Saturday, August 16, 2014

குறுந்தொகை - 79


தலைவி கூற்று
(தலைவனது பிரிவினால் வருந்திய தலைவி தோழியை நோக்கி, “என்பாற் சொல்லின் நான் உடம்பட மாட்டேனென்னும் கருத்தால், சொல்லாமற் பிரிந்து சென்ற தலைவர் தாம் சென்ற ஊரிலேயே தங்கிவிட்டாரோ?” என்று கூறி வருந்தியது.)

பாலைத் திணை - பாடலாசிரியர் குடவாயிற் கீரனக்கன்

இனி பாடல்-

.  
கான யானை தோனயந் துண்ட
   
பொரிதா ளோமை வளிபொரு நெடுஞ்சினை
   
அலங்க லுலவை யேறி யொய்யெனப்
   
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்

அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்ச்
   
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்
   
கொல்லே மென்ற தப்பற்
   
சொல்லா தகறல் வல்லு வோரே.

                           -குடவாயிற் கீரனக்கன்

உரை-

(தோழி) யாம் தாம் பிரிவதற்குப் பொருந்தேமென்ற தவற்றினால் ,சொல்லாமல் செல்லுதலில் வன்மையுடையோராகிய தலைவர் காட்டு யானையால் பட்டை விரும்பி உண்ணப்பட்ட பொறந்த அடியையுடைய ஓலைமரத்தினது காற்று அடிக்கும் நெடிய கிளையினது அசைதலையுடைய வற்றற்கொம்பில் ஏறி ஒய்யென தனிமையையும் வருத்ததையும் வெளிப்படுத்தும் குரலையுடையவனாகி ஆண்புறாக்கள் பெண்புறாக்களை அழைக்கும் பாலை நிலத்திற் பொருந்திய அழகிய தடிகளையுடைய சிற்றூரில் தங்கினரோ!


     (கருத்து) தலைவர் இனி மீளாரோ?

     (வி-ரை.) பாலைநிலத்தின் வெம்மையால் யானை ஓமை மரத்தின் தோலை உண்டது.
 
     பாலை நிலத்துள்ள ஆண்புறவு தன் பெடையை விரும்பி அழைக்கும் இடத்தில் தங்கினாரோ வென்றது, பறவையினங்களும் தம் துணையின்பால் அன்பு வைத்து ஒழுகும் அவ்விடத்தில் தங்கினார் என்றால், அங்கு நடைபேறும் நிகழ்ச்சி என்பால் வந்து சேர்க்கும்.ஏன்பதையும் குறிப்பால் உணர்த்துகிறது.
 ஒல்லேம் -  நாம் உடம் படாமையைத் தவறாக நினைத்து அதுபற்றிச் சினந்து அங்கே தங்கி விட்டனரோ வென்பது தலைவியின் ஐயம்.

No comments: