Friday, July 25, 2014

குறுந்தொகை -55



தோழி கூற்று
(தலைவன் வேலிப்புறத்திலே கேட்கும் அணிமையில் நின்ற காலத்தில், அவன் விரைந்து மண்ந்து கொள்ள வேண்டுமென்பதை அறிவுறுத்துவளாய், “இவ்வூர் சிலநாளே வாழ்வதற்குரியதாகவும், இன்னாமையை யுடையதாகவும் இருக்கின்றது” என்று கூறி, மணக்காவிடின்
 தலைவி உயிர்நீப்பாளென்று தோழி புலப்படுத்தியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர்  நெய்தற் கார்க்கியர்

இனி பாடல்-

 
மாக்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப்
   
பொங்குபிதிர்த் துவலையொடு மங்கு றைஇக்
   
கையற வந்த தைவர லூதையொ
   
டின்னா வுறையுட் டாகும்

சின்னாட் டம்மவிச் சிறுநல் லூரே.

                      -நெய்தற் கார்க்கியர்


உரை-

இந்த சிறிய நல்ல ஊரானது, கரிய கழியினிடத்திலேயுள்ள நீலமணி போன்ற பூக்கள் குவியும்படி தூய அலையிடத்துப் பொங்கிய பிசிராகிய துளியோடு மேகத்தை பொருந்தி, பிரிந்தோர் செயலறும்படி தடவுதலையுடைய வாடைக்காற்றோடு துன்பத்தைத் தரும் மாலைப்பொழுதுடன், (தலைவி)தங்குமிடத்தையுடையதாகின்ற சில நாட்களையுடையது.

 (கருத்து) தலைவன் வாராவிடின் தலைவி இன்னும் சில நாட்களே உயிர் வாழ்வாளாதலின் அவன் விரைவில் மணந்து கொள்ள வேண்டும்.(அவளது உயிர் நீடிக்க)

(வி-ரை.) மணிப்பூ என்றமையால் நீலமணி போன்ற முள்ளியையும், . இவை கூம்பவென்றமையின் மாலைப் பொழுதையும் கொள்ள வேண்டும்.

No comments: