் நீண்டுக் கொண்டிருந்தால்..

அந்த துயரத்தின் வெளிபாட்டையே இந்த குறுந்தொகை பாடல் சொல்கிறது.

கங்குல் வெள்ளம்.என்பது .இரவு வெள்ளம்..

Thursday, November 26, 2015

வள்ளூவரும்...கண்ணழகும்-1


கயல்விழி,மான்விழி,குவளைக் கண் என கண்களைப் பாடாத கவிஞனே இல்லை எனலாம்.
காதல் ஏற்பட கண் பிரதான உறுப்பாய் அமைந்து விடுகிறது.காதலுக்கு கண்ணில்லை,கண்டதும் காதல் என்றெல்லாம் சொல்லப் படுகிறது.

கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே..கண்கள் இரண்டும் உன்னைத் தேடுதே..கண்ணுக்குள் சிக்கிக் கொண்ட..கண்களும் கவி பாடுதே..கண்கள் இரண்டால்.. என்றெல்லாம் கவிஞர்கள் காதலுக்கும்..கண்ணிற்கும் முடிச்சுப் போட்டுள்ளார்கள். அவ்வளவு ஏன்..காதலியின் இதயத்தில் காதலன் நுழையும் வாசல் அவளின் கண்களே..என்பதை கவியரசு..'இதயத்தின் வாசல் விழியல்லவா?' என்கிறார் ஒரு பாடலில்..

இவர்களுக்கெல்லாம் முன்னோடி யார்..என்றால்..வழக்கம் போல வள்ளுவனே முன் நிற்கிறான்..கண்ணழகு பற்றி அவர் இன்பத்து பாலில் பல குறள்களில் சொல்கிறார்.முதலில் தலைவனைக் கவர்வதும்..கடைசிவரை நிற்பதும் தலைவியின் கண்ணழகே என்கிறார்.

காதலில் அடையும் ஐம்புலவின்பத்திலும் ..கண்டு, கேட்டு எனக் கண்,காது ஆகியவற்றலாகும் இன்பத்தை முதலில் குறிக்கிறார்.

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து

தலைவி வீசும் விழிவேலுக்கு எதிராக தலைவன் அவளை நோக்க..அக்கணமே அவள் பார்வை..அவள் மட்டுமே தாக்குவது போதாது என்று தானையுடன் தாக்குவது போல இருந்ததாம்.

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு

எமனைப் பற்றி தலைவன் ஏதும் அறிந்ததில்லை..ஆனால் எமன் எனப்படுபவன் பெண்ணுருவில் வந்து போர்த்தொடுக்கக் கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை தலைவியின் பார்வையால் அறிகிறானாம்.

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்

பெண்மையின் வார்ப்படமாக திகழும் தலைவியின் கண்பார்வை மட்டும் மாறுபட்டு உயிரைப் பறிப்பது போலத் தோன்றுகிறதாம்.

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்

தலைவியின் புருவம் மட்டும் கோணாமல் நேராக இருக்குமே யாயின்..அவள் கண்கள் அவனுக்கு நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யாதாம்.

இன்னுமொரு இடத்தில்..

பிணயேர் மடநோக்கும்.. என்கிறார்..பெண் மானைப் போன்று இளமைத் துள்ளும் பார்வையாம்...

Wednesday, November 25, 2015

நாராயணனால் பலமிழந்த ஹிரண்யகசபு

தன் மகன் பிரகலாதனை..'ஹிரண்யகசபுவே நம..' என்று சொல்லச் சொல்லி..அது முடியாமல்..பிரகலாதனும் 'நாராயணாய நம' என மாறி..மாறி சொன்னதால் மனம் வெறுத்து..கோபத்துடன்..'பிரகலாதா நீ சொல்லும்..அந்த நாராயணன் எங்கிருக்கிறார்' என்கிறான் ஹிரண்யகசபு..

'தந்தையே..அந்த நாராயணன்..தூணிலும் இருப்பார்..துரும்பிலும் இருப்பார்"

'அப்படியெனில் நீ சொல்லும் அந்த நாராயணன்..இந்த.. தூணில் உள்ளானா?'

ஒரு தூணைக்காட்டி ஹிரண்யன் கேட்க..'ம்''இருக்கிறார் ' என்றான் பிரகலாதன்.

ஹிரண்யன் தன் கதாயுதத்தால்..தூணை பிளக்க ..அது பிளந்து..நரசிம்மன் வெளிப்பட்டு.. ஹிரண்யனை வதம் செய்கிறார்..

ஆனால் இன்று.

ஹிரண்யன் கேட்கிறார்..'பிரகலாதா..நீ சொல்லும் நாராயணன்..இந்த தூணில் இருக்கின்றானா?'

'தந்தையே! அந்த நாராயணன்..எல்லாத் தூணிலும் இருப்பார்"

ஹிரண்யன் தன் கதாயுதத்தால்..தூணை..தாக்க..தூண் பிளக்க வில்லை..

ஹிரண்யனுக்கு ஆச்சரியம்..தான் பலம் இழந்தோமா என..

பிரகலாதன் சிரித்துக் கொண்டே சொல்கிறான்..'தந்தையே..உங்களால் தூணை உடைக்க இயலாது ஏனெனில் அதனுள் இருப்பது 'நாராயணா முறுக்கு கம்பிகள்' என்கிறான்..

@@@@@ ##### @@@@@@ ####

சந்தானத்தைப் பார்த்து..'சபாஷ்...விளம்பரம் அருமையாக எடுத்துள்ளீர்கள்..' என்றார் நாராயணா முறுக்குக் கம்பி தயாரிப்பாளர்.

தான் எடுத்த முதல் விளம்பர படம் அருமையாய் வந்ததால் அந்த வருடம் தான் விஷுவல் மீடியம் படித்து வெளிவந்த சந்தானம் மனம் மகிழ்ந்தான்.

Tuesday, November 24, 2015

கொஞ்சி விளையாடும் தமிழ்


பழி ஓரிடம்..பாவம் ஓரிடம் என்பார்கள்...
ஒருவன் ஏதேனும் தவறிழைத்து விட தண்டனையை வேறொரு அப்பாவி அனுபவிப்பான்..
அப்படிதான் கண்கள் செய்த பாவத்தை தோள்கள் அனுபவிக்கின்றன..இந்த முத்தொள்ளாயிரம் பாடலில்..
பாண்டிய மன்னன் நகர் வலம் வருகிறான்.அவனை ஒரு கன்னிப் பெண் காண்கிறாள்.உடன் அவன் மீது காதல் கொள்கிறாள்.அதன் காரணமாக பசலை படர்ந்தது அவள் உடல் முழுதும்.தன் உடலில் பசலைப் படரக் காரணம் தன் கண்களால் அவனைக் கண்டதால்தானே..ஆனால் ஒரு பாவமும் அறியா அவள் தோள்கள் அல்லவா தண்டனை பெற்றன.உண்மையில் தண்டனை பெற வேண்டியது கண்களல்லவா? இது எப்படியிருக்கிறது எனில் உழுத்தஞ் செடி வளர்ந்துள்ள வயலில் ஊரில் உள்ள கன்றுகள் நுழைந்து மேய்ந்து அழிக்க...ஆனால் அங்கிருந்த ஒன்றுமறியா கழுதையைப் பிடித்து காதை அறுத்து தண்டித்தது போல இருக்கிறதாம்.
உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்
கழுதை செவி அரிந்தாற்றால் - வழுதியைக்
கண்டநம் கண்கள் இருப்பப் பெரும் பணைத்தோள்
கொண்டன மன்னோ பசப்பு
(முத்தொள்ளாயிரம் - பாண்டிய நாடு -60)
(இப்பாடலில் கண்களை..ஊர்க்கன்று ஆகவும்...பசலை படர்ந்த தோள்களை கழுதைக்கும் ஒப்பிட்டுள்ளார் கவிஞர்.)
முத்தொள்ளாயிரப் பாடல்கள் பெரும்பாலும் கைக்கிளைக் காதலேயாகும்.

Monday, November 23, 2015

'ஆகாறு அளவிட்ட தா யினும் (ஒரு பக்கக் கட்டுரை)



நன்மை..தீமை
இரவு..பகல்
பிறப்பு-இறப்பு
இன்பம்--துன்பம்

வாழ்வில் எந்த ஒன்றிற்கும் மறுபக்கம் உண்டு.
அது உணராமல்..நம்மில் பலர்..ஆண்டவன்(?) எனக்கு மட்டும் ஏன் துன்பத்தையே கொடுக்கிறான்? என அங்கலாய்ப்பதை பார்க்கிறோம்.
யாருக்குத்தான் துன்பம் இல்லை
பணக்காரனுக்கு.துன்பம் இல்லை என நினைத்தால் அது தவறு.அவனை கேட்டுப்பாருங்கள் ..சொல்வான்..கூடை ..கூடையாய்.
பணம் இருந்து என்ன பயன் ..பணத்தையா சாப்பிடமுடியும் என்பான்.உடம்பு முழுதும் வியாதி.
இரத்த அழுத்தம்...உப்பை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார். உப்பில்லா உப்புமாவை சாப்பிடுவான்.
சர்க்கரை வியாதி...சர்க்கரையை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார்.விஷேச தினங்களில் கூட இனிப்பு சாப்பிட முடியாது.
அது மட்டு மல்ல...வாழ்நாள் முழுதும் மருந்து,மாத்திரை சாப்பிட வேண்டும்.
காரில் போய்..பீச்சிலோ..பார்க்கிலோ ..பார்க் செய்துவிட்டு..மேல் மூச்சு ..கீழ் மூச்சு வாங்க நடப்பான்..ஓடுவான்..
'ஆண்டவா..பணம் இல்லையென்றால் கூட பரவாயில்லை..உடலில் வியாதி இல்லாமல் வை" என மனதில் அழுவான்.

ஆனால்..எழைக்கோ..பணம் இல்லை என்ற குறைதான்..ஆனால் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்..வாழ்க்கையை நன்கு அனுபவிக்கலாம்.
இருந்தா நவாப்..இல்லையினா பக்கிரி.

அதனால் தான் நம் பெரியோர்கள் நோயற்ற வாழ்வே பெரும் செல்வம் என்றார்கள்
பசித்திரு என்றார்கள்.
மேலும் இறக்குமதி சரியாய் இருந்தால்..நம்மை எந்த நோயும் அணுகாது.
அதற்கு தேவை...
சோம்பலில்லா வாழ்க்கை..
உடற்பயிற்சி...
தூய மனம்...தூய எண்ணங்கள்.
மனித நேயம்...
பேராசை இல்லாமை..

வாழ்க்கைக்கு பணம் தேவை...ஆனால்..பணமே வாழ்க்கை இல்லை..என்பதை உணர்வோம்.
சிக்கனமாய் இருந்தால்..சீராய் வாழலாம்.
வரவிற்கு மேல் செலவு வேண்டாம்.

'ஆகாறு அளவிட்ட தா யினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை'
குறள் படி நடப்போம்...  ..

Sunday, November 22, 2015

வரும் தேர்தலில் திமுக முதல்வரா? அ தி மு க முதல்வரா?



பீஹார் தேர்தல் குறித்தும், அங்கு அமைந்தக் கூட்டணிக் குறித்தும், விழுந்த வாக்கு விழுக்காடு விவரங்களையும் படித்தவாறு இருந்தேன்...

எப்போது கண் அயர்ந்தேன்..தெரியவில்லை..

அப்போது....

கலைஞர், ஜெ..இருவரும் வருகின்ற தமிழக சட்டசபைத் தேர்தல் குறித்து பேசிக்கொண்டிருந்தனர்..

கலைஞர் _  ஆயிரம் வேறுபாடுகள் உண்டு நம்மிடையே..இதை உபயோகப் படுத்திக் கொண்டு அந்நியர் ஆட்சியைப் பிடிக்க விட்டுவிடக் கூடாது..

ஜெ- இந்த விஷயத்தில் நான் எண்ணியதையே...நீங்களும் கூறியுள்ளீர்கள்...என்ன செய்யலாம்?

கலைஞர்- நான் கூறினால்...அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா எனத் தெரியவில்லை..

ஜெ- நம்மிடையே விரோதத்தை உண்டாக்க பலர் முயலுகிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது.நீங்கள் அரசியல் சாணக்கியர் என்பது மறுக்க முடியாத உண்மை.நீங்கள் எது சொன்னாலும்
     அதை பரீசலிக்கிறேன்

கலைஞர்- வரும் தேர்தலில், நாம் இருவரும் கூட்டணி வைத்துக் கொள்வோம்.ஒவ்வொருவரும் 117 தொகுதிகளில் போட்டியிடுவோம்.நம்மில், யார் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெறுகிறோமோ, அவர்கள்
          கட்சி முதல்வர் பொறுப்பேற்கட்டும்.மற்றவர் துணை முதல்வர். என்ன சொல்கிறீர்கள்

.ஜெ_ அருமையான யோசனை.இதனைக் கேள்விப்படும் மற்ற கட்சியினர் கும்பி கருகட்டும்..குடல் வேகட்டும்..

கலைஞர்- நன்றி ஜெ

கலைஞர்- நன்றி என்ற பெரிய வார்த்தையெல்லாம் ஏன்..உங்கள் அன்பு சகோதரி நான்.

கலைஞர் ..ஜெ -(இருவரின் மைன்ட் வாய்ஸ்) இடத்தேர்தல் ஃபார்முலாவை..நமக்கு ஒதுக்கப்பட்ட எல்லா தொகுதியிலும் நடத்திட நமக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா..என்ன்?)


தமிழக மக்கள்- அப்பாடா...இனி இவர்களை அவர்கள், அவர்களை இவர்கள் குற்றம் சொல்லிக் கொண்டிருக்காமல் ஆட்சியை நமக்காக நடத்தட்டும்

.(இருவருக்கும் நடந்த பேச்சு வார்த்தையைக் கேட்டு..ஒருகட்சி..கோடாரியும் கையுமாக மரங்களைத் தேடிப் போக, மற்றொரு கட்சியினர்..தன் தலைவன் அடி தலைமேல் படாதிருக்க ஹெல்மெட் அணைந்து அலைய..அகில இந்தியக் கட்சிகள்..அண்டை மாநிலம் நோக்கி கூட்டணிக்கு விரைகிறார்கள்.)

Friday, October 2, 2015

முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவத்தின் துணை கொண்டு வெற்றியை காண வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்... “முடியும்’’ என்ற நம்பிக்கை முதலில் ஓவ்வொரு இந்தியனுக்கும் வேண்டும் .உறுதியும், நம்பிக்கையும் தலைமைப் பண்பும் கொண்ட நம்முடைய இளம் ஆண்களும் பெண்களும் ராணுவப்படைகளில் ஆர்வமுடன் சேர முன்வர வேண்டும் என்பது என் ஆசை. இன்றைய வேகமான அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக ராணுவத்தின் எத்தனையோ சவாலான, சுவாரஸ்யமான வேலைகள் உருவாகி வருகின்றன. இளைஞர்களுக்கு அவை பெரும் சாகசங்களாகத் திகழும்.

“கனவு காண், கனவு காண், கனவு காண்,  பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு.  சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும்.  நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி.  ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும்.  அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது.”தேர்வு முடிவுகள்தான் வாழ்க்கையில் இறுதியானது என மாணவர்கள் கருத வேண்டாம்.கடவுள் நம்முடன் இருப்பாரானால், ஒருவரும் உங்களுக்கு எதிராகச் செயல்பட முடியாது.

Tuesday, July 28, 2015

குறுந்தொகை-221




தலைவி கூற்று
(தலைவன் கூறிச்சென்ற பருவம் வந்தது கண்டு கவன்ற தலைவியை, “நீ ஆற்றியிருத்தல் வேண்டும்” என வற்புறுத்திய தோழியை நோக்கி, “முல்லை மலர்ந்தது; கார்காலம் வந்து விட்டது; அவர் வந்திலர்; யான் எங்ஙனம் ஆற்றியிருப்பேன்?” என்று தலைவி கூறியது.)

முல்லை திணை - பாடலாசிரியர் உறையூர் முதுகொற்றன்

இனி பாடல்-
 
அவரோ வாரார் முல்லையும் பூத்தன
   
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
   
பாலொடு வந்து கூழொடு பெயரும்
   
யாடுடை யிடைமகன் சென்னிச்

சூடிய வெல்லாஞ் சிறுபசு முகையே.

                     -உறையூர் முதுகொற்றன்

 

 முல்லைகளும்மலர்ந்தன; பறியோலையை உடையகையினை உடையார்,  குட்டிகளைஉடைய ஆட்டின் திரளோடு சென்று தங்க,  பாலைக் கொணர்ந்து வந்து பாற்சோற்றைப் பெற்று மீண்டு செல்கின்ற,  ஆடுகளை உடைய இடையன், தன் தலையில் அணிந்து கொண்டன யாவும், சிறிய செவ்வியை உடைய அம்முல்லையின் அரும்புகளே ஆகும்;  அத்தலைவர் இன்னும் வாராராயினர்.

     (முடிபு) முல்லையும் பூத்தன; இடைமகன் சூடியவெல்லாம்முகையே; அவர் வாரார்.

     (கருத்து) கார்ப்பருவம் வரவும் தலைவர் வந்திலர்.

     முல்லை பூத்தல் கார் காலத்திற்குஅடையாளம்.

     மாலைக் காலத்தில் ஆட்டை மேய்ப்பவர்கள் மேய்ச்சல் நிலத்தில்தங்க இடையன் பாலை வீட்டிற்குக் கொணர்ந்து கொடுத்து அவர்களுக்குப் பால் சோற்றைக் கொண்டு சென்றான். பாலை விற்கும் பொருட்டு வந்த இடையன் ஊரில் அதனை விற்று விட்டு அதற்கு விலையாக உணவுக்குரிய தானியத்தைப் பெற்றுச் சென்றானெனலும் ஒன்று. இடையர் பாலை விற்றல் வழக்கம்; அவன் செல்லும் வழியில் பூத்த முல்லைப் பூக்களைப் பறித்துத் தன் தலையில் சூடினான்.

Sunday, July 19, 2015

குறுந்தொகை-220




தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார் காலம் வரவும் அவன் வாராமையால், “தாம் வர வேண்டிய இக் காலத்தும் வந்திலர்; இனி என் செய்வேன்!” என்று தோழிக்குத் தலைவி கூறியது.)


முல்லை திணை - பாடலாசிரியர் ஓக்கூர் மாசாத்தி

இனி பாடல்-
 
பழமழைக் கலித்த புதுப்புன வரகின்
   
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
   
இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை
   
வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணிக்

குறுமுகை யவிழ்ந்த நறுமலர்ப் புறவின்
   
வண்டுசூழ் மாலையும் வாரார்
   
கண்டிசிற் றோழி பொருட்பிரிந் தோரே.


                          -ஓக்கூர் மாசாத்தி.

   

 தோழி-,  பொருள் ஈட்டி வரும் பொருட்டு நம்மை இங்கு வைத்துப் பிரிந்ததலைவர்,  பழைய மழையினால் தழைத்த, புனத்தில் உள்ள புதிய வரகினது, ஆண் மான்மேய்ந்தமையால் குறைதலை உடைய நுனியை உடையகதிர் அரிந்த தாள்,  சேர்ந்த பக்கத்தில்,  மலர்ந்த முல்லைக் கொடியினது,  காட்டுப் பூனை சிரித்தாற் போன்ற தோற்றத்தைஉடைய, செவ்விப் பூவின்மெல்லிய பொதிதலை உடைய சிறிய அரும்புகள், மலர்ந்த, நறிய மலர்களை உடையமுல்லை நிலத்தில்,  வண்டுகள்அம் மலரை ஊதும் பொருட்டுச் சுற்றுகின்ற மாலைக்காலத்திலும் வாராராயினார்,  இதனைக் கருதுவாயாக.



     (கருத்து) தலைவர் தாம் கூறிச் சென்ற பருவம் வந்தும் வந்திலர்.

Friday, July 17, 2015

குறுந்தொகை-219





தலைவி கூற்று

(தலைவன் சிறைப்புறத்தில் இருப்பத் தலைவி தோழிக்குக் கூறுவாளாய்த் தன் துயரின் மிகுதி கூறி, “தலைவர் நம் துயர் நீக்க இதுசெவ்வி” என்று உணர்த்தியது.)


நெய்தல் திணை - பாடலாசிரியர் வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்

இனி பாடல்-


பயப்பென் மேனி யதுவே நயப்பவர்
   
நாரி னெஞ்சத் தாரிடை யதுவே
   
செறிவுஞ் சேணிகந் தன்றே யறிவே
   
ஆங்கட் செல்க மெழுகென வீங்கே

வல்லா கூறி யிருக்கு முள்ளிலைத்
   
தடவுநிலைத் தாழைச் சேர்ப்பர்க்
   
கிடமற் றோழியெந் நீரிரோ வெனினே.


                              -வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்


    தோழி--, பசலையானது எனது மேனியின் கண்ணது;  காதல் அவரது அன்பற்றநெஞ்சமாகிய செல்லுதற்கரிய இடத்தின்கண்ணது; எனது அடக்கமும்,  நெடுந்தூரத்தில்.நீங்கியது;  எனது அறிவு,  தலைவர் உள்ள இடத்திற்கே செல்வேம் அதன்பொருட்டு எழுவாயாக என்று, நம்மால் மாட்டாதவற்றைக் கூறி இங்கே தங்கி இருக்கும்; எந்தத் தன்மையில் உள்ளீரோ என்றுபரிவு கூர்ந்து வினாவிக் குறைதீர்ப்பராயின், முள் அமைந்த இலையை உடைய, பருத்த அடியை உடைய தாழையை உடையகடற்கரைத் தலைவருக்கு,  இது தக்க செவ்வியாகும்.



     (கருத்து) தலைவர் வரைவதற்கு ஏற்ற சமயம் இது.

     (வி-ரை.) பகற்குறிக்கண் நிகழும் இடையீட்டால் வருந்திய தலைவி,தலைவன் வரைந்து கோடலை விரும்பிக் கூறியது இது. இதன்கண் தன்நிலையைப் புலப்படுத்தி, இது நீங்குதற்குரிய செவ்வி இதுவென்றுதலைவன் உணரும்படி கூறினாள், அவன் அதனை உணர்ந்து விரைவில் வரைந்து கொள்வான் என்பது கருதி.

Wednesday, July 15, 2015

குறுந்தொகை-218



தலைவி கூற்று
(பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழியை நோக்கி, “தலைவர்நம் உயிர்க்கு உயிர் போன்றவர்; அவரைப் பிரிந்து கணப்போதும்பொருந்தும் வன்மையிலேம்; இத்தகைய நம்மை அவர் மறந்து ஆண்டேஇருப்பாராயின் அவர் பொருட்டுக் கடவுளைப் பராவுதலும் நிமித்தம்பார்த்தலும் என்ன பயனைத் தரும்?” என்று தலைவி கூறியது.)


பாலை திணை - பாடலாசிரியர் கொற்றன்

இனி பாடல் -


விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்
   
கடனும் பூணாங் கைந்நூல் யாவாம்
 
புள்ளு மோராம் விரிச்சியு நில்லாம்
 
உள்ளலு முள்ளா மன்றே தோழி

உயிர்க்குயி ரன்ன ராகலிற் றம்மின்
   
றிமைப்புவரை யமையா நம்வயின்
   
மறந்தாண் டமைதல் வல்லியோர் மாட்டே.


                          -கொற்றன்



 தோழி-, நம் உயிருக்கு உயிரைப் போன்றவராதலின், தம்மை யின்றி,  இமைப் பொழுது அளவேனும், பிரிந்திருத்தலைப் பொருந்தாத,  நம்மை, மறந்து விட்டுத் தாம் சென்ற அவ்விடத்தே தங்குதலில்வல்ல தலைவர் திறத்தில்,  பிளப்பையும் குகைகளையும் உடைய மலைப் பக்கத்தில்  வெற்றி பொருந்திய துர்க்கைக்கு, பலிக் கடன் கழித்தலைச் செய்வோம்; கையில் காப்பு நூலைக் கட்டோம் நிமித்தத்தையும் பாரோம்; நற் சொல்லைக் கேட்டற்குச் சென்று நில்லோம்; நினைத்தலையும் செய்யோம்.


     (கருத்து) நம் அன்பு நிலை தெரிந்து விரைந்து வருதல் தலைவர் கடமையாகும்/

 
     ‘ஒருகணப் பொழுதேனும் அவரைப் பிரிந்து அமையேமாகிய நம்மைப் பிரிந்து, தாம் சென்ற இடத்தே நம்மை மறந்து இருக்கும் மனவலியை உடையர் தலைவர். அவர் நம் உயிருக்கு உயிர் போன்றவராதலின், நம் நிலையை உணர்ந்து விரைவில் வரும் கடப்பாடுடையர். அங்ஙனம் அவர் செய்யாராயின் நாம் கடவுளை வழிபட்டுப் பயன் என்?' என்று தலைவி கூறினாள்.

Tuesday, July 14, 2015

குறுந்தொகை-217



தோழி கூற்று
(‘பகற் குறியும் இரவுக் குறியும் இப்பொழுது பொருந்தா; என்செய்வேம்!’ என்றதற்குத் தலைவன் உடன்போக்கை எண்ணிவெய்துயிர்த்தான்; அது நன்றேயென நான் கூறினேன்” எனத் தோழிதலைமகளுக்குக் கூறி உடன்போக்கை நயக்கச் செய்தது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் தங்கால் முடக்கொல்லனார்


இனி பாடல்


தினைகிளி கடிகெனிற் பகலு மொல்லும்
   
இரவுநீ வருதலி னூறு மஞ்சுவல்
   
யாங்குச்செய் வாமெம் மிடும்பை நோய்க்கென
   
ஆங்கியான் கூறிய வனைத்திற்குப் பிறிதுசெத்

தோங்குமலை நாட னுயிர்த்தோன் மன்ற
   
ஐதே காமம் யானே
   
கழிமுதுக் குறைமையும் பழியுமென் றிசினே.


                        -தங்கால் முடக்கொல்லனார்

   

 தினையின்கண் படியும்கிளிகளை ஓட்டுவீர்களாக என்று கூறி எம் தாய் எம்மைப்போதரவிடின், பகற்காலம் நின்னோடுஅளவளாவுதற்குப் பொருந்தும், அங்ஙனம் இன்மையின்,இராக் காலத்து நீ வருதலினால்,  வழியின்கண் நேரும் துன்பங்களுக்கு அஞ்சுவேன்,  துன்பத்தைத் தரும் எமதுகாமநோயை நீக்குதற்கு, எவ்வாறுபரிகாரம் செய்வேம், என்று அவ்வாறு யான் சொன்ன அதற்கு,  உயர்ந்த மலை நாட்டை உடைய தலைவன்,வேறு ஒன்றை நினைத்து,அந்நினைவினால் வெய்துயிர்த்தான்;  காமநோய் நுண்ணியது; அவனது குறிப்பை உணர்ந்தயான், நீ நினைத்தவாறு செய்தல்மிக்க அறிவுடைமையும், பழிக்குக் காரணமும்ஆம், என்றேன்.


 
கருத்து - தலைவன் நின்னை உடன் அழைத்துச் செல்ல விரும்புகின்றான்.


பொருள் எளிய நடையில்-
     ‘இப்பொழுது தினை காவலை ஒழிந்தேமாதலின் பகற்குறி வாயாது; இரவுக் குறியோ ஆற்றூறஞ்சும் நிலையினது; ஆதலின் அதனையும் விரும்பேம். இந்நிலையில் யாது செய்வேம்!’ எனக் கவன்றேன். அதற்குரிய பரிகாரம் ஒன்றை நினைந்த தலைவன் அதனை வாய்விட்டுக் கூற அஞ்சிப் பெருமூச்சு விட்டான். காமம் எவ்வளவு நுண்ணியது! யான் அவன் குறிப்பை உணர்ந்தேன். அவன் நினைந்ததே தக்க விரகாகத் தோற்றியது. ‘நீ நினைந்தது அறிவுடைமையே ஆகும்; ஆயினும் ஊரினர் பழி கூறுதற்கு இடமாம்’ என்றேன்” என்று தோழி கூறினாள். இதனால் தலைவன் உடன்போக்கு நயக்கின்றான் என்பதையும், அதனையன்றி வேறு பரிகாரம் இல்லை என்பதையும், அங்ஙனம் செய்தலே அறிவுடைமைக்கு ஏற்றது என்பதையும், பழிக்கு அஞ்சி அறிவுடைய செயலை விலக்குதல் தகாது என்பதையும் புலப்படுத்தித் தலைவியை உடம்படச் செய்தாள்.(தோழி)

Wednesday, May 27, 2015

குறுந்தொகை-216



தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப் பருவம் வந்ததாகத் தலைவி ஆற்றாளெனக் கவலையுற்ற தோழியை நோக்கி, “அவர் பொருள் தேடச்சென்றார். நான் அவரை நினைந்து வருந்துகின்றேன். கார்ப்பருவமும்வந்து விட்டது; இனி என் உயிர் நில்லாது போலும்!” என்று தலைவிகூறியது.)


பாலை திணை - பாடலாசிரியர் கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்

இனி பாடல்-

அவரே, கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை
   
வாடா வள்ளியங் காடிறந் தோரே
   
யானே, தோடா ரெல்வளை நெகிழ வேங்கிப
   
பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே

அன்ன ளளிய ளென்னாது மாமழை
   
இன்னும் பெய்ய முழங்கி
   
மின்னுந் தோழியென் னின்னுயிர் குறித்தே.


                      -கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்.

 

 தோழி, தலைவர், கேடில்லாத உயர்ந்த செல்வத்தை, கொணரும் பொருட்டு, பச்சை இலைகளை உடைய வாடாத வள்ளிக்கொடி படர்ந்த காட்டைக் கடந்து சென்றார்; நான்--,  தொகுதியார்ந்த விளக்கத்தைஉடைய வளைகள் நெகிழும்படி,  கவலையுற்று, படுக்கையின் கண் வீழ்ந்து,  துன்பம் மிக்கேன்;  இவள் இரங்கத் தக்காள், என்று எண்ணாமல், மாமழை இன்னும்மழையைப் பெய்யும் பொருட்டு முழக்கம் செய்து,  எனது இனிய உயிரைக் கொள்ளுதலைக்குறித்து,  மின்னா நின்றது.

.

    (கருத்து) கார்காலம் வந்தும் தலைவன் வராததால் நான் துன்புறு வேனாயினேன்.

   

Friday, May 22, 2015

குறுந்தொகை-215



தோழி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில் வருந்திய தலைவியை நோக்கி,“உன்னுடைய துன்பம் நீங்கும்; தலைவர் இன்று வந்து விடுவார்” என்று தோழி உறுதி கூறியது.)


பாலை திணை- பாடலாசிரியர் மதுரையளக்கர் ஞாழர்  மகனார் மள்ளனார்

இனி பாடல்-

 
படரும் பைபயப் பெயருஞ் சுடரும்
   
என்றூழ் மாமலை மறையு மின்றவர்
   
வருவர்கொல் வாழிதோழி நீரில்
   
வறுங்கயந் துழைஇய விலங்குமருப் பியானை

குறும்பொறை மருங்கி னமர்துணை தழீஇக்
   
கொடுவரி யிரும்புலி காக்கும்
   
நெடுவரை மருங்கிற் சுரனிறந் தோரே.

                      -மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்



    துன்பமும் மெல்ல மெல்ல நீங்கும்;  ஒளி விடுகின்றசூரியன்,  பெரிய அத்தகிரியின் கண்மறையா நின்றது; ஆதலின், நீர் இல்லாத வறிய குளத்தைத் துழாவிய, விளங்கிய கொம்புகளை உடைய ஆண் யானைகள் ,குறிய குண்டுக் கற்களுக்கு அருகில், தாம் விரும்புகின்ற பிடிகளைத் தழுவி,வளைந்த கோடுகளை உடைய பெரியபுலி தாக்குதலினின்றும், பாதுகாக்கின்ற,  உயர்ந்த மலைப் பக்கத்தில் உள்ள,  பாலை நிலத்தைக் கடந்து சென்றோராகிய, தலைவர், இன்று வருவர். நீ வாழ்வாயாக!


    (கருத்து)தலைவர் இன்று வருவர்.

    

Wednesday, May 20, 2015

குறுந்தொகை-214



காதலனைப் பிரிந்த காதலி ,பித்துப் பிடித்த நிலையில் இருக்கிறாள்.இதை அறியாத அவளது தாய் இது தெய்வக் குற்றம்.என எண்ணி அந்த முருகனுக்கு வேண்டுதலால் பயன் ஏது (வெறியாடுதல்...என்றால் ஆண்டவனை வேண்டி மாலையிடுதல் எனக் கொள்ளலாம்)

தோழி கூற்று
(தலைவியின் வேறுபாடு கண்டு தாய் முதலியோர் வெறி யாட்டெடுத்த இடத்து, “இவளுக்குத் தழையுடையுதவி அன்பு செய்தான் ஒருவன் இருப்ப, அதனை அறியாது இது முருகனால் வந்தது என மயங்கி வெறியெடுப்பதனால் பயனில்லை” என்று தோழி கூறி உண்மையை வெளிப்படுத்தியது.)


குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கூடலூர் கொழார்

இனி பாடல்-

மரங்கொல் கானவன் புனந்துளர்ந்து வித்திய
 
பிறங்குகுர லிறடி காக்கும் புறந்தாழ்
 
அஞ்சி லோதி யசையியற் கொடிச்சி
 
திருந்திழை யல்குற்குப் பெருந்தழை யுதவிச்

செயலை முழுமுத லொழிய வயல
 
தரலை மாலை சூட்டி
 
ஏமுற் றன்றிவ் வழுங்க லூரே.


                    -கூடலூர் கிழார்.

’.

 மரங்களை வெட்டியகுறவன்,  கொல்லையை உழுதுவிதைத்த, விளங்குகின்ற கதிரைஉடைய தினையை,  காவல் செய்யும்,  புறத்தின் கண்ணே தாழ்ந்த அழகிய சிலவாகியகூந்தலையும், மெலிந்த சாயலையும் உடைய, தலைவியினது,  செவ்விதாகஅமைத்த ஆபரணத்தை அணிந்த,  பெரிய தழையாகிய உடையை அளித்து, அசோகினது பெருத்த அடி மரம் ஒழிந்துநிற்ப, அதனோடு தொடர்பு இன்றி அயலதாய்நின்ற,  அலரி மாலையை முருகனுக்குச்சூட்டி வெறியெடுத்து, இந்த ஆரவாரத்தைஉடைய ஊரானது,  மயக்க முற்றது.



    (கருத்து) தலைவிக்குத் தழையுடை அளித்த அன்பன் ஒருவன்உளன்.


 வெறியாடுவார் அரலை மாலையை முருகக் கடவுளுக்குச் சூட்டுதல்வழக்கம்  அரலை என்பது இப்போது அரளி என வழங்கும்.

 
    இதனால், ‘தலைவனொருவன் தலைவி தினைப்புனங் காக்கும் காலத்தில் அங்கு வந்து அசோகந் தழையுதவி அவளோடு அளவளாவிச் சென்றான்’ என்பதைத் தோழி உணர்த்தினாள்.

Wednesday, April 29, 2015

குறுந்தொகை-213




தோழி கூற்று
(தலைவனைப் பிரிந்த காலத்து, “நம்பாலுள்ள விருப்பத்தினால் தலைவர் தாம் சென்ற வினையை நிறைவேற்றாமல் வந்து விடுவாரோ?”என்று ஐயுற்ற தலைவியை நோக்கி, “அவர் விலங்கினமும் தமது கடமையை ஆற்றும் காட்சி கண்டு தாமும் தம் கடனாற்றத் துணிவராதலின் மீளார்”என்று தோழி கூறியது.)

பாலை திணை- பாடலாசிரியர் கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்.

இனி பாடல்-
 
நசைநன் குடையர் தோழி ஞெரேரெனக்
   
கவைத்தலை முதுகலை காலி னொற்றிப்
   
பசிப்பிணிக் கிறைஞ்சிய பரூஉப்பெருந் ததரல்
   
ஒழியி னுண்டு வழுவி னெஞ்சிற்

றெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி
   
நின்றுவெயில் கழிக்கு மென்பநம்
   
இன்றுயின் முனிநர் சென்ற வாறே.


                              -கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்.



 தலைவர் நின்பால் விருப்பம் மிக உடையவர்; நம்மோடு செய்யும் இனிய துயிலை வெறுத்துப் பிரிந்துசென்ற அவர்,  போன வழியில், விரைவாக, கிளைத்த கொம்பைஉடைய தலையைப் பெற்ற முதிய ஆண்மான்,  காலால் உதைத்து, பசி நோயைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு வளைத்த,பருத்த பெரிய மரப் பட்டை,  தனது குட்டி உண்டபின் எஞ்சினால் தான் அதைஉண்டு,  குற்றம் இல்லாத நெஞ்சினோடு, துள்ளி நடத்தலாகிய இயல்பினைஉடைய,  தனது குட்டிக்கு நிழலாகி நின்று வெயிலை நீக்கும், என்று கூறுவர்.



    (கருத்து) தலைவர் தம் கடமையை உணர்ந்து, மீளாது சென்றுபொருள் தேடி வருவர்.

 

    தன் பசியைத் தீர்த்துக் கொள்ளுதலில் நாட்டம் இன்றித் தன் குட்டியின் பசியை முதலில் நீக்கியும், தன்மேல் படும் வெயில் வெம்மையைக் கருதாமல் குட்டிக்கு நிழலாகியும் செயபடும்.அதுபோல

    “தலைவர் நசை நன்குடையரேயாயினும், தன்னலத்தையும் பேணாது ,  இல்லறம் புரியும் கடமையை நினைந்து அதற்கு உரிய பொருள் தேடச்சென்று அதூடிந்ததும் மீள்வர்” என்பது தோழியின் கருத்து.

Monday, April 27, 2015

குறுந்தொகை-212



தோழி கூற்று
(தலைவனது குறையைத் தலைவி நயக்கும்படி, “தலைவனது தேர்வந்து வறிதே பெயர்வதாயிற்று; அவன் விருப்பம் கழிந்தது. அது கருதி வருந்துகின்றேன்” என்று தோழி கூறியது.)
   
நெய்தல் திணை-பாடலாசிரியர் நெய்தற் கார்க்கியன்

இனி பாடல்-
 
கொண்க னூர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
   
தெண்கட லடைகரைத் தெளிமணி யொலிப்பக்
   
காண வந்து நாணப் பெயரும்
   
அளிதோ தானே காமம்

விளிவது மன்ற நோகோ யானே.




                          -நெய்தற் கார்க்கியன்.



 தலைவன் ஏறிச் சென்ற, கொடுஞ்சியை உடைய உயர்ந்ததேரானது, தெள்ளிய நீரைஉடைய கடலை அடைந்த கரைக்கண், தெளிந்த ஓசையை உடைய மணிகள் ஒலிக்கும்படி,  நாம் காணும்படி வந்து பின்பு நாம் நாணும்படி, மீண்டு செல்லா நிற்கும்; காமம் இரங்கத் தக்கது;  நிச்சயமாக அழியக்கடவதாகும்;  இவை கருதி யான் வருந்துவேன்.



    (கருத்து) தலைவன் குறை பெறாமல் வருந்திச் சென்றான்.

   

    கொடுஞ்சி - தாமரை மொட்டின் வடிவமாகச் செய்து தேர்முன்நடப்படுவது; தேரூரும் தலைவர் இதனைக் கையால் பற்றிக் கொள்வதுவழக்கம்; “தம்பால்நயந்து வந்தோரது குறையைப் போக்குதல் அறநெறியாளர் கடனாதலின்,அதனைச் செய்யாமையால் வறிதே தலைவன் மீண்டது நாணத்தைத்தருவதாயிற்று; “

Friday, April 17, 2015

குறுந்தொகை-211





தோழி கூற்று
(தலைவன் பிரிந்தகாலத்தில், ‘‘சுரத்திடையே தம் துணையைப் பிரிந்த விலங்கும் பறவையும் கவல்வது கண்டு நாமும் அங்ஙனம் கவல்வோமென நினைந்து தலைவர் மீள்வரோ?” என ஐயுற்ற தலைவியை நோக்கி, “அவர் அத்தகைய அருள் உடையவரல்லர். நம்மைப் பிரிந்த வன்மையையுடை யார். ஆதலின் மீளார்” என்று தோழி கூறியது.)
   

பாலை திணை- பாடலாசிரியர் காவன்முல்லைப் பூதனார்

இனி பாடல்-

அஞ்சி லோதி யாய்வளை நெகிழ
   
நேர்ந்துநம் மருளார் நீத்தோர்க் கஞ்சல்
   
எஞ்சினம் வாழி தோழி யெஞ்சாத்
   
தீய்ந்த மராஅத் தோங்கல் வெஞ்சினை

வேனி லோரிணர் தேனோ டூதி
   
ஆராது பெயருந் தும்பி
   
நீரில் வைப்பிற் சுரனிறந் தோரே.


                       -காவன்முல்லைப் பூதனார்.
   குறைந்து, வேனிலால் வெம்பிய மராமரத்தினது,  ஓங்குதலையுடைய வெவ்விய கிளையின்கண், வேனிற் காலத்து மலர்ந்த ஒற்றைப்பூங்கொத்தை,  தேனென்னும் சாதிவண்டோடு ஊதி, அதன்கண் ஒன்றுமின்மையின் உண்ணாமல் மீள்கின்ற, தும்பியென்னும் வண்டுகளையுடைய,நீரில்லாத இடங்களையுடைய, பாலைநிலத்தைக் கடந்தோரும்,  அழகிய சிலவாகியகூந்தலையுடைய நினது,  அழகியவளைகள் நெகிழும்படி,  நம் விருப்பத்திற்குஉடம்பட்டு,  நம்பால் அருள் செய்யாராகி, நம்மைப் பிரிந்து சென்றோருமாகிய தலைவர்பொருட்டு,  அஞ்சுதலை நீங்கினேம்.

    (

    (கருத்து) தலைவர் மீளார்.

 

   ( “அவர் இரங்கும் நெஞ்சுடையராயின் வளை நெகிழும்படி நமக்குஉளதாகும் துன்பத்தையும், நீரில் வைப்பிற் சுரம் போகுங்கால் தமக்குஉளதாகும் துன்பத்தையும் எண்ணிப் பிரியார். அவர் பிரிந்தமையின்இடைச்சுரத்தே இரங்கி மீளா வலிய நெஞ்சினராவர்” என்று தோழிகூறினாள்.)

Wednesday, April 15, 2015

குறுந்தொகை-210



சாதாரணமாக நம் வீட்டுப் பெரியவர்கள் காகம் கரைந்தால்...இன்று யாரோ விருந்தினர் வருவார்கள்..என்று சொல்வதைக் கேட்கிறோம்.

இந்த நம்பிக்கை அப்போதே...சங்க காலங்களிலேயே இருந்திருக்கிறது.

குறுந்தொகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முல்லை திணை பாடலில் அதைச் சொல்கிறார் பாடலாசிரியர் நச்செள்ளையார்.

தலைவன், தலைவியைப் பிரிந்து சென்றுள்ளான்.தலைவி அவனது வரவை எதிர்பார்த்திருக்கிறாள்.அப்போது காகம் கரையும் போதெல்லாம்..."பார்த்தாயா..இன்று உன் தலைவன் வந்துவிடுவான் என்று கூறி தலைவியைத் தோழி சமாதானப் படுத்துகிறாள்.

தலைவன் திரும்ப வந்து, தான் வராத நேரத்தில், தலைவியை ஆறுதல் கூறித் தேற்றியதற்காக தோழியைப் பாராட்டுகிறான்.தோழியோ, நான் பெரியதாக ஏதும் செய்யவில்லை.அச்செயலைச் செய்தது காகம் தான்.அது கரையும் போதெல்லாம் "நீர் வருவீர்" என்று மட்டுமே ஆறுதல் கூறினேன் என்கிறாள்.

இனி பாடல்-

தோழி கூற்று
(தலைவியைப் பிரிந்து சென்ற மீண்டுவந்த தலைவன், “யான்பிரிந்த காலத்தில் தலைவி துயருறாமல் நன்கு ஆற்றுவித்திருந்தாய்”என்று தோழியைப் புகழ, “என் செயல் ஒன்றுமின்று; காக்கை கரைந்த நன்னிமித்தத்தால் அவளை ஆற்றுவித்தேன்” என்று அவள் கூறியது.)



திண்டேர் நள்ளி கானத் தண்டர்
 
பல்லா பயந்த நெய்யிற் றொண்டி
 
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ
 
றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி

பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு
 
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.


                                -காக்கை பாடினியார் , நச்செள்ளையார்.


 திண்ணிய தேரையுடையநள்ளி யென்னும் உபகாரியினது,  காட்டிலுள்ள, இடையர்களுக்குரிய, பல பசுக்கள் உண்டாக்கிய நெய்யோடு,  தொண்டியென்னும் ஊரிலுள்ள வயல்களில், முற்றும் ஒருங்கே விளைந்த, வெண்ணெல்லரிசியால் ஆக்கிய வெம்மையையுடையசோற்றை,  ஏழு பாத்திரங்களில்ஏந்திக் கொடுத்தாலும்,  என் தோழியாகிய தலைவியினுடைய, பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்தை நீக்கும்பொருட்டு,  விருந்தினர் வரும்படி,  கரைதலைச் செய்த காக்கைக்கு இட்ட உணவே, சிறந்தது ஆகும்
 

    (கருத்து) காக்கை கரைதலால் நீர் வருவீர் என தலைவியை ஆற்றுவித்தேன்.

Friday, April 10, 2015

எனது புதிய நாடகம் "நூல் வேலி"



கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் 26ஆம் ஆண்டு கோடை நாடக் விழாவில், எனது கதை, வசனம், இயக்கத்தில் நூல் வேலி என்ற நாடகம் நடைபெற இருக்கிறது.

நாடகத்தின் தலைப்பு..நாடகத்தை இறுதிவரை மறக்காத  இயக்குநர் சிகரம் கே பாலசந்தர் நினைவாக வைக்கப் பட்டுள்ளது.

இன்று சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாகக் கொண்டுள்ள இந்நாடகம், 24-4-15 அன்று மாலை 7 மணியளவில் சென்னை நாரத கான சபா அரங்கில் நடைபெறுகிறது.

அனுமதி இலவசம்.

நாடக ரசிகர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.


Thursday, April 9, 2015

குறுந்தொகை-209



பாலை திணை-பாடலாசிரியர் பெருங்கடுங்கோ

இனி பாடல்-

அறம் தலைப்பட்ட நெல்லி அம் பசுங்காய்
மறப்புலிக் குருளை கோள் இடம் கறங்கும்
இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே
குறு நடை பல உள்ளலமே நெறி முதல்
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித்
தளை அவிழ் பல் போது கமழும்
மை இரும் கூந்தல் மடந்தை நட்பே.

குறு நடையுடன் நடக்கும்  பெண்ணே!  வலுவான புலிக்குட்டிகள், பாதையில் செல்வோர்க்கு உதவும்படி, மரத்திலிருந்து உதிரும், அழகிய பசுமையான நெல்லிக் கனிகளை உண்ணும் பாதையில் நான் வரும்பொழுது, பலவற்றைப் பற்றி நான் எண்ணவில்லை.  வளைந்த கிளைகளையுடைய வெட்சி செடிகளின் அரும்பு அவிழ்ந்து மலரும் பொழுது உள்ள நறுமணத்தை உடைய கருமையான அழகிய கூந்தலை உடைய இளம் பெண்ணின் நட்பைப் பற்றி மட்டுமே நினைத்தேன்.

குறுந்தொகை-208




தலைவி கூற்று
(திருமணத்திற்காக பொருளீட்ட தலைவன் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, “நீ ஆற்றல் வேண்டும்” என்றதோழிக்கு அவள், “நான் தலைவர் கருத்தை உணர்ந்தேன்; ஆயினும் நொதுமலர் வரையப்புகுவரேல் என் செய்வதென ஆற்றேனாயினேன்”என்றது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கபிலர்

 இனி பாடல்-
   
ஒன்றே னல்லே னொன்றுவென் குன்றத்துப்
   
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
   
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்
   
நின்றுகொய மலரு நாடனொ

டொன்றேன் றோழி யொன்ற னானே.


                             -கபிலர்.

 

 தோழி...நான் தலைவனோடு பொருந்தாத இயல்பினை உடையேனல்லேன்; பொருந்தும் இயல்பினேன்; ஆயினும்,  நொதுமலர் வரைவொடு புகுவதாகியதொரு காரணத்தினால்,  மலையினிடத்து,
 ஒன்றோடொன்று பொருதகளிறுகளால் மிதிக்கப்பட்ட, நெரிந்த அடியையுடைய வேங்கைமரம்,  குறமகளிர், தம்முடைய கூந்தலின்கண்ணே அணிந்துகொள்ளும்பொருட்டு, ஏறவேண்டாமல் நின்ற படியே மலர்களைக் கொய்யும்படி,  தாழ்ந்துமலர்தற்கிடமாகிய, - நாட்டையுடைய தலைவனோடு,  பொருந்தேன்.

 

    (கருத்து) தலைவர் வரவு நீட்டித்தலின் நொதுமலர் வரையப்புகுவரென்று நான் ஆற்றேனாயினேன்.

 

    (பொருத களிறு மிதித்தலால் வேங்கைமரம் சாய்ந்து மகளிர் ஏறாமேலே மலர் பறித்தற்கு எளிதாக மலர்ந்தது. )
 

Wednesday, April 8, 2015

குறுந்தொகை-207





தலைவி கூற்று
(தலைவர் சொல்லாமற் பிரிந்து செல்வதைத் தோழி கூறிய பொழுது,“இங்ஙனம் சொல்லிய ஆர்வலர் பலர்; அவரைப் போல நீயும் சொன்னாய்; தலைவரைத் தடுத்தாயல்லை” எனத் தலைவி இரங்கிச் சொல்லியது.)

பாலை திணை- பாடலாசிரியர் உறையன்

இனி பாடல்-
   
செப்பினஞ் செலினே செலவரி தாகுமென்
   
றத்த வோமை யங்கவட் டிருந்த
   
இனந்தீர் பருந்தின் புலம்புகொ டெள்விளி
   
சுரஞ்சென் மாக்கட் குயவுத்துணை யாகும்

கல்வரை யயலது தொல்வழங்கு சிறுநெறி
   
நல்லடி பொறிப்பத் தாஅய்ச்
   
சென்றெனக் கேட்டநம் மார்வலர் பலரே.



   

 நம்முடைய செலவைத்தலைவியினிடத்துச் சொல்லிச் செல்வேமாயின்,  செல்லுதல் அரிதாகும்,  என்று கூறி, பாலைநிலத்திலுள்ள ஓமைமரத்தினது,  அழகிய கிளையின்கண் இருந்த,  இனத்தினின்றும் பிரிந்து வந்த பருந்தினது, தனிமையைப் புலப்படுத்தலைக் கொண்ட தெளிந்த ஓசை,  அருவழியிற்செல்லும் மனிதர்களுக்கு,உசாத்துணையாக அமைதற்கு இடமாகிய,  கற்களையுடைய மலையினது அயலதாகிய,  யாவரும் நடக்கும் பழையதாகிய சிறியவழியில்,- தம் நல்ல அடிகள் சுவடு செய்ய,தாவி, சென்றாரென்று,  கேட்ட நம்முடைய அன்பர் பலராவர்.


    (கருத்து) தலைவர் செலவை யான் முன்னரே அறிந்தேன்.



    (“என்பால் அன்புடையார் பலர் கேட்டு இதனை எனக்கு முன்னரேதெரிவித்தனர். நீ இப்பொழுது தெரிவித்தலால் ஆகும் பயன் யாது?எல்லோரையும் போல நீ கேட்டாயன்றி அவன் செல்லாமல் தடுக்கவில்லை" எனத் தோழியின் இயலாமையைச் சுட்டித் தலைவி இரங்கினாள்.)

Tuesday, April 7, 2015

குறுந்தொகை-206






தலைவன் கூற்று
(பாங்கன் தன்னை இடித்துரைத்தபோது, “அறியாமையால் நான் காமநோயுற்றேன். இனிச் செய்யுமாறு யாது? நீவிர் அங்ஙனம் செய்யற்க”என்று தலைவன் கூறியது.)

மருதம் திணை -பாடலாசிரியர் ஐயூர் முடவன்

இனி பாடல்-
   
அமிழ்தத் தன்ன வந்தீங் கிளவி
   
அன்ன வினியோள் குணனு மின்ன
   
இன்ன வரும்படர் செய்யு மாயின்
   
உடனுறை வரிதே காமம்

குறுக லோம்புமி னறிவுடை யீரே.



_                         - ஐயூர் முடவன்
அறிவையுடையவரே,  அமிழ்தத்தைப்போன்ற,  அழகிய இனிய சொற்களையுடைய,  மனத்தாலுணர்தல் மாத்திரையே யியன்ற அத்தகைய இனிமையையுடையோளது,  குணமும்,  இத்தகைய,  இன்னாதனவாகிய துன்பங்களை உண்டாக்குமாயின், ஒருங்கு வாழ்தற்கு அரிது;ஆதலின், அதனை அணுகுதலைப்பரிகரிக்கவும்.

 

    (கருத்து) காமம் என்னால் தாங்கற்கரியது.

 
   ( ‘நான் அறிவின்மையால் இந்நோய் தலைக் கொண்டேன். இதனால் விளைந்த துன்பம் தீர்த்தற்கரிதாயிற்று. அறிவுடையீராகிய நீர் செல்லுதலை ஒழிமின்’ என்று தலைவன் தன் நிலைமையை ஒருவாறு புலப்படுத்தினான் நண்பனுக்கு)

Monday, April 6, 2015

குறுந்தொகை-205




நெய்தல் திணை -பாடலாசிரியர் உலோச்சன்

இனி பாடல்;-


மின்னுச் செய் கருவிய பெயல் மழை தூங்க

விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு
,
பொலம்படைப் பொலிந்த வெண் தேர் ஏறி,

கலங்கு கடற் துவலை ஆழி நனைப்ப,

இனிச் சென்றனனே, இடு மணற் சேர்ப்பன்;

யாங்கு அறிந்தன்றுகொல் தோழி! என்

தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே?


                                   -உலோச்சன்

மழைமேகங்கள் அன்னம் சிறகை விரித்தது போல நகர்ந்து கொண்டு இருக்கின்றன. தலைவன் என்னுடன் கூடியபின்,கடலலைச் சரலால் நனைந்த சக்கரங்களைக் கொண்டத் தேரில் ஏறி இங்கிருந்து சென்று விட்டான்.இது எப்படி எனது நெற்றிக்குத் தெரிந்தது.அது பசலையால் அழகிழந்துத் தெரிகிறதே!(எனத் தோழியிடம் உரைக்கின்றாள்)

Thursday, April 2, 2015

குறுந்தொகை-204



பாங்கன் கூற்று
(தலைவனைப் பாங்கன் இடித்துரைத்தது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் மிளைப்பெருங் கந்தன்

இனி பாடல்-
 
காமங் காம மென்ப காமம்
   
அணங்கும் பிணியு மன்றே நினைப்பின்
   
முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல்
   
மூதா தைவந் தாங்கு

விருந்தே காமம் பெருந்தோ ளோயே.


                       -மிளைப்பெருங் கந்தன்.
    பெரிய தோளையுடையதலைவ,  காமம் காமமென்று அதனைஅறியார் இகழ்ந்து கூறுவர்; அக்காம மானது, வருத்தமும் நோயும் அன்று ,பழங்கொல்லையாகிய மேட்டு நிலத்தில்தழைத்த,  முதிராத இளைய புல்லை,முதிய பசு,  நாவால் தடவி இன்புற்றாற்போல,  நினைக்குங் காலத்து,  அக்காமம் புதிய இன்பத்தை யுடையதாகும்.

 

    (கருத்து) காமம் நம்முடைய அறிவின் எல்லைக்கு உட்பட்டது.

    (இளம்புல்லைத் தடவிய அளவில் முதிய பசு இன்புற்றதற்குக் காரணம்அப் புல்லின் சுவையன்று; பசுவின் ஆர்வமே. அதன் ஆர்வத்தளவுஅவ்வின்பம் நிற்றலைப் போலக் காமமானது நமது நினைப்பினளவிற்புதுமை யின்பத்தைத் தருவதாகின்றது.) 

Monday, March 30, 2015

கலைஞர் எனும் விநாடி முள்

சமுதாயத்தில் ஒருவர் அலுவலகப் பணிகளிலிருந்து ஒய்வு பெற்றதும்...60 வயதை எட்டியதும், தனக்கு வயதாகிவிட்டது...இனி தன்னால்
 எந்த பயனுமில்லை..இனி தான் வாழும் ஒவ்வொரு நாளும் இறைவன் எனப்படுபவன் அளிக்கும் போனஸ் நாட்கள்..என்ற அங்கலாய்ப்புடன்...உடலில் உண்டான வியாதிகளுடனும்..இனி வேறு வியாதிகள் வந்திடுமோ! என்ற பயத்துடனும் பயந்து..பயந்து வாழும் மக்கள் நிறைந்த நாடு நம் நாடு.

ஒரு விவாதத்திற்காக சொல்கிறேன்..இனி ஒவ்வொரு நாளும் போனஸ் நாட்கள் என்று எண்ணும் நீங்கள்..ஏன் அந்த நாட்களை சமுதாயத்திற்கோ..இலக்கிய உலகிற்கோ செலவிடக் கூடாது?

உண்மையில், முதுமைதான் , வாழ்வில் அனைத்துக் கடமைகளையும் முடித்துவிட்டு..இன்பமயாக கழிக்க வேண்டிய நாட்கள் முதியோர்க்கு,அதைவிடுத்து, மரணத்தை எண்ணி ஏன் கவலைப்பட வேண்டும்.

"மரணத்தைப் பற்றிக் கவலைப்படாதே
நீ இருக்கும் போது அது வரப்போவதில்லை
அது வரும்போது நீ இருக்கப் போவதில்லை" என்கிறார் விவேகானந்தர்,

சரி...விஷயத்திற்கு வருவோம்...இப்போது நான் சொல்லப் போவது 91வயது இளைஞன் பற்றி..

உழைப்பிற்கு தேனீயை உதாரணம் சொல்வார்கள்.ஆனால் அதைவிட இறக்கும் வரை விடாது உழைப்பது "விநாடி முள்" ஆகும்.அது நின்றுவிட்டால் அந்தக் கடிகாரம் வேலை செய்யாமல் நின்றுவிட்டது எனப் பொருள்.

கலைஞரும் விநாடி முள் போலத்தான்.வாழ்வில் ஒரு விநாடி கூட வீணாக்காது உழைப்பவர்.

உழைப்பு...உழைப்பு..உழைப்பு அதன் மறுபெயர் கலைஞர் எனலாம்.

இதுவரை 75 படங்களுக்கு கதை வசனம்..அவற்றிற்கு 100க்கும் மேற்பட்ட பாடல்கள்.ரோமாபுரி பாண்டியன், பொன்னர் சங்கர்.ரஷ்ய இலக்கிய மேதை எழுதிய காவியத்திற்கு தமிழில் .கவிதை வடிவில் நவீனம் (தாய்), தொல்காப்பியம், திருக்குறளுக்கு கலைஞர் உரை....இப்படி இலக்கியத் தொண்டிற்கு ஆற்றிய பணிகளை சொல்லிக் கொண்டே போகலாம் என்றால்....

அரசியல் வாழ்வு என்னை மறந்து விட்டாயே என்கிறது.ஐந்து முறை முதல்வர், அப்படி இல்லா காலத்தில் எதிர்க் கட்சித் தலைவர் எனத் தொடரும் பொதுப்பணி...இவை போதாது என அகவை 91 வயதிலும் "இராமானுஜர்" தொலைக் காட்சித் தொடருக்கு கதை, வசனம் எழுதப் போகிறார்.அதற்காக ராமானுஜர் பற்றிய புத்தகங்களை மீண்டும் படிக்க ஆரம்பித்து இருக்கிறார்.அவர் படிக்கத் துவங்கியுள்ள புத்தகங்கள்.

ராமகிருஷ்ணானந்தர் வங்க மொழியில் எழுதி கா.ஸ்ரீ.ஸ்ரீ யால் மொழிபெயர்க்கப்பட்ட ராமானுஜர் வாழ்க்கை வரலாறு, கவிஞர் வாலி எழுதிய 'ராமானுஜ காவியம்". டி.என்.சுகி சுப்ரமணியன் எழுதிய "ஸ்ரீ இராமானுஜர்", சாண்டில்யன் எழுதியுள்ள "மதப் புரட்சி செய்த மகான் இராமானுஜம்', பி.ஸ்ரீ.எழுதிய "ஸ்ரீ ராமானுஜர்"., கங்கா ராமமூர்த்தியின்','ஸ்ரீராமானுஜர் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்..ஆகியவை.

இன்று புத்தகத்தின் பத்து பக்கங்களைக் கூட படிக்க இயலாது, ஆன் லைனில் அவற்றைத் தேடுவோர் நடுவே...எழுத்தையும்,படிப்பையும், பொது வாழ்வையும் விடாது தொடரும் 91 வயது இளைஞன் கலைரை..விநாடிமுள்ளிற்கு அன்றி வேறு எதற்கு ஒப்பிட முடியும்.


Wednesday, March 25, 2015

குறுந்தொகை-203




தலைவி கூற்று
(விலைமகளிடம் சென்று பிரிந்த தலைவனுக்குத் தூதாகப் வந்த தோழியைநோக்கி, “தலைவர் உடனுறைந்து அன்பு பாராட்டற்குரிய நிலையினராகஇருந்தும் அயன்மை தோன்ற ஒழுகுகின்றார்; அவர்பால் முன்புபரிவுடையேன்; இப்பொழுது அது நீங்கியது” என்று தலைவி மறுத்துக்கூறியது.)

மருதம் திணை- பாடலாசிரியர் நெடும்பல்லியத்தன்

இனி பாடல்-
   
மலையிடை யிட்ட நாட்டரு மல்லர்
   
மரந்தலை தோன்றா வூரரு மல்லர்
   
கண்ணிற் காண நண்ணுவழி யிருந்தும்
   
கடவு ணண்ணிய பாலோர் போல

ஒரீஇ யொழுகு மென்னைக்குப்
   
பரியலென் மன்யான் பண்டொரு காலே.

                      -நெடும்பல்லியத்தன்
’.

 தோழி, தலைவர் மலைகள் இடையிடுவதனாற் சேயதாகிய நாட்டினருமல்லர்; தன்னிடத்துள்ள மரங்கள் நமக்குத் தோன்றாத சேய்மையிலுள்ள ஊரினரும்அல்லர்;  கண்ணாலே காணும்படி,  விரைவில் வருதற்குரிய அணிமையிடத்திலிருந்தும், முனிவரைஅணுகி வாழும் பகுதியினரைப்போல,  மனத்தால் நீங்கி ஒழுகுகின்ற என் தலைவர்பொருட்டு, யான் முன்பு ஒரு சமயத்தில், பரிதலையுடை யேனாயினேன்; அஃதுஇப்பொழுது கழிந்ததே!

 

    (கருத்து)இப்பொழுது என்னைப் புறக்கணித் தொழுகும் தலைவர்பால் யான் முன்பு பரிவுடையளாக இருந்தேன்.



    (முனிவரைக் கண்டார் தம் தூய்மையன்மை காரணமாக அஞ்சி விலகி யொழுகும் தன்மையைப் போல என்னிடத்தினின்றும் நீங்கி ஒழுகினா ரென்றாள். இவ்வுவமையால், தனது தூய்மையையும் தலைவனது விலைமகளை நாடிச் செம்ற தூய்மையன்மையையும் குறிப்பாலுணர்த்தினாள்.)

Sunday, March 22, 2015

குறுந்தொகை- 202



தலைவி கூற்று
(விலைமகளிடமிருந்து பிரிந்துவந்த தலைவனுக்குத் தூதாக வந்த தோழியை நோக்கி, “தலைவர் இப்பொழுது எனக்கு இன்னாமையைத் தரும் ஒழுக்கத்தினராதலின் என் நெஞ்சு வருந்தும்; அவரை ஏற்றுக் கொள்ளேன்” என்று தலைவி கூறியது.)

மருதம் திணை-பாடலாசிரியர் அள்ளூர் நன்முல்லை

இனி பாடல்-
 
நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே
   
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
   
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
   
கினிய செய்தநங் காதலர்

இன்னா செய்த னோமென் னெஞ்சே.

                           -அள்ளூர் நன்முல்லை.

 
தோழி, என் நெஞ்சுவருந்தும்;  முல்லைநிலத்தின் கண், நெருங்கி முளைத்த, சிறிய இலைகளையுடைய நெருஞ்சியினது, முன்னர்த் தோன்றிக் கண்ணுக்குஇனிய புதியமலர், பின்னர் இன்னாமையைத்தரும் முள்ளைத் தந்தாற்போல, முன்பு நமக்கு இனியவற்றைச் செய்தொழுகிய நம் தலைவர்,  இப்பொழுது இன்னாதனவற்றைச் செய்தொழுகு தலால், என் நெஞ்சு நோம்--.



    (கருத்து) தலைவர் இன்னாராகி ஒழுகுதலால் என் நெஞ்சம் வருந்தும்.

   ( நோமென்னெஞ்சே நோமென்னெஞ்சே யென்ற அடுக்குஇடைவிடாது நோதலைக் குறித்தது;

    “தலைவர் நின்மாட்டு இனிய பல செய்தவரன்றே; அவரை நீஏற்றுக்கோடல் வேண்டும்” என்ற தோழியை மறுப்பவளாதலின், “அவர் இனியராயிருந்தது முன்பு; இப்பொழுது இன்னாராயினர்” என்றாள்.)

Wednesday, March 18, 2015

குறுந்தொகை-201




தலைவி கூற்று
(தலைவனும் தலைவியும் மணந்துகொண்டு இல்லறம் நடத்தும் மனைக்கண் சென்ற தோழி, “வரைந்துகொள்ளும் வரையில் நீ வேறுபடாமல் எங்ஙனம் ஆற்றியிருந்தாய்” என்று கூற, “நான் அங்ஙனம் ஆற்றியிருக்கும் வண்ணம் அயன்மனைக் கிழத்தி முன்பு தலைவன் வரவைக் கூறினாள்; அவள் வாழ்க!” என்று தலைவி சொல்லியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர்  யார் எனத் தெரியவில்லை

இனி பாடல்-
 
அமிழ்த முண்கநம் மயலி லாட்டி
   
பால்கலப் பன்ன தேக்கொக் கருந்துபு
   
நீல மென்சிறை வள்ளுகிர்ப் பறவை
   
நெல்லி யம்புளி மாந்தி யயலது

முள்ளி லம்பணை மூங்கிற் றூங்கும்
   
கழைநிவந் தோங்கிய சோலை
   
மலைகெழு நாடனை வருமென் றோளே.

 அயன்மனைக்கிழத்தி, பாலைக் கலந்தாற்போன்றஇனிமையையுடைய,  தேமாம்பழத்தைத் தின்று,  கரிய மெல்லியசிறகுகளையும்,  கூரிய நகங்களையும்உடைய வௌவால், நெல்லியினதுபுளித்த காயை உண்டு, அயலிலுள்ளதாகிய, முள்ளில்லாதஅழகிய பருத்த மூங்கிலின் கண்ணே தொங்குகின்ற, மூங்கிற் கோல்கள் உயர்ந்துவளர்ந்த சோலைகளையுடைய, -மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனை, வரைவுக்குரியவற்றோடு வருவானென்றுகூறினாள்; ஆதலின், அவள் அமிழ்தத்தைஉண்பாளாக!



    (கருத்து) தலைவன் வரைவொடு வருதலை முன்பு கூறி எனக்கு உறுதி யுண்டாக்கிய அயலிலாட்டி வாழ்வாளாக!



    தேமாம்பழத்தை உண்ட வௌவால் பின்பு மாறுபட்ட சுவையையுடைய நெல்லிக்காயை உண்டு சிறிதும் ஊறு உண்டாக்காத முள்ளில்மூங்கிலிற் றூங்கியதுபோல, களவுப் புணர்ச்சியின்கண் இன்பந் துய்த்ததலைவன் அவ்வின்பத்துக்கு மாறாகிய இடையீடுகளையும் ஏற்றுப் பின்வரைந்து கொண்டு சிறிதும் ஏதமின்றி இன்பம் துய்க்கும் நிலையினனாயினன் என்பது குறிப்பு.

Monday, March 16, 2015

குறுந்தொகை-200



தலைவி கூற்று
(பருவம் வந்தகாலத்துக் கவன்ற தலைவியை நோக்கி, “இது காரன்று; வம்பு” எனக்கூறிய தோழிக்கு, “கார்ப்பருவத்துக்குரிய மேகமுழக்கமும் புதுவெள்ளமும் உள்ளன; இக்காலத்தும் தலைவர் வந்திலர்; அவர் நம்மை மறந்தார் போலும்!” என்று தலைவி கூறி வருந்தியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் அவ்வையார்

இனி பாடல்-


பெய்த குன்றத்துப் பூநாறு தண்கலுழ்
   
மீமிசைத் தாஅய வீஇ சுமந்துவந்
   
திழிதரும் புனலும் வாரார் தோழி
   
மறந்தோர் மன்ற மறவா நாமே

கால மாரி மாலை மாமழை
   
இன்னிசை யுருமின முரலும்
   
முன்வர லேமஞ் செய்தகன் றோரே.

                    - அவ்வையார்

  தோழி, கார்ப்பருவத்துப்பெய்தற்குரிய மழையையுடைய, மாலைக்காலத்து வரும் கரிய மேகங்கள்,  வித்தி வானோக்கும் புலமுடையாருக்கு இனியஒலியையுடைய இடியேற்றையுடையனவாகி முழங்கும்; முன்பு மழைபெய்த குன்றத்தின்கண், மலர் மணக்கின்ற தண்ணியகலங்கலின்மேலே, பரவிய, மலர்களைச் சுமந்து வந்து,  அருவிப்புனலும் வீழும்; கார்ப்பருவத்திற்கு முன்னரே வருவேமென்ற பாதுகாப்பைச்செய்து அகன்ற தலைவர்,  இன்னும் வாராராயினர்;அவர் நிச்சயமாக நம்மை மறந்தார்;  நாம் அவரை மறத்தல் செய்யாம்.


  (கருத்து) கார்ப்பருவம் வரவும் தலைவர் வந்தாரல்லர்.

Sunday, March 15, 2015

திரைப்படங்களுக்கான வரிவிலக்கு..



முன்பெல்லாம் ஒரு திரைப்படத்திர்கு வரிவிலக்கு அரசு அளிக்கிறது என்றால்...அப்படத்திற்கான திரையரங்கு நுழைவுக் கட்டிணம் குறையும்.அதிக மக்கள் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் விலக்கு அளிக்கப்பட்டது.
ஆனால்..இப்போதெல்லாம்..வரிவிலக்கு அளிக்க, படத்தின் தலைப்பு தமிழில் இருக்க வேண்டும், ஆங்கிலத்தில் வசனங்கள் இருக்கக் கூடாது..இப்படி..இன்னும் பிற விதிகள் அவ்வப்போது அரசாளும் கட்சிக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுகிறது.குறிப்பாக ஆளும் கட்சிக்கு, எதிர்க் கட்சியைச் சார்ந்தவர் திரைப்படம் எனில் வரிவிலக்கு கிடைப்பதில் சற்று சிரமம் ஏற்படுகிறது.

லட்சக்கணக்கில், (கோடி?) படமெடுப்பவர்களுக்கு இப்போது அளிக்கப்படும் விலக்கு போய்ச் சேருகிறது.இது ஏன்? அநாவசியமாக கதாநாயகனுக்கும்'..படப்பிடிக்கும் (வெளிநாட்டில் தேவையில்லாமல் காதல் காட்சிகள், கனவுக் காட்சிகள் படப்பிடிப்பு) செலவு செய்பவர்களுக்கு,..பொது மக்கள் வரிப்பணத்தை வரிவிலக்கு என்ற பெயரில் ஏன் கொடுக்க வேண்டும்.

வரிவிலக்கு ஒருபடத்திற்கு அளித்தால், அரசின் நோக்கம் அப்படத்தை அதிக மக்கள் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருக்க வேண்டும்.மக்களுக்குக் குறைந்தக் கட்டணத்தில் அப்படம் காண்பிக்கப்பட வேண்டும்.ஆனால் இன்று அப்படி ஒரு நடைமுறை இல்லை.அது ஏன்...

பல லட்சம் மக்கள் உழைத்துக் கொடுக்கும் வரிப்பணம், சினிமாவைத் தொழிலாகக் கொண்டுள்ள ஒரு சில தயாரிப்பாளர்களுக்குப் போய் ஏன் சேர வேண்டும்.

சம்பந்தப்பட்டவர்கள் இதற்கான நடவடிக்கையை எடுப்பார்கள் என எதிப்பார்ப்போம். 

Friday, March 13, 2015

குறுந்தொகை-199



தலைவன் கூற்று
(தாய் முதலியோர் தலைவியை வீட்டிற்கு அழைத்துச் செல்லஎண்ணியிருப்பதைத் தோழியால் அறிந்த தலைவன், “இனி இவளைப்பெறுவது அரிது போலும்! ஆயினும் என் காமநோய் என்றும் அழியாதது;பிறவிதோறும் தொடர்ந்து வருவது” என்று நெஞ்சை நோக்கிக் கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் பரணர்

இனி பாடல்-

 
பெறுவ தியையா தாயினு முறுவதொன்
   
றுண்டுமன் வாழிய நெஞ்சே திண்டேர்க்
   
கைவள் ளோரி கானந் தீண்டி
   
எறிவளி கமழு நெறிபடு கூந்தல்

மையீ ரோதி மாஅ யோள்வயின்
   
இன்றை யன்ன நட்பி னிந்நோய்
   
இறுமுறை யெனவொன் றின்றி
   
மறுமை யுலகத்து மன்னுதல் பெறுமே.


                                  -பரணர்

   

நெஞ்சே. திண்ணிய தேரையுடைய, கைவண்மையையுடைய ஓரியினது, கானத்தைத் தீண்டி,  வீசுகின்றகாற்றைப் போல, மணக்கின்ற, நெறிப்பு அமைந்த கூந்தலாகிய,மையைப்போன்ற தண்ணிய மயிரையுடைய, .மாண்மையை உடையோளிடத்து,  இன்றை நிலையைப் போன்று என்றும் உள்ளநட்பையுடைய இந்தக் காமநோயானது, அழியுமுறை என்பது ஒன்று இல்லாமல். மறுமையில் வாழ்தற்குரிய உலகத்திலும்,  நிலைபேற்றை அடையும்; ஆதலின்,  தலைவியை இப்பிறவியின்கண் பெறுதல் நம்மாட்டுப் பொருந்தாதாயினும், மறுமை யுலகத்துப் பெறுவதாகியநாம் அடையும் பயன் ஒன்று உண்டு.

 

    (கருத்து) இனி இப்பிறப்பில்  தலைவியைக் காணமுடிவதில்லை

Tuesday, March 10, 2015

குறுந்தொகை-198



தோழி கூற்று
(“இனி நாங்கள் தினைப்புனங் காக்கச் செல்கின்றேம்; நீ அங்கு வருக. இங்கு எம்முடைய தாய் வருவாளாதலின் வரவேண்டாம்” என்று தோழிதலைவனுக்குக் கூறியது.)


குறிஞ்சி திணை - பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-

 
யாஅங் கொன்ற மரஞ்சுட் டியவிற்
   
கரும்புமருண் முதல பைந்தாட் செந்தினை
   
மடப்பிடித் தடக்கை யன்ன பால்வார்பு
   
கரிக்குறட் டிறைஞ்சிய செறிகோட் பைங்குரற்

படுகிளி கடிகஞ் சேறு மடுபோர்
   
எஃகுவிளங்கு தடக்கை மலையன் கானத்
   
தார நாறு மார்பினை
   
வாரற்க தில்ல வருகுவள் யாயே.



   
                                   -கபிலர்.



 யாமரத்தை வெட்டிய,மரங்களைச் சுட்ட வழியில்,  கரும்பைப் போன்ற அடியை யுடையனவாகிய, பசிய காம்பையுடைய சிவந்த தினையினது,  மடமை மிக்க பிடியினதுவளைந்த கையைப் போன்றனவாகி,  பால்நிரம்பி,  கரியை எடுக்கின்ற குறட்டைப்போல வளைந்த, செறிந்த குலையையுடைய பசிய கதிர்களில், தின்னும் பொருட்டுவீழ்கின்ற கிளிகளை, ஓட்டுவேமாகிச் செல்வேம்; இவ்விடத்தில் தாய் வருவாள்;பகைவரைக் கொல்லும் போர்க்குரிய,  வேற்படை விளங்குகின்ற பெரிய கைகளையுடைய, மலையனது முள்ளூர்க்கானத்தில் வளர்ந்த,  சந்தனம் மணக்கின்ற மார்பினையுடையை யாகி,  வருதலையொழிக; இஃது எங்கள் விருப்பம்.

   

    (கருத்து) இனித் தினைப் புனத்தே வந்து தலைவியோடுஅளவளாவுவாயாக.

Thursday, March 5, 2015

குறுந்தொகை-197



தலைவி கூற்று
(பருவ வரவின் கண், “தலைவர் வருவர்; நீ வருந்தற்க” என ஆறுதல் கூறிய தோழியை நோக்கி, ‘‘என் உயிரைக் கொள்ள வருவது போல இக்கூதிர்ப் பருவம் வந்தது; இனி என் செய்வேன்?” என்று தலைவி கூறியது.)


நெய்தல் திணை- கச்சிப்பேட்டு நன்னாகையார்

இனி பாடல்-


யாதுசெய் வாங்கொ றோழி நோதக
   
நீரெதிர் கருவிய காரெதிர் கிளைமழை
   
ஊதையங் குளிரொடு பேதுற்று மயங்கிய
   
கூதி ருருவிற் கூற்றம்

காதலர்ப் பிரிந்த வெற்குறித்து வருமே.

                             கச்சிப்பேட்டு நன்னாகையார்
                            -
 நோதல் பொருந்தும்படி, நீரை ஏற்றுக் கொண்ட மின் முதலியதொகுதியை யுடையனவாகிய,  கார்காலத்தை ஏற்றுக் கொண்ட கிளைத்த மழையையுடைய, ஊதைக் காற்றினது குளிர்ச்சியோடு, மிக மயங்கிக் கலந்த,  கூதிர்க் காலமாகிய உருவத்தையுடைய கூற்றம், தலைவரைப் பிரிந்திருக்கும்என்னைக் கொல்லுதல் குறித்து வாரா நின்றது; யாதுசெய்வாம்--!



    (கருத்து) தலைவர் கூதிர்க் காலத்தும் வந்திலராதலின் இனி உயிர்வாழேன்.

குறுந்தொகை-196



தோழி கூற்று
(ஊடியிருந்த தலைவியின் உடம்பாடு பெறுவதற்குத்துணை புரியும்வண்ணம் தலைவன் தோழியை வேண்டியபொழுது, “நீர் முன்பு எம்தலைவிபால் அன்புடையராயினீர்; இப்பொழுது அதனை நீங்கினீர்;ஆதலின் நும்மை ஏற்றுக் கொள்ளுமாறு எங்ஙனம்?” என்பது

மருதம் திணை - பாடலாசிரியர் மிளைக்கந்தன்

இனி பாடல்-


வேம்பின் பைங்காயென் றோழி தரினே
 
தேம்பூங் கட்டி யென்றனி ரினியே
 
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
 
தைஇத் திங்கட் டண்ணிய தரினும்

வெய்ய வுவர்க்கு மென்றனிர்
 
ஐய வற்றா லன்பின் பாலே.


                           -மிளைக்கந்தன்.

 

 என் தோழியாகியதலைவி, வேம்பினது பசிய காயை, முன்பு தந்தால்,  இனிய பொலிவுபெற்ற வெல்லக்கட்டி,  என்று பாராட்டிக் கூறினீர்;இனி - இப்பொழுது, பாரி யென்னும்வள்ளலுக்குரிய பறம்பென்னும் மலையிடத்திலுள்ள,  தை மாதத்திற் குளிர்ந்தனவாகிய,  குளிர்ச்சியையுடைய சுனையிலுள்ளதெளிந்த நீரைத் தந்தாலும், வெப்பத்தையுடையனவாகி உவர்ப்புச் சுவையைத்தருமென்று கூறினீர்;  நுமது அன்பின் பகுதி, அத்தகையது.



    (கருத்து) முன்பு நீர் தலைவியிடம் அன்புடையராயிருந்து இப்போது அவ்வன்பு இல்லாதவராயினர்.

Wednesday, March 4, 2015

Monday, March 2, 2015

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு வேண்டுகோள்



இப்போதெல்லாம் வாரத்திற்கு நான்கும் அதற்கும் மேலாகவும் படங்கள் வெளியாகின்றன.குறைந்த பட்ஜெட் படங்களே இவை.வேண்டுமான அளவிற்கு இவற்றுக்குத் தியேட்டர்கள் கிடைப்பதில்லை.இப்படி சமீபத்தில் வெளிவந்த ஒரு படம் திரையிட சில காட்சிகளே..ஒரு வாரத்திற்குக் கிடைத்தது.படமும் சுமாரான படம்.ஒழுங்காகத் தியேட்டரில் வந்திருந்தால் கண்டிப்பாக டீசண்ட் கலெக்க்ஷன் கிடைத்திருக்கும்.

முன்பு, தொடர்ந்து ஆங்கிலத் திரைப்படங்களே வெளியான திரையரங்குகளில், வருடத்திற்கு  மூன்று மாதங்களாவது தமிழ்த் திரைப்படம் போடவேண்டும் என அரசு அறிவித்தது.(இப்போது அது நடைமுறையில் இல்லை.அதற்கான அவசியமும் இல்லை.ஏனெனில் பல மல்டிபிள் காம்பெளெஃக்ஸ் வந்துவிட்டது.)

அதுபோல இப்போது...ஒரு பெரிய நடிகர்/பட்ஜெட் படம் வந்தால் 600, 700 காட்சிகள்( ஒரே நாளில் திரையிடப்பட்டு, வசூலும் ஆகி தயாரிப்பாளர்களை நஷ்டத்திலிருந்து காப்பாற்றியும் விடுகிறது.அதுபோல சிறுபட்ஜெட் படத் தயாரிப்பாளர்களும் காக்கப்பட வேண்டும்.அதற்காக தயாரிப்பாளர்கள் சங்கம் திரையரங்கு உரிமையாளர்களுடன் பேசி, வாரம் குறைந்தது 50 முதல் 100 காட்சிகளாவது குறைந்த பட்ஜெட் படங்களை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும்.அப்போதுதான், குறைந்த , தரமான பட்ஜெட் படங்கள் வெற்றிபெற முடியும்.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை வாக்களித்துத் தேர்ந்தெடுப்பதில் இந்தத் தயாரிப்பாளர்கள் பங்கும் உண்டு என்பதை மறக்காமல் இவர்களுக்கு ஆவண செய்து..இவர்கள் தயாரிப்பாளர்களாக நீடிக்க சங்கம் உதவ வேண்டும்..

செய்வார்களா?

Tuesday, February 24, 2015

குறுந்தொகை-195



தலைவி கூற்று
(தலைவன் கூறிச்சென்ற பருவ வரவின்கண், “எனக்குத் துன்பத்தைத் தரும் இம்மாலைக் காலத்தில் தாம் மேற்கொண்ட வினையை முடிக்கச் சென்றவர் எனது நிலையை உணராராயினர். அவர் யாண்டுள்ளாரோ!” என்று தலைவி கூறி வருந்தியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் தேரதரன்

இனி பாடல்-
 
சுடர்சினந் தணிந்து குன்றஞ் சேரப்
   
படர்சுமந் தெழுதரு பையுண் மாலை
   
யாண்டுளர் கொல்லோ வேண்டுவினை முடிநர்
   
இன்னா திரங்கு மென்னா ரன்னோ

தைவர லசைவளி மெய்பாய்ந் துறுதரச்
   
செய்வுறு பாவை யன்னவென்
   
மெய்பிறி தாகுத லறியா தோரே.


                          -தேரதரன்


 தடவுதலையுடைய அசைந்து வரும் காற்று, உடம்பின் கண் பரந்து தீண்ட, அதனால் அலங்காரம் செய்தலைப் பெற்றபாவையைப் போன்ற,  எனது மேனி, வேறுபாடுடையதாகுதலை அறியாதவராகிய தலைவர்,  தாம் விரும்பிச்சென்ற கருமத்தை முடித்துக் கொள்வாராய்,  கதிரவன் வெம்மை நீங்கி, அத்தகிரியை அடைய, நினைவு கூரும் துன்பத்தைமேற்கொண்டு,  வாரா நிற்கும்துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், எங்கே இருக்கின்றனரோ? அந்தோ! இம்மாலைக் காலம் துன்பத்தைத் தருவது, தலைவி வருந்துவாள்,  என்று நினையாராயினர்.

 

    (கருத்து) என்னுடைய மெலிவையறிந்து தலைவர் இன்னும் மீண்டாரல்லர்.

Monday, February 23, 2015

குறுந்தொகை-194



தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததை மேகத்தின்ஒலியாலும் மயிலின் மகிழ்ச்சியாலும் அறிந்த தலைவி தோழிக்குத் தன்ஆற்றாமைக் காரணத்தை அறிவித்தது.)


முல்லை திணை - பாடலாசிரியர் கோவதத்தன்

இனி பாடல்-

என்னெனப் படுங்கொ றோழி மின்னுபு
   
வானேர் பிரங்கு மொன்றோ வதனெதிர்
   
கான மஞ்ஞை கடிய வேங்கும்
   
ஏதில கலந்த விரண்டற்கென்

பேதை நெஞ்சம் பெருமலக் குறுமே.

.
                 -கோவதத்தன்



மேகம் எழுந்து,  ஒலிக்கின்ற செயல்ஒன்றுதானா எனக்குத் துன்பந் தருவது?  அந்தமேகம் ஒலித்ததற்கு எதிரே,  காட்டிலுள்ள மயில்கள்,  விரைவனவாகி ஆரவாரிக்கும்;இவ்வாறு அயன்மையையுடையனவாகிக் கலந்த இரண்டு பொருளாலும்,  எனது பேதைமையை யுடைய நெஞ்சம்,  பெரிய கலக்கத்தை அடையும்;  இந்நெஞ்சினது நிலை எத்தகையதென்று சொல்லப்படும்?

   

    (கருத்து) கார்ப்பருவம் வந்தமையின் என் மனம் கலங்குகின்றது.

    (கார்காலம் வந்துவிட்டதை மேகத்தின் முழக்கம் உணர்த்தியது;அதனெதிர் அகவிய மயிலின் ஆரவாரம் பின்னும் அதனை வலியுறுத்தியது; இது காமத்தை மிகுவிப்பது;)

Wednesday, February 18, 2015

குறுந்தொகை-193





தலைவி கூற்று
(தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்றதோழி,”நீ வரையு நாளளவும் நின் நலம் தொலையாமல் ஆற்றி யிருந்தாய்” என்று பாராட்ட அது கேட்ட தலைவி, “அஃது என் வலியன்று; தலைவன் செய்த தண்ணளியே அத்தகைய நிலையைத்தந்தது” என்றது.)

முல்லை திணை - பாடலாசிரியர் அரிசில் கிழார்
 இனி பாடல்-
 
மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன
   
இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை
   
தட்டைப் பறையிற் கறங்கு நாடன்
   
தொல்லைத் திங்க ணெடுவெண் ணிலவின்

மணந்தனன் மன்னெடுந் தோளே
   
இன்று முல்லை முகைநா றும்மே.


                           -அரிசில் கிழார்

 தோழி,  கள்ளை ஊற்றி வைத்த, நீலக்குப்பிகளைப் போன்ற,  சிறிய வாயையுடைய சுனையி ன்கண்உள்ளனவாகிய,  பிளந்த வாயையுடைய தேரைகள், கிளிகடிகருவியாகிய தட்டைப் பறையைப் போல ஒலிக்கும்நாட்டையுடைய தலைவன், களவுக் காலமாகிய பழைய திங்களில் நெடிய வெண்ணிலாவின் கண், என் நீண்ட தோள்களை, தழுவினான்; அதனால், இக்காலத்தும்,  அவன் மேனியினது முல்லையினது மொட்டறா மலரின் மணத்தை என் தோள்கள்வீசா நிற்கும்.



    (கருத்து) தலைவன் களவுக் காலத்துச் செய்த இன்னருள் இன்றளவும் மாறாது என்னைப் பாதுகாத்தது.


 

   ( கள் வைத்த கலம் சுனைக்கு உவமை.) இட்டுவாய்- இட்டிய வாய்; சிறிய வாய் (மதுரைக். 48.)

    தட்டைப் பறையென்றது தட்டையையே; தட்டை மகளிர் தினைப்புனத்திற் கிளி முதலியவற்றைக் கடிவதற்குரிய கருவிகளுள் ஒன்று;மூங்கிலைக் கண்ணுக்குக் கண் உள்ளாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசை யுண்டாக ஒன்றிலே தட்டப்படுவது

Wednesday, February 11, 2015

குறுந்தொகை-192




தலைவி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில், “அவர் வருவர்; நீ வருந்தற்க”என்று தோழி கூறி ஆற்றுவிப்பத் தலைவி, “இளவேனிற் பருவத்தும்அவர் வாராமையின் தனித்திருக்கும் யான் எங்ஙனம் வருந்தாமல்இருப்பேன்;” என்று இரங்கிக் கூறியது.)

பாலை திணை -பாடலாசிரியர் கச்சிப்பேட்டு நன்னாகையார்

இனி பாடல்-
 
ஈங்கே வருவ ரினைய லவரென
   
அழாஅற்கோ வினியே நோய்நொந் துறைவி
   
மின்னின் றூவி யிருங்குயில் பொன்னின்
   
உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை

நறுந்தாது கொழுதும் பொழுதும்
   
வறுங்குரற் கூந்த றைவரு வேனே.


                      -கச்சிப்பேட்டு நன்னாகையார்.

  உரை-


நோயால் வருந்திஉறையும் தோழி,  தலைவர் இவ்விடத்தேமீண்டு வருவார்,  வருந்தற்க என்று நீசொல்வதனால், இப்பொழுது, நான்அழாமல் இருப்பேனோ? மின்னுகின்ற இனிய இறகுகளையுடைய,  கரிய குயில், தன் மேனிபொன்னினது உரைத்த பொடி விளங்குகின்ற உரைகல்லைஒக்கும்படி,  மாமரத்தின் கிளையினிடத்து, நறிய பூந்தாதைக் கோதுகின்றஇளவேனிற் காலத்திலும், அவர் வாராமையால் புனையப் பெறாமலுள்ள வறியகொத்தாகிய கூந்தலைத் தடவுவேன்.


    (கருத்து) தலைவருடைய பிரிவைப் பொறுத்துக் கொண்டு யான்எங்ஙனம் வருந்தாமல் இருத்தல் இயலும்?

   (வறுங்குரற் கூந்தல் : மகளிர் தம் காதலரைப் பிரிந்த காலத்தில்கூந்தலைப் புனைதல், மலரணிதல் முதலியவற்றைச் செய்யார்; தலைவர்மீண்ட காலத்துப் புனைந்து மகிழ்வர்;)
 


Monday, February 9, 2015

குறுந்தொகை-191




தலைவி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில், “தம் பிரிவினால் யான்துன்புறுவேன் என்பதையும், தாம் பிரியுங்காலம் ஏற்றதன்று என்பதையும்கருதாமற் பிரிந்து சென்ற தலைவர் மீண்டு வரிற் புலந்து மறுப்பேன்”என்று தோழிக்குத் தலைவி கூறியது.)

முல்லை திணை -
 
இனி பாடல்-

உதுக்கா ணதுவே யிதுவென் மொழிகோ
   
நோன்சினை யிருந்த விருந்தோட்டுப் புள்ளினம்
   
தாம்புணர்ந் தமையிற் பிரிந்தோ ருள்ளா
   
தீங்குர லகவக் கேட்டு நீங்கிய

ஏதி லாள ரிவண்வரிற் போதிற்
   
பொம்ம லோதியும் புனையல்
   
எம்முந் தொடாஅ லென்குவெ மன்னே.



 தோழி,  இதனைஎன்னென்று சொல்வேன்?  வலியமரக்கிளையில் இருந்த, பெரியதொகுதியை உடைய பறவைக் கூட்டங்கள்,  தாம் துணைகளோடு சேர்ந்தமையால், துணைவரைப் பிரிந்தாருடையதுன்பத்தை எண்ணாதனவாய், இனிய குரலால் அழைப்பக் கேட்ட பின்பும், நம்மைப் பிரிந்த, அயற்றன்மையை உடையதலைவர்,  இங்கே மீண்டு வந்தால்,  மலர்களால் பொங்குதலைஉடைய கூந்தலையும் அலங்கரித்தலை யொழிக,  எம்மையும் தொடுதலை யொழிக, என்று கூறுவம்;  அங்ஙனம் செய்தலை,உவ்விடத்துப் பார்ப்பாயாக.

   

    (கருத்து) நம்மைப் பிரிந்த தலைவர் வரின், அவரை ஏற்றுக்கொள்ளேன்.

Sunday, February 8, 2015

குறுந்தொகை-190



தலைவி கூற்று
(பொருளீட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்திருந்த காலத்தில்தனிமையை யாற்றாத தலைவி தோழியை நோக்கி, “நடுயாமத்தில் யான் துயிலின்றிப் படும் துன்பத்தைத் தலைவர் அறிவாரோ?” என்று கூறியது.)

முல்லை திணை -பாடலாசிரியர் பூதம்புல்லன்

இனி பாடல்

 
நெறியிருங் கதுப்பொடு பெருந்தோ ணீவிச்
   
செறிவளை நெகிழச் செய்பொருட் ககன்றோர்
   
அறிவர்கொல் வாழி தோழி பொறிவரி
   
வெஞ்சின வரவின் பைந்தலை துமிய

உரவுரு முரறு மரையிரு ணடுநாள்
   
நல்லே றியங்குதோ றியம்பும்
   
பல்லான் றொழுவத் தொருமணிக் குரலே.


                       -பூதம்புல்லன்

 

   தோழி,  நெறிப்பை உடைய கரிய கூந்தலோடு, பெரியதோள்களைத் தடவி என்னைத் தேற்றி, இறுகச் செறித்த வளைகள் நெகிழும்படி, தாம் ஈட்டும் பொருளின் பொருட்டு என்னைப்பிரிந்து சென்ற தலைவர், புள்ளிகளையும், பத்திக்கீற்றுக்களையும் மிக்க சினத்தையுமுடைய பாம்புகளின்,  பசிய தலைகள்துணியும்படி, வலியையுடைய இடியேறு முழங்குகின்ற, பாதியிரவின் கண்,  பல பசுக்கள் உள்ள தொழுவத்தில்,  நல்ல ஆனேறுசெல்லுந் தோறும் ஒலிக்கின்ற,  ஒற்றைமணியின் குரலை,  அறிவாரோ?



    (கருத்து) இங்கே நான் படும் துன்பத்தைத் தலைவர் அறியார்போலும்!

(பல பசுக்கள் கட்டிய தொழுவத்திற்கேட்கும் ஒரு மணிக்குரல், அவை அந்நல் லேற்றோடு இன்புற்றிருக்கும்நிலையை நினைவுறுத்தி, “இவை பெற்றபேறு யாம் பெற்றிலேமே!”என இரங்குதற்குக் காரணமாயிற்று. அக்குரலை நள்ளிரவில் தான்கேட்பதாகக் குறிப்பித்தாள்; இதனால் அவள் நள்ளிரவிலும் துஞ்சாமை தெரிகிறது.)

Friday, February 6, 2015

குறுந்தொகை-189



தலைவன் கூற்று
(வேந்தனது வினைமேற் செல்லாநின்ற தலைவன் தன் பாகனைநோக்கி, “இன்று விரைந்து சென்று வினைமுடித்து, நாளைத் தலைவிபால்மீண்டு வருவேமாக” என்று கூறியது.)

பாலை திணை - பாடலாசிரியர் மதுரை ஈழத்துப் பூதன்றேவன்

இனி பாடல்-

இன்றே சென்று வருவது நாளைக்
   
குன்றிழி யருவியின் வெண்டேர் முடுக
   
இளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி
   
விசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக்

காலியற் செலவின் மாலை யெய்திச்
   
சின்னிரை வால்வளைக் குறுமகள்
   
பன்மா ணாக மணந்துவக் குவமே.




                              -மதுரை ஈழத்துப் பூதன்றேவன்.

    .

 பாக,  இன்றைக்கே வினையின் பொருட்டுப் புறப்பட்டுப் போய், நாளை மீண்டு வருவேமாக.  குன்றினின்று வீழும் அருவியைப் போல, யானைத் தந்தத்தாற் செய்த வெள்ளிய தேர் விரைந்துசெல்ல,  இளம்பிறையைப் போன்ற, விளங்குகின்ற ஒளியையுடையஅத்தேரினது சக்கரம், வானத்தினின்றும், வீழ்கின்ற கொள்ளியைப் போல, பசிய பயிர்களைத் துணிப்ப,  காற்றைப் போன்ற இயல்பையுடைய வேகத்தினால், மாலைக் காலத்தில் தலைவியிருக்கு மிடத்தையடைந்து,சிலவாகிய வரிசையையுடைய வெள்ளிய வளைகளை யணிந்த அவளது,  பலவாக மாட்சிமைப் பட்ட மேனியை, மணந்து உவப்போம்.

.

    (கருத்து) இன்று சென்று வினைமுடித்து விட்டுத் தலைவியின்பால் நாளை மாலையில் வந்து எய்துவோமாக.

    (வி-ரை.) வேந்தனால் செய்ய வேண்டுமென்று சுமத்தப்பட்ட காலத்தில்.செயலை செய்து முடித்து நாளை வந்து தலைவியிடம் வருவோமாக