Saturday, September 13, 2014

குறுந்தொகை - 105



தலைவி கூற்று
(தலைவன் நெடுங்காலம் வரையாமல் பிரிந்திருந்தானாக, “தலைவன் நட்பு அவன் வராததால் உண்மையாகாமல் என் நினைவளவில் நின்று துன்புறுத்துகின்றது” என்று கூறித் தலைவி வருந்தியது.)

குறிஞ்சி திணை-பாடலாசிரியர் நக்கீரர்

இனி பாடல்-
 
புனவன் றுடவைப் பொன்போற் சிறுதினைக்
   
கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்
   
அறியா துண்ட மஞ்ஞை யாடுமகள்
   
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்

சூர்மலை நாடன் கேண்மை்
   
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே.

                   -நக்கீரர்

உரை-

குறவனுக்குரிய தோட்டத்தில் விளைந்த பொன்னைப் போன்ற சிறு தினையில் புதியதை, உண்ணும் தெய்வத்திற்குப் பலியாக இட்ட வளர்ந்த கதிரை தெரியாது உண்ட மயில், ஆடுமகள்(கணிகை) வெறியாடுகின்ற அழகைப் போல வெம்மையுற்று நடுங்குவதற்கு இடமாகிய தெய்வங்கள் உறையும் மலைநாட்டையுடைய தலைவனது நட்பு கண்ணீர் மிக்க கண்களோடு நான் நினைந்து துன்புறுதற்குக் காரணமாகியது.

   
     (கருத்து) தலைவன் வராததால் அவனை நினைந்து துன்புறு கின்றேன்.

, (மலைவாழ் மக்கள் தினையை  விளைத்து அதில் தோற்றும் முதற் கதிரைத் தெய்வத்துக்குப் பலியாக இடுதல் மரபு.)

No comments: