Monday, September 15, 2014

குறுந்தொகை - 106



தலைவி கூற்று
(பரத்தையிற் பிரிந்த தலைவன் தான் குறைவில்லா அன்புடையனென்று கூறித் தூது விடுப்ப, அதனையறிந்த தலைவி, “தலைவர் உள்ளத்தாற் பொய்யாது அன்புடையராயின் யாமும் பழைய அன்புடையே மென்பதை அவருக்குக் கூறி விடுப்போம்” என்று தோழிக்குக் கூறும் வாயிலாகத் தான் வாயில் நேர்ந்ததைப் புலப்படுத்தியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-


புல்வீ ழிற்றிக் கல்லிவர் வெள்வேர்
   
வரையிழி யருவியிற் றோன்று நாடன்
   
தீதி னெஞ்சத்துக் கிளவி நம்வயின்
   
வந்தன்று வாழி தோழி நாமும்

நெய்பெய் தீயி னெதிர்கொண்டு்
   
தான்மணந் தனையமென விடுகந் தூதே.

                     -கபிலர்

     (பி-ம்.) 1. ‘வீழாற்றிக்’, ‘வீழித்திக்’; 3. ‘தீதின்னெஞ்சத்துக்’; 4. ‘நயந்தன்று’; 6. தாமளந்தனைய, தாம்வரைந்தனைய.

 புல்லிய விழுதை யுடைய இற்றிமரத்தினது,  மலையிலுள்ள கற்களிற் படர்கின்ற வெள்ளிய வேர்,  மலைப்பக்கத்தில் வீழ்கின்ற அருவியைப்போலத் தோன்றும்,  நாட்டையுடைய தலைவன்,  குற்றமற்ற நெஞ்சினால் நினைந்து கூறிய சொற்களை உரைக்கும் தூது, நம்மிடத்து வந்தது; நாமும்,  நெய்யைப் பெய்த தீயைப்போல,  அத்தூதை ஏற்றுக்கொண்டு,  அவன் என்னை மணந்த காலத்தில் இருந்த அன்புடைய நிலையினேம் என்று கூறி,  தூதுவிடுவோம்.


    (கருத்து) தலைவனை நாம் ஏற்றுக் கொள்வோமாக.

     (வி-ரை.) தலைவன் பரத்தையிற் பிரிந்தானாக அவன் அன்பிலனென் றெண்ணிய தலைவியின்பால் அவன் விடுத்த தூது, “தலைவன் தலை நாளன்ன அன்பினன்; அவனை ஏற்றருள வேண்டும்’’ என்று கூறியது கேட்ட அவள், “அவன் அத்தகையனாயின் நாமும் மணநாளின்கண் வைத்திருந்த அன்பிற்குறைவின்றியுள்ளேமென்று தூது விடுவேம்” என்று தோழிக்குக் கூறியது இது.

 

1 comment:

Unknown said...

நான் ஓய்வு பெற்ற வங்கி ஊழியன். வாசகர்களின் பல்வேறுபட்ட எண்ணங்களைத் தொகுப்பதே இந்த விவாதக்கலையின் நோக்கமாகும். குறிப்பிட்ட கால இடைவெளியில் வாசகர்களுக்கு பாராட்டுகளும் என்னால் முடிந்த பரிசினையும் தர முடிவெடுத்துள்ளேன். தோழர்களும் அன்பர்களும் தங்களின் பங்களிப்பை அளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

http://vivadhakalai.blogspot.com/