Sunday, July 27, 2014

குறுந்தொகை - 57


தலைவி கூற்று
(தாய் முதலியவர்களால் காக்கப்படும் தலைவி, தலைவனைப் பிரிந்திருத்தற்கு ஆற்றாளாகித் தோழியை நோக்கி, "தலைவரும் யானும் தனித்திருப்பினும் ஒன்றாக இருந்து ஒருங்கே உயிர் விடுதல் நன்று" என்று கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் சிறைக்குடியாந்தையார்
   
பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன
   
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
   
பிரிவரி தாகிய தண்டாக் காமமொ
   
டுடனுயிர் போகுக தில்ல கடன்றிந்

திருவே மாகிய வுலகத்
   
தொருவே மாகிய புன்மைநா முயற்கே.

                       -சிறைக்குடியாந்தையார்

உரை-

தோழி. செய்ய வேண்டியவற்றை அறிந்து, பிறவிதோறும் தலைவனும் தலைவியுமாக இருவரும் , இவ்வுலகத்தில், பிரிவினால் ஒருவராகிய.துன்பத்தினின்றும் நாம் நீங்கி தப்புதற்கு, பூவானது நம் இடையிலே பட்டாலும், அக்காலம் பல ஆண்டுகள் கடந்தாற்போன்ற துன்பத்தை உண்டாக்கும் தன்மையையுடைய, நீரினிடம் உறைகின்ற மகன்றிற்பறவைகளின் புணர்ச்சியைப் போல பிரிதல் அருமையாகிய நீங்காத காமத்தோடு ஒன்றாக எங்கள் உயிர் போகவே என் விருப்பம்.

    (கருத்து) தலைவரைப் பிரிந்திருத்தலினும் உயிர்நீத்தல் சிறப்புடையது.

மகன்றில் என்பது நீர் வாழ் பறவைகளில் ஒன்று.இப்பறவைகள் ஆணும், பெண்ணும் பிரிவின்றி இணைந்து வாழும் தன்மையுடையன.இவை மலர்களிடையே உடனுறையும் காலம், அப்பூ இடையே வரக்கூடுமாதலால் பூவின் கண் திரியும் மகன்றில் எனச் சொல்வர்

No comments: