Sunday, March 31, 2013

ஜெயகாந்தனும்... ராஜுமுருகனின் வட்டியும்..முதலும்..

                               


ராஜுமுருகனின் 'வட்டியும் முதலும்' கட்டுரைத் தொடர் நான் விடாமல் படித்து மகிழ்ந்து வருகிறேன்.அந்த அளவிற்கு அது 'சுவையோ சுவை"

அதே போன்று அந்த நாட்களில் ஜெயகாந்தனின் படைப்புகள்..அது கட்டுரைகள் ஆனாலும் சரி, சிறுகதைகள் ஆனாலும் சரி..தொடர் ஆனாலும் சரி.. ஆண்டுகள் பலவாகியும் மனதை விட்டு அகலாதவை.அப்படிப்பட்ட அவர் படைப்புகளில், அவரது ,'அம்மா நான் இருக்கிறேன்' என்ற சிறுகதையும் ஒன்று.

அக்கதையை இந்த வாரம் ராஜுமுருகன் நினைவுபடுத்தி விட்டார்.அக்கதை இதோ...ராஜுவின் வரிகளிலேயே..

'ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன் அம்மாவுடன் வசித்து வருவான்.கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும்.அம்மாவோடு பேருந்தில் போகும் போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான்.ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும்.அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'சாரி.' கேட்பாள்.அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும்.ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் விழுந்து விடுவான்.ரயில் வருகிற நேரம் ஒரு குஷ்டரோகி பிச்சைக்காரன், அந்த இளைஞனைக் காப்பாற்றி விடுவான்.பக்கத்தில் இருக்கும் ஒரு கல்மண்டபத்திற்கு அழைத்துப்போய் அந்த இளைஞனிடம் சொல்வான்,' நான் எப்படி இருக்கேன்னு பார்த்தியா...அன்னிக்கு ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையைக் காப்பாத்தினேன்.அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க..அவ்வளவு அருவருப்பா இருக்கு என்னையப் பார்க்க.நானே உயிரோட இங்க வாழ்ந்துட்டு இருக்கேன்..உனக்கெல்லாம் என்ன தங்கம்..' எனப் பேசி அந்த இளைஞனின் நம்பிக்கையைத் தூண்டி விடுவான்.தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு அவன் தூங்குவான்.காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள்.அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் என பயந்து ஒடிவருவாம் அவன் அம்மா.'அம்மா..நான் இருக்கேன் அம்மா..' என அந்த இளைஞன் கத்திக் கொண்டே வருவான்.அங்கே அந்த பிச்சைக்காரன் செத்துக்கிடப்பான்.இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன், 'இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக்கிறான்..நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே..' என யோசித்து தண்டவாளத்தில் குதித்திருப்பான்.செத்துப்போன அவனைப் பார்த்தப்படி அந்த இளைஞன் சொல்வான், 'அம்மா,..அவன் எனக்கு வாழக்கத்துக் கொடுத்தான்.நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்..'

எவ்வளவு அருமையான கதை..

இக்கதையை நினைவூட்டிய ராஜுமுருகனுக்கு நன்றி..

நல் எழுத்துகள்..இலக்கியங்கள் சாகா வரம் பெற்றவை.அப்படிப்பட்ட பல படைப்புகளைக் கொடுத்த ஜெயகாந்தனுக்கு...நன்றி சொல்வதைத் தவிர..என்னைப்போன்ற ரசிகனுக்கு வேறென்ன செய்துவிட முடியும்...

  .



Monday, March 25, 2013

தைரியத்தை இழக்கிறார்களா திராவிடத் தொண்டர்கள்....




ஒரு காலத்தில்..திராவிடக் கட்சியைச் சேர்ந்தவர் என்றால்...தைரியமானவர் என்றும் பொருள் கொள்ளும் வகையில் இருந்தனர் தொண்டர்கள்..தலைவர்கள்.

திராவிட முன்னேற்ற கழகம் உருவானபோது.. அதில் இருந்த பலம் மிக்க..தொண்டர்கள் ஆதரவு மிக்க, தனக்கென தன்னை பின்பற்றுவோர் இருக்க பல வலிமையான தலைவர்கள் இருந்தனர்.

உதாரணத்திற்கு...அண்ணா...நேர்மைக்கு பெயர்போன தலைவர்..அவருக்கு ஆதரவாக, சம்பத், நெடுஞ்செழியன்,மதியழகன்,சாதிக், எம்.ஜி.ஆர்.,ராஜாராம்..இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இவர்களை நம்பி பல லட்சம் தொண்டர்கள்..எந்த தியாகமும் செய்யத் தயாராய்..

அவ்வளவு ஏன்...அரசியலில் ஈடுபடக்கூடாது என்று கூறும் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நான், அநையும் மீறி...ஏ.வி.பி. ஆசைத்தம்பி அவர்களுக்கு அம்பத்தூரில் ஆதரவாக வாக்கு சேகரித்துள்ளேன்.

ஆனால்..இன்றைய தொண்டர்களிடம் அந்த அளவு வீரமோ..கட்சிப் பற்றோ உள்ளதா என்றால்..தலையை இடமிருந்து வலம் ஆட்ட வேண்டியதுதான்.

கருத்து வேறுபாடால் சம்பத் , அண்ணா கலத்திலேயே பிரிந்து தனிக்கட்சி தொடங்கி தோல்வியடைந்தார்.

அண்ணாவின் மறைவிற்குப் பின்...முதல்வர் யார்..என்ற கேள்வியின் போது..பரவலாக நெடுஞ்செழியன் பெயர் பேசப்பட்டாலும், தொண்டர்களின் ஆதரவைத் தவிர..எம்.ஜி.ஆரின் பக்கபலம் கலைஞரை தலைவராக தேர்ந்தெடுத்தது.

பின்னர்..இதேக் கட்சியைச் சேர்ந்த..எம்.ஜி.ஆர்., தனிக் கட்சி ஆரம்பித்து..தன் சொந்த செல்வாக்கில் ஆட்சியைப் பிடித்தார்.நெடுஞ்செழியன் தனிக்கட்சி ஆரம்பித்து..ஆதரவு இல்லாததால் அ,தி.மு.க.வில் இணைந்தார்.வை.கோ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து ம.தி.மு.க., ஆரம்பித்தார்.

இப்படியாக தி.மு.க.,விலிருந்து பலர் பிரிந்து தனிக்கட்சிகளை ஆரம்பித்தாலும்..தாய்க் கட்சி சேதமடையவில்லை.

ஆனால்...சமீப காலங்களாக நடந்துவரும் நிகழ்ச்சிகளைக் கண்டால்...இவர்கள்..கட்சியை உடைத்து, அழித்து...புதைத்துவிடுவார்கள் போல இருக்கிறது.

இதற்கான காரணம் என்ன..

என சற்று யோசித்தால்..கட்சித் தலைமையிடம் முன்னர் இருந்த கண்டிப்பு இல்லை..

தலைவர் என்றால்..ஒரு பயம் கலந்த மரியாதை இருக்க வேண்டும்..அது இன்று மிஸ்ஸிங்.

தொண்டர்களுக்கும்..மக்களுக்கும் கட்சி தலைமையிடமும், கட்சியிடமும் சற்று அவநம்பிக்கை எற்பட்டு விட்டது..

இக்கட்டத்தில்..பாரம்பரியம் மிக்க இக்கட்சி செல்வாக்கை இழக்காமல் இருக்க வேண்டுமாயின்..

மீண்டும் தலைமையிடம்..கண்டிப்பும், தவறு யார் புரிந்தாலும் அதை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்கும் திறனும் வேண்டும்.

இது இல்லாவிடின்...

கட்சி மக்கள் ஆதரவை மட்டுமல்ல..தொண்டர்களின் ஆதரவையும் இழந்து...அழிவை நோக்கிப் போவதை தடுக்க முடியாது.

Sunday, March 24, 2013

மௌனராகமும்...மணிரத்தினமும்..




1970 களில் வந்த தமிழ்ப்படங்களின் தரத்தைப் பார்த்து..அதை மாற்றும் எண்ணத்துடனே திரையுலகில் பிரவேசித்ததாக பொருள்படும்படி மணிரத்தினம் கூறியிருந்ததைப் பார்த்த போது..இவர் மீது பெரு மதிப்பு வைத்திருந்த நான், "சீ..இவரும் இப்படித்தானா?" என்று எண்ணினேன்.

'கடல்' படம் தோல்வியடைந்த போதும்...'பெருக்கத்து வேண்டும் பணிவு' எனபதை மறந்ததால், கிடைத்த தண்டனை என எண்ணினேன்.

ஆனால்...நேற்று ஆதித்யா சேனலில்..மாலை..இவரது 'மௌனராகம்' படம் ஒளிபரப்பானது..

மனிதன் என்னமாய் எடுத்துள்ளார்..

இளமையும்..குறும்பும், ததும்பும் ரேவதியின் பாத்திரம்...பின்னர் சோகமாய் மாறியும் பிரகாசிக்கிறது.

சுறு சுறு என சுற்றித் திரியும், எதற்கும் பயப்படாத .. கார்த்திக்(மிஸ்டர் சந்திரமௌலி..காமெடி..இவரின் பாத்திரத்திற்கு..ஒரு சோறு பதம்) .என்னமாய் வந்திருக்க வேண்டிய நடிகர்...!  ம்..

எதிலும் நிதானம்..கண்ணியமான மோகன் பாத்திரம்..

தமிழ் கற்று கொள்ளும் சர்தார்ஜி நகைச்சுவை.

என்னைத் தொடும் போது.."கம்பிளி பூச்சி ஊறுவதைப் போல இருக்கு" போன்ற கூர்மையான வசனங்கள்...

பத்து நிமிடம் படம் பார்க்கலாம் என உட்கார்ந்த என்னை..படம் முழுக்க பார்க்க வைத்து..ஆனால் அதே சமயம் பத்து நிமிடங்களே பார்த்த உணர்வை ஏற்படுத்தி.....

"மணி உண்மையிலேயே,,யூ ஆர் கிரேட்"

இப்போதெல்லாம் என்னவாயிற்று உங்களுக்கு..

நான்  பழைய மணிரத்தினம்தான் என்பதை எங்களுக்கு மீண்டும் தரமான படைப்புகள் மூலம் நிரூபியுங்கள்.

நான் அறிவுஜீவி..நான் எடுப்பதையெல்லாம் மக்கள் பார்ப்பார்கள்..என்று நினைக்கும் இயக்குநர்களில் ஒருவராக ஆவதை தவிர்ப்பீர்களாக...

Saturday, March 23, 2013

ஆனந்தவிகடனும்...ஓவியங்களும்...

                 
                         (சாவியின் 'வாஷ்ங்டனில் திருமணம்' தொடருக்கு கோபுலுவின் ஓவியம்)

வார, மாத இதழ்களில்..பல கதைகளைப் படிக்கும் முன் , அக்கதைகளுக்கு வரையப்பட்ட ஒவியங்கள் மனதைக் கவரும் வண்ணம் இருந்தால், உடனடியாக வாசித்துவிடும் இயல்புடையவன் நான்.அப்படி தத்ரூபமாக வரையும் ஒவியத்தையும், ஓவியர்களையும் என்னைப்போல ரசிப்பவர்கள் பலர் இருக்கக் கூடும்.

நான் சிறுவனாக இருக்கையில், .வரையப்பட்ட ஓவியத்தில் இருந்த ஓவியர் பெயரை மறைத்துக் கொண்டு, அந்த ஓவியத்தை வரைந்தவர் யார் எனக் கேட்டால் சரியாக சொல்லிவிடுவேன்.

அப்படி மனம் கவர்ந்த ஓவியர்களில், கோபுலு ஒருவர்.தில்லானா மோகனாம்பாளுக்கு இவர் வரைந்த மோகனாவும், ஷண்முக சுந்தரமும் இன்னமும் கண்களில் நிற்கின்றன.ஜெயகாந்தனின் 'பாரீசுக்குப் போ' வில் கோபுலுவின் சித்திரப் பங்கும் பேசப்பட்டது.

அதேபோன்று, பொன்னியின் செல்வனுக்கு, மணியம் வரைந்த ஓவியங்களும், பின்னர் அதேத்தொடர் வந்தபோது மணியன் செல்வன் வரைந்த ஓவியங்களும் மறக்க முடியாதவை.

கல்கியில், நா.பா. கதைகளுக்கும், கி.ராஜேந்திரன் கதைகளுக்கும்..வினு போட்ட ஓவியங்கள் சிறப்பு.வினு வரைந்த அனுமார் ஓவியம் ஒன்று, இன்னமும் பல வீடுகளின் பூஜை அறையை அலங்கரித்துள்ளது.

மாயா, லதா, கல்பனா, சிம்ஹா, என பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது, .ஓவியங்களை நினைக்கையில். குமுதத்தில்,வர்ணம் வரைந்த ஓவியங்களில்...யதார்த்தம் இருக்கும்.பின்னர் இதே பத்திரிகையில் சுஜாதா கதைகளுக்கு ஜெயராஜ் ஒவியங்கள் மெருகூட்டின.மாருதி வரைந்த பெண்கள் அழகோ அழகு.

இப்படி..சங்கீதம் மட்டுமல்ல, தொடர்கதைகள் மட்டுமல்ல..ஒவியங்களும் நம்மை மனம் கவர வைத்தவை.

கலைமகளில்..ஜி.கே.மூர்த்தியின் லைன் டிராயிங்க் அருமை.

கல்கண்டில்..தமிழ்வாணன் கதைகளுக்கு..'ராகி' வரைந்த ஓவியங்களில் ''சங்கர்லால்' உண்மையான பாத்திரமாக திகழ்ந்தார்.

இன்றைய பத்திரிகைகளிலும்..பலர் சிறப்பாக அப்பணியை ஆற்றிவருகின்றனர்.ஆனால்...இந்த வார விகடனில்...கண்னைக் கவ
ர்ந்த வகையில்..'தள்ளாடும் தமிழகம்..திண்டாடும் டாஸ்மாக்' கட்டுரைக்கும், ராஜுமுருகனின்'வட்டியும் முதலுக்கும்' ஓவியம் தீட்டியுள்ள ஹாசிப் கானின் ஓவியங்கள் எவ்வளவு தத்ரூபமானவை.புத்தகத்தை மடித்து வைத்தாலும்..இவை..கண்களை விட்டு அகல மறுக்கின்றன.

ஹேட்ஸ் ஆஃப்...ஹாசிப் கான்.

(டிஸ்கி...தெய்வப் படங்களையும், கோவில்களையும், ஓவியம் மூலம் கண்முன் கொணர்ந்த ஓவியர்களை இவ்விடுகையில் ஸேர்க்கவில்லை)

வார இதழ்கள்- ஓவியம்

Friday, March 22, 2013

எருதின் நோய்


எருதின் நோய்

காக்கை அறிய வாய்ப்பில்லை

இழப்பின் வலி

இழந்தவரே அறிவார்..

பாறாங்கல்லிலும் ஈரம் இருக்குமாம்

அதனைவிடக் கடினமானவர்க்கு

கனிவென்றால் தெரியுமா?

பதவி தந்த சுகம்..

பல்லாயிரம் உயிர் நாசம் அறியுமா?

இன்றைய சரித்திரம் படிக்கும்

நம் வாரிசுகள்...

எள்ளி நகைக்கட்டும்

எண்ணி எண்ணி நம் தலைவர்கள்

சுயநலத்தை...

Wednesday, March 20, 2013

தமிழுக்கு அமுதென்று பெயர் -12




இளம் தம்பதிகள் ..ஓருயிர் ஈருடல் என இருப்பவர்கள்..ஒருவர் இன்றி மற்றவரால் வாழமுடியாது என்னும் நிலையில் உள்ளவர்கள்..

கணவன் காலை அலுவலகம் செல்கிறான்..மாலை ஆறு மணிக்குள் திரும்பி வருவதாகக் கூறிவிட்டு..

புது இடம்..வீட்டில் தன்னந்தனியாக மனைவி..பேச்சுத் துணைக்கும் ஆள் இல்லை..என்ன செய்வாள் பொழுதைக் கழிக்க..

புத்தகம் படிப்பாள்..சிநேகிதிகளுடன் அலைபேசியிலோ..தொலை பேசியிலோ உரையாடுவாள்..மாலை ஆறு மணி ஆனதுமே கணவனின் வருகையை எண்ணி வழி மீது விழி வைத்து காத்திருப்பாள்..

ஏழு,எட்டு.ஒன்பது........பத்து மணி ஆயிற்று ..சென்றவன் வரவில்லை..அவனுக்கு என்ன ஆயிற்றோ எனக் கவலை..அதே சமயம்..அலை பேசி இருக்கிறது,தொலைபேசி இருக்கிறது..விவரம் தெரிவிக்கலாம் அல்லவா? நான் ஒருத்தி தனியாய் இருக்கிறேன் என்ற கவலையே இல்லையே..வரட்டும்...வேண்டாம்..வேண்டாம்..அவர் வந்தால் என்ன..வராவிட்டால் என்ன..என்னைப் பற்றி கவலைப் படாதவர் பற்றி நான் ஏன் கவலைப் பட வேண்டும்..என அவனிடம் ஊடல் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்..

ஆனால் இதுவே சங்க காலத்துப் பெண்ணுக்கு நேர்ந்திருந்தால்..அவள் ஆற்றாமையை தெரிவிக்க ..அவளது உதவிக்கு வருவது தோழி மட்டுமே..வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராத தலைவனைப் பற்றி சொல்கிறாள்..

(முல்லைத்திணை-தலைவி கூற்று)

வாரார் ஆயினும் வரினும் அவர்நமக்கு
யார் ஆகியரோ? தோழி! நீர
நீரப்பைம்போ துளரி, புதல
பீலி ஒன்பொறிக் கருவிகளை யாட்டி
நுண்முள் ஈங்கைச் செவ்வரும் பூழ்த்த
வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று
இன்னா தெறிதரும் வாடையோடு
என் ஆயினாள் கொல் என்னா தோரே
என்னா யினல்கொல் என்னா தோரே...
- கிள்ளி மங்கலங்கிழார்

மழைக்காலத்திற்குள் திரும்பி வருவேன் என்ற தலைவன் வெகுநாட்களாயும் வராததால் அவனைத் திட்டி தோழியிடம் சொன்னவை இவை..

இதற்கான அர்த்தம்..

அவர் இனி வராவிட்டாலும், வந்தாலும் அவர் இனி எனக்கு யாரோதான்.நீரில் மலரும் மொட்டுகளை மலர்த்தி, மயில்தோகை போன்ற கருவிளை மலர்களை அசைத்து, நுண்ணிய முட்களையுடைய ஈங்கைமர அரும்புகளை விரித்து,, வண்ண மலர்களை உதிர்த்தபடி சில்லென வீசி துன்பம் தரும் இந்த வாடைக்காற்றில் அவள் என்ன ஆனாளோ? என்று வருந்தாதவன் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன?

பாடலில் மலர்களின் துன்பத்தைக் கூறுவதன் மூலம்..இவளும் குளிரிலும்,மழையிலும்,வருந்துகிறாளாம்.

குறுந்தொகையில் வரும் பாடல் இது.


Tuesday, March 19, 2013

வாய் விட்டு சிரிங்க...




நிருபர்-(நடிகரிடம்) தொடர்ந்து உங்க படங்க தோல்வி அடையுதே..உங்க தோல்வியின் ரகசியம் என்ன?

2)தலைவர்-(வாக்கு சேகரிக்கும் வீட்டில்) நான் உங்க வீட்டுப் பிள்ளை
வாக்காளர்-ஐயோ..வேணாம்யா..ஏற்கனவே இரண்டு பிள்ளைகளை வைச்சுக்கிட்டு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன்

3)மன்னர்-(அமைச்சரிடம்) மந்திரியாரே!..யானை ஏற்றம் தெரியும்..குதிரை ஏற்றம் தெரியும்..ஆனால்..விலைவாசி ஏற்றம் என்கிறார்களே...அப்படி என்றால் என்ன

4)கோமா நிலையில் உள்ள நம்ம தலைவர் திடீர்னு எழுந்தா என்ன ஆகும்
'கோமா வெற்றி கொண்டான்'னு பட்டம் தரச்சொல்லி..பாராட்டுவிழாவும் நடத்தச் சொல்லுவார்

5)தயாரிப்பாளர்-(கதாசிரியரிடம்) உங்க கதையைச் சொல்லுங்க
கதாசிரியர்-கதாநாயகி ஒரு ஏழை..உடுத்தக் கூட கந்தல் துணிதான்..அதுல அவ அரை நிர்வாணமாத்தான் தெரிவாள்..
தயாரிப்பாளர்-அடடா..ஆரம்பமே..அசத்தலான கதை சார் இது

6)லீவு வேணும்னு கைல காயம்னு கட்டு கட்டிண்டு போனியே..என்ன ஆச்சு..
என் மேலதிகாரி..'காயமே இது பொய்யடா' ன்னு சொல்லிட்டார்

7)டாக்டர்..போலி மருந்துகள் அதிகம் வர ஆரம்பிச்சுடிச்சே..
போலி மருத்துவர்கள், போலி மருந்துகள்..ம்..ம்..வர வர மருத்துவமே போலி ஆயிடுச்சு..நாட்டில போலி மருத்துவக் கல்லூரிக் கூட எங்கயாவது இருக்கலாம்..அது எப்போ வெளியே வரப்போவுதோ?

Saturday, March 16, 2013

முடி கொடுத்து லட்டு தின்ன ஆசையா...?




தலைமுடியை பக்தர்கள் ஆண்டவனுக்குக் காணிக்கையாகத் தருவது பல கோவில்களில் நடைபெறுகிறது.முடி காணிக்கையில், திருப்பதி முதலிடம் வகிக்கிறது.

முடி காணிக்கை மூலம், திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஆண்டிற்கு 100 முதல் 150 கோடி வரை கிடைக்கிறது.

வரும் ஏப்ரல் மாதம் முதல், நீளமான முடியைக் கொடுக்கும் பக்தர்களுக்கு, அதாவது 31 அங்குலம் நீள முடியைக் கொடுக்கும் பக்தர்களுக்கு..லட்டு பிரசாதம் இலவசமாக வழங்க கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.அதற்கான டோக்கன்கள் வழங்கப்படுமாம்.ஒரு டோக்கனுக்கு ஐந்து லட்டுகள் இலவசமாகக் கொடுக்கப்படுமாம்.

நீளமான தலைமுடியை காணிக்கையாய் செலுத்தும் பக்தர்களுக்காக , திருமலையில், சுதர்சனம் சத்திரம் வளாகத்தில்,தனியாக முடிக்காணிக்கை செலுத்த, சிறப்பு ஏற்பாடு செய்யப்படுகிறதாம்..

கண்ணா..லட்டு தின்ன ஆசையா....

Friday, March 15, 2013

பொறுமையும்...மாணவர் போராட்டமும்...




பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது ஒரு சொலவடை.ஆனால், பொறுமைக்கும் ஒரு எல்லை உணடு அல்லவா?

அந்த எல்லை இப்போது வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.குட்டக் குட்ட குனிந்து, தமிழன் இப்போது பூமியை தொடும் அளவிற்குக் குனிந்து விட்டான்.அதற்கு மேல் குனிய முடியாததால்..இப்போது எழுச்சி அவனிடம் காணப்படுகிறது.

அதுவும், மாணவ சமுதாயம் எழுச்சியைக் காட்டிவிட்டால்..சம்பந்தப் பட்ட ஆட்சியாளர்கள் அழிவது நிச்சயம்.

உதாரணம்..இந்தி எதிர்ப்பு போராட்டம்...இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்திற்குப் பின், காங்கிரஸால் தமிழ்நாட்டில் தனித்து ஆட்சிக்கு வர இயலவில்லை.நாற்பத்தைந்து வருடங்களாக, அக்கட்சி..திராவிடக் கட்சிகள் எதனுடனாவது கூட்டு வைத்தே சில எம்.எல்.ஏ., எம்.பி., இடங்களைப் பெற்று வந்தது.இன்றுவரை அக்கட்சியால் தமிழகத்தில் தலை நிமிர முடியவில்லை.

1965 நிகழ்ந்தது போன்று ஒரு நிகழ்வு, மீண்டும் நடக்க வாய்ப்புள்ளது போல இப்போது தெரிகிறது.இப்போதாவது விழித்துக் கொண்டு, தமிழக மக்களும், இந்தியர்கள் தான், அவர்கள் குறைகளுக்கும் செவிசாய்க்கலாம், அவர்கள் தேவையை பூர்த்தி செய்வோம்.. என மைய அரசு நினைத்து ஆவண செய்ய வேண்டும்.

தவிர்த்து வாளா இருக்குமானால்...கொஞ்ச நஞ்ச வாய்ப்பையும் இழக்க நேரிடும்.அதனுடன் கூட்டு வைக்கும் மாநிலக் கட்சியும் மக்கள் ஆதரவை இழக்க நேரும்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு அரசியல் புரிபவர்கள் நடந்து கொண்டால் ..நல்லது..

இல்லையெல் கண்டிப்பாக 1965 நிகழ்ச்சிகள் மீண்டும் உருவாவதை தடுக்க முடியாது.

மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான்...என்பதை மறக்க வேண்டாம்.

வெற்றியும், சாதுர்ய பேச்சும்..(ஒரு பக்கக் கட்டுரை)




ஒரு மனிதனின் வெற்றி..அவன் படித்த படிப்பினால் மட்டும் அமைவதில்லை.ஓரளவு பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
கதையாய் இருந்தாலும்..சாவித்திரியின் சாதூர்யம் தான் அவளது கணவனது வாழ்வை காப்பாற்றியது.
பலமுறை அரசரின் மரணதண்டனையிலிருந்து தெனாலிராமனின் வாக்கு சாதூர்யம் காப்பாற்றியிருக்கிறது.
பீர்பாலின் சாதூர்ய பேச்சு கதைகளையும் நாம் அறிவோம்.ஹேமனாத பாகவதரை மதுரையிலிருந்து துரத்தி அடித்தது சிவனின்(?)சாதூர்யம்.
நம் ஊர்களில்..குப்பை பொருள்களையும்..சாதூர்யமாகப் பேசி நம் தலையில் கட்டிவிடும் விற்பனை பிரதிநிதிகளை நாம் அறிவோம்.
நம்மை பற்றி நம் பெற்றோர்கள் கவலைப்படும்போது சொல்லக்கூடிய வார்த்தை'கொஞ்சம் கூட சாமர்த்தியம் போறாது இவனுக்கு" என்பதுதான்.

இப்போது ஒரு சிறு கதை.

ஒரு கம்பனியில் செகரட்டரி வேலைக்கு பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர்.அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி'பத்தடி ஆழம்..பத்தடி அகலம்கொண்ட குழியில் நீ வீழ்ந்து விட்டால் எப்ப்டி வெளியே வருவாய்?'என்பதுதான்.
கத்திக் கூப்படு போடுவேன் என்றான் ஒருவன்..
தத்தி தத்தி ஏறிடுவேன் என்றான் ஒருவன்.இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை.
கடைசியில் ஒருவன் கேட்டான்
'தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா?'.
'இல்லை'என்றனர் தேர்வுக் குழுவினர்.
'நான் விழுந்தது..பகலிலா..அல்லது இரவிலா'
'ஏதற்குக் கேட்கிறாய்?'-தேர்வுக்குழுவினர்.
இவன் சொன்னான்'பகலில் குழியில் விழ நான் குருடன் இல்லை..அஜாக்கிரதையானவனும் அல்ல.அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் இல்லை.அதனால் கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை.'
அவன் பதில் திருப்தி ஏற்படுத்தியது குழுவினர்க்கு.
அவனது வாக்கு சாதூர்யம் வேலை வாங்கிக் கொடுத்தது.

சாதுர்யப் பேச்சு காரிய சாதனையைக் கொடுக்கும்

Wednesday, March 13, 2013

நீங்கள் மேடைப் பேச்சாளராக வேண்டுமா?...




நமக்கெல்லாம்..மேடையில் பேச வேண்டும் என்றும்..நாம் பேசுவதை நான்கு பேர் கேட்டு பாராட்ட வேண்டும் என்றும் உள்ளூர ஒரு விருப்பம் இருக்கும்.

பேசுவது என்பதே ஒரு கலை.அதற்காக பேசுவதையெல்லாம் கலை என்று சொல்லிவிட முடியாது.அதுவும்..மேடையில் பேசுவது என்பது...!!! எளிய நடையில் பலர் முன் நின்று மேடையில்..உயர் கருத்துகளைச் சிறந்த முறையில்..கேட்போர் உள்ளத்தில் அழகாக பதிய வைப்பதே ஆகும்.

மேடைப்பேச்சை 'சொற்பொழிவு' என்பர்.சொற்களைத் தேடிப் பிடித்து..எளிய நடையில்..அமைதியாக பொழிவது தான் சொற்பொழிவு.

மழை பொழிகிறது என்கிறோம்....மழை நீர்த் துளிகள்..ஒன்றன் பின் ஒன்றாக சீராக..நேராக..அமைதியாக பெய்வது தான் 'பொழிதல்' எனப்படுவது.அழகாக ஒன்றன் பின் ஒன்றாக வரம்பு மீறாமல் இருப்பதுதான்.வரம்பு கடந்தால் மழை பொழிதலும்..மழை அடித்தல், மழை கொட்டல் என்றெல்லாம் ஆகிவிடும்.

அதுபோலவே தான் சொற்பொழிவும்..வரம்பு கடந்தால்..மக்களிடமிருந்து..கிண்டல்,கத்தல்,திட்டுதல் என்ற நிலைக்கு நம்மை கொண்டு வந்து விட்டு விடும்..

ஒருவர் பேசும் சொற்கள் அனைத்தும் நல்ல சொற்களாக, பண்பட்டவைகளாக இருந்தாக வேண்டும் என்ற கவலை சொற்பொழிவாற்றுவோருக்கு இருக்க வேண்டும்.சொற்கள் பற்றி வள்ளுவன்
சொல்வன்மை என்ற அதிகாரத்தையே வைத்துள்ளார்.

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லிங்கட் சோர்வு

ஆக்கமும், அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால்..எந்த ஒரு சொல்லிலும் குறைபாடு நேராது கவனமாக இருக்க வேண்டும்...என்கிறார்.

நாம் சொல்வதை பிறர் எளிதாகப் புரிந்துக் கொள்ள வேண்டும்.எவ்வளவு நேரம் பேசினோம் என்பதை விட..நாம் என்ன பேசினோம் என்பது மக்களுக்குப் புரிகிறதா என்பதே முக்கியம்.

நாம் கற்றதை ..பிறர் உணரும் வண்ணம் சொல்லத் தெரியாதவர்..கொத்தாக மலர்ந்திருக்கும் மணமில்லா மலருக்கு ஒப்பாவர்..(யாருக்கும் பயன் தரா மலர்) என்கிறார் வள்ளுவர்.

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார்

ஒருவனின் உண்மைத் தோற்றத்தைக் காட்டுவது அவன் வாய்ச் சொற்களே..மற்ற அனைத்தும் போலித் தோற்றங்கள்.ஆகவே..பிறரிடம் பேசும்போது..அதிலும் குறிப்பாக மேடையில் பேசும்போது மிக விழிப்புடன் இருக்க வேண்டும்..இல்லையேல்..நமக்கு வீழ்ச்சியே ஏற்படும்.

எதைக் காப்பாற்றாவிடினும் நாக்கை காப்பாற்ற வேண்டும்..

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

ஒருவர் எதைக் காத்திட முடியாவிடினும்..நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்.இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவரது துன்பத்திற்குக் காரணமாகிவிடும்.


நல்ல கருத்துகள் சொற்பொழிவுக்கு அவசியம்.நாம் பேசுவது மக்கள் உள்ளத்தில் பதிய வேண்டுமானால்..அவை நல்ல கருத்துகள் கொண்டதாய் இருக்க வேண்டும்.பண்பற்ற..பயனில்லா சொற்களை மறந்தும் பேசக் கூடாது.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து

பயனற்றதும்..பண்பற்றதுமான சொற்களை பலர்முன் சொல்வது மகிழ்ச்சியைக் குலைத்து..நன்மையை மாய்க்கும்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.

பேச்சுக்கு கருத்துகளை எப்படி அமைப்பது.அதற்கு ஒரு வழி..

முதலில்..இன்று நாம் எதைப்பற்றி பேச வேண்டும்..என்னென்ன பேச வேண்டும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.முதல் கேள்விக்கான விடை தலைப்பாகவும்..அடுத்தக் கேள்விக்கான பதில் கருத்தாகவும் அமையும்.

அதை ஒரு சிறு அட்டையில் குறித்துக் கொண்டு 1, 2 என இலக்கமிட்டு முறைப்படுத்தி மனனம் செய்துக் கொள்ள வேண்டும்.பின் மேடை ஏறியதும் மனப்பாடம் செய்ததை வரிசைப் படுத்தி பேச வேண்டும்.இது வெற்றிகரமான பேச்சாக அமையும்.ஆரம்ப பேச்சாளர்கள்..இரண்டு அல்லது மூன்று கருத்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டு..ஐந்தாறு நிமிடங்களுக்குள் பேசி நிறுத்திக் கொள்ள வேண்டும். காலப் போக்கில் இது நமக்கு நல்ல நம்பிக்கையைக் கொடுக்கும்.

குறிப்புகள் எடுக்கையில் பேச வேண்டிய கருத்துகள் ஒவ்வொன்றும் மூன்று அல்லது நான்கு சொற்களுக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.அதுதான் மனதில் பதியும்.மனதில் பதிந்ததைப் பேசி முடித்ததும்..நம் குறிப்பை எடுத்து..எல்லாம் பேசி விட்டோமா என்று பார்க்கலாம்.ஏதேனும் விட்டுப் போயிருந்தாலும் பரவாயில்லை.ஏனெனில் நம் பேச்சை கேட்டவர்களுக்கு அது தெரியப் போவதில்லை.
தொடக்கப் பேச்சாளர்கள்..எழுதியிருக்கும் குறிப்பை இடையிடையே பார்த்து பேசலாம்..ஆனால் இதுவே பழகிவிடக் கூடாது.

மேடைப் பேச்சில் எழுதிப் படிக்கிறார்களே பொறுப்பானவர்கள் என்று கேட்கலாம்..பொறுப்பான பதவியில் உள்ளவர்கள்..வேறு ஏதும் பேசிவிடக் கூடாதே என்பதற்காக கையாளும் முறை இது.ஆனால் பேச்சாளர்களுக்கு ஏற்றதல்ல இது.பார்த்து படிப்பது படிப்பதாகவே இருக்குமேயன்றி..அது பேச்சாக இராது.அதில் உணர்ச்சியும் இராது..

இப் பழக்கம் உள்ளவர்கள் ஒரு சிறந்த பேச்சாளர்களாக ஆகவே முடியாது


(டிஸ்கி - இது சற்று நீண்ட பதிவு..அபி அப்பா மன்னிப்பாராக)


Tuesday, March 12, 2013

விஸ்வரூபம்..இரண்டாம் பாகம்..




விஸ்வரூபம் படம் பல சர்ச்சைகளில் சிக்கி, கமலுக்கு பலர் அறிவுரைகளைக் கூறி, தமிழக அரசுடன் பேசி, இஸ்லாமிய சகோதரர்களுக்காக ஒலிப்பதிவை மியூட் செய்து.., கடன்காரர்களின் அச்சுறுதல் என சொல்லின.ஒருவழியாக வெளிவந்து , இன்னமும் சில அரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிரது.

இதனிடையே வசூல் 200 கோடிகளை தாண்டி விட்டது என்றும் கூறப்படுகிறது. கமலும், படத்தின் மூலம் லாபம்தான் என்றுள்ளார்.

இப்போது கமல், விஸ்வரூபத்தில் விடுபட்ட காட்சிகளை 2ஆம் பாகத்தில் காணலாம் என்றுள்ளார்.

இரண்டாம் பாகத்தில், காதல், தாய்..மகன் பாசம் மற்றும் போர்க்களக் காட்சிகள் இருக்குமாம்.

இன்னமும் சில காட்சிகளைச் சேர்த்து, போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் முடிந்துவிட்டால், படம் வெளியிடத் தயாராம்.

இரண்டாம் பாகமாவது சுமுகமாக வர வேண்டுமானால்..கமல் பெருமாளை பழிப்பது நிறுத்தட்டும் என ஆன்மீகவாதிகளும்...

நம்மைப் பற்றி எது சொன்னாலும் அதைக் கண்டுக்கொள்ளாமல் இருந்தாலே போதும் என சம்பந்தப் பட்ட சமூகத்தினரும்..

இன்னொருமுறை வீட்டை அடகு வைக்க மாட்டார் என ஃபைனான்சியர்களும்..பேசிக்கொள்ளக் கூடும்.

சராசரி ரசிகனுக்கோ..பால் விலை அதுவரை ஏறாமல் இருந்தால் போதும் என்று மட்டுமே கவலை இருக்கக்கூடும்.



Monday, March 11, 2013

வாய் விட்டு சிரிங்க...


1.காதலன்-நான் நேர்மையானவன்..என் அலுவலகத்திலே நான் மட்டும் தான்..லஞ்சம் வாங்காதவன்
காதலி-..நல்லவேளை..இப்பவாது சொன்னீங்களே..பிழைக்கத் தெரியாத உங்களை..கல்யாணம் பண்ணிக்க இருந்தேனே

2.அந்த டாக்டர்..இப்பவெல்லாம் யாருக்கும் ஷாக் டிரீட்மெண்ட் கொடுக்கறதில்லை
ஏன்,..
இப்பவெல்லாம் தான்..எப்பவும் கரண்ட் கட் இருக்கே

3.அந்த ஓட்டல்ல மட்டும்..'ஆம்லெட்' ரொம்ப சீப்பா தர்றாங்களே..எப்படி?
ஓட்டல் முதலாளி..ஒரு அரசியல்வாதியாம்..அவர் கூட்டங்கள்லே பேசறப்ப..அவர் மேல வீசப்படற முட்டைகளை பொறுக்கி எடுத்து வந்துடுவாராம்

4.அவன் கஞ்சன்னு எப்படி சொல்ற..
அவன் பொண்ணு கல்யாணத்திலே..மூகூர்த்தத்தில..ஆசிர்வாதம் பண்ண..கொடுத்த அட்சதையெல்லாம் பொறுக்கி..ரிஷப்ஷன்ல லெமன் ரைஸ் ஆக்கிட்டான்.

5.கணவன்-(மனைவியிடம்) வர்றியா,,ஓட்டல்ல போய் காஃபி சாப்பிட்டு வரலாம்
மனைவி-என்ன அதிசயமாய் இருக்கு இன்னிக்கு..
கணவன்-(நினைவு வந்தவராய்) சாரி...பாமா..நான் ஆஃபீஸ்ல டைபிஸ்ட் கிட்ட பேசற ஞாபகத்தில கேட்டுட்டேன்

6.அரசியல்வாதி-(கூட்டத்தில் பேசும்போது)என்னை வெற்றிபெறச் செய்தால்..இந்த தொகுதியை மேம்படுத்துவேன்..தவறினால்...நீங்கள் என்னை தூக்கிலிடலாம்..
கூட்டத்தில் ஒருவன்- தலைவா...இந்தா கயிறு

Saturday, March 9, 2013

சொத்தைக் காக்கத் தெரியாதவரா கமல்...




தன் வீட்டை அடமானம் வைத்து..'விஸ்வருபம்' எடுத்ததாகவும், அது வெளிவாராவிடில் தன் வீடு போகும் அபாயம் உள்ளதாகவும்..பட வெளியீட்டுக்கு முன் கமல் கூறியிருந்தார்.

பிறகு...விஸ்வரூபம் வெளியாகி, ஓரளவு வசூலும் பெற்றுவிட்டதால்..வீட்டை மீட்டு விட்டதாகவும் தகவல் வந்தது.

இந்நிலையில், கமலை சந்தித்த ரஜினி, "வீட்டை பிள்ளைகள் பெயரில் எழுதி வைத்துவிடுங்கள்..'என்றும், இனி, "வீட்டை வைத்து படமெடுக்கிறேன் ' என்று சொல்லாதீர்கள்..என்று சொன்னதாகவும், இணையத்தில் செய்திகள் வந்துள்ளன.

ஆரம்ப காலம் முதல்..பெரிய பெரிய தயாரிப்பாளர்கள்...தனது வயது தளர்ந்த காலத்தில்..இருந்ததையெல்லாம் இழந்து...வாழ்க்கையை ஓட்டவே துன்பப்பட்டதெல்லாம் நாம் அறிவோம்.

ரஜினி, அப்படி சொல்லியிருந்தது உண்மையானால்...
கமலும், தான் சம்பாதித்த பணத்தை, அந்தத் துறையிலேயே முதலீடு செய்பவர்.அவருக்கும் அப்படி ஒரு நிலை வரக்கூடாது என ரஜினி விரும்பினாரோ என்னவோ தெரியவில்லை. அதனால் தான் இந்த அறிவுரை போலும்.

எது எப்படியோ, கமலின் அந்த பிரஸ் மீட்..அவரை சற்று தரம் தாழ்த்திவிட்டதோ என்ற ஐயப்பாடு எழுகிறது.கமல் அதை தவிர்த்திருக்கலாமோ..என்று தோன்றுகிறது.

Thursday, March 7, 2013

மங்கையராய் பிறந்திடவே.....

           



பெண் குழந்தை - சாதாரணமாக மகனைவிட, மகளுக்கே தந்தையிடம் அதிகம் பாசம் இருக்கும்.சற்றே வளர்ந்ததும்..நாம் தாயை இழந்திருப்போம்...மனைவிக்கு வயதாயிருக்கும்...அப்போது..'தாயினும் சாலப் பரிந்து:' நம் மீது பரிவு காட்டுபவள் மகளே..

மனைவி - மனைவி அமைவதெல்லாம்..இறைவன் கொடுத்த வரம்..என்பார்கள்.உண்மைதான்...இல்லாள் சரியாக அமைந்தால்..அவன் இல்லானாக ஆகவே மாட்டான்.மனைவி சரியாக அமைய கொடுப்பினை வேண்டும்.ஒருவன் மனைவியை நேசிக்கிறது...பெரிசல்ல..அதை வெளிப்படுத்தணும்.
 ஒருத்தனோட வாழ்க்கையில் முதல் பாதிலே துணையாக வருபவர் தாய்..பின் பாதியிலே வருபவர் மனைவி.தாய் மறைந்தும் தாரம் இருப்பதால் தான்..அந்த இழப்பை நம்மால் சமாளித்துக் கொள்ள முடிகிறது.ஆனா..தாரத்தையும் இழந்தபின் அவன் கிட்டத்தட்ட அனாதை ஆகிறான்.அப்படிப்பட்ட உறவு மனைவி.

தாய் - இவரைப் பற்றி என்னத்தை சொல்ல...இறை மறுப்பு கொள்கை உள்ளவனும்..காணும் கடவுள் இவள்தான்.தனக்கென வாழாது..தன் குழந்தைகளுக்காக, கணவனுக்காக வாழும் தியாக தீபம் இவள்.

சாதாரணமாக..ஒரு பெண் வாழ்நாளில் ..எல்லா நாட்களிலும்..யாரேனும் ஆணைச் சார்ந்திருக்க வேண்டும் என்று கூறுவர்..

ஆனால்..உண்மையில்..ஒரு ஆண்மகன் தான்...பெண்ணை சார்ந்திருக்கிறான்..இதுதான் யதார்த்தம்..

மகளிர் தினத்தில்..அனைத்து மகளிருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.


உன்னோடு வாழ்தல் அரிது..(ஒரு பக்கக் கட்டுரை)





பராசக்தி படத்தில்..எஸ்.எஸ்.ஆர்., பர்மாவிலிருந்து இந்தியா வந்து இறங்கியதுமே..கேட்கிற முதல் குரல்..'ஐயா..பசிக்குது..'ங்கற பிச்சைக்கார குரல் என்பார்.

எல்லாமே வயத்துக்குத்தான்..வயிறு..இதனால்தான் இனச்சண்டை..ஏற்றத்தாழ்வு, லஞ்சம்,சுரண்டல் எல்லாம்..இரண்டாம் உலகப் போர் முடிந்ததும்..நாட்டில் எங்கும் பஞ்சம்..உண்ண உணவில்லை..ரேஷன் முறை அறிமுகப் படுத்தப்பட்டு..கோதுமை வழங்கப்பட்டதாம்..அதைத்தான் அப்போது ஒரு படத்தின் பாடலில் கூறும் விதமாக...

ஒரு ஜான் வயிறே இல்லாட்டா..இந்த உலகினில் ஏது கலாட்டா..உணவுப் பஞ்சமே வராட்டா..உயிரை வாங்குமா பரோட்டா...என்று பாடியிருக்கிறார்கள்.

பசி வந்திட பத்தும் போம்..என்பது பழமொழி...கல்யாண வீடுகளில்..பந்திக்கு முந்திக் கொள்..என்பார்கள்..பிந்திக் கொண்டால்..முன்னால் முந்தியவர்கள் மீதம் வைத்திருந்தால் உண்டு.கலைகளில் சிறந்தவன் ராமன் என்பார்கள்..அதுபோல் சாப்பிடுவதில் எக்ஸ்பர்ட் சாப்பாட்டு ராமன் ஆவான்.

தானத்தில் சிறந்தது அன்னதானம்.

வயிற்றுப் பிரச்னைதான் எல்லா நோயின் மூலகாரணமாயும் அமைகிறது..நல்ல ஜீரண சக்தி வேண்டும்.நம் மார்புக்கும்..வயிற்றுக்கும் இடையே உள்ளது உதரவிதானம்..இது ஒரு தசை..இதன் கீழ் உணவுக்குழாயில் இருந்துதான் வயிறு ஆரம்பிக்கிறது.அதன் கீழ் மறுமுனை சிறுகுடலில் இணைகிறது.வயிற்றுக்குள் உணவு வந்ததுமே..அது இயங்க ஆரம்பித்து விடுகிறது.அதில் சுரக்கும் அமிலம் சத்துக்களை பிரித்தெடுத்து..நம் நம் உடலின் தேவையான உறுப்புகளுக்கு அனுப்புகிறது.

முறையான உணவு பழக்க வழக்கங்கள் இல்லாதவர்களுக்கு நெஞ்சு எரிச்சல்,அஜீரணம்,வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் வந்து உணவுப்பாதையை பாதிக்கும்..உடலில் சுறு சுறுப்பு இருக்காது..

அளவுக்கு மீறிய உணவு,ஃபாஸ்ட் ஃபுட் போன்றவை,கண்ட நேரத்தில் உணவு உண்ணும் வழக்கம்..ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

வயிற்றை மட்டும்தான் திருப்தி படுத்த முடியும் எனக் கூறுவார்கள்.ஒரு வேளைக்கு அதிகமான உணவை அது ஒரே சமயத்தில் எதிர்ப்பார்க்காது..அதனால் தான்..ஔவை ஒரு பாடலில் கூறினார்..

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒருநாளும்
எந்நோய் அறியாய் இடும்பைக்கூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது

இன்று நல்ல உணவு கிடைக்கிறது..நாளைக்கு கிடைக்குமோ..கிடைக்காதோ..அதற்கும் சேர்த்து உண்டுவிடலாம் என்றால் முடியாது.சரி இன்று உணவுகிடைக்கவில்லை..பொறுத்துக்கொள் நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்றால் பொறுத்துக்கொள்ளாது.எனது நிலை அறியாமல்..எனக்கு துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் என் வயிறே..உன்னுடன் வாழ்வது மிகவும் கடினம்..என்று பொருள் படும்.

Wednesday, March 6, 2013

+2 வும்...மடி நெருப்பும்


+2 வும்...மடி நெருப்பும்

இன்று 29-சி பேருந்தில் பயணித்தேன்..

இரு பெண்கள் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.நான் அதை ஒட்டுக் கேட்கவில்லை.பஸ் ஒடும் சத்தத்தையும் மீறி உரக்கப் பேசியதால்...என் விருப்பமில்லாமல் அந்த உரையாடல் காதுகளில் விழுந்தது.

இனி அவர்கள் உரையாடல்..

பொண்ணு +2 பரீட்சை எழுதறா..

என்ன மார்க் வருமாம்..

900 வரும்னு சொல்றா..

பரவாயில்லை..நம்ம மாதிரி ஆட்களுக்கு அது அதிகம் தானே

நீ வேற..அவளை காலேஜ்ல சேர்க்க..உதவி கேட்டு ஒருத்தர் கிட்ட அழைத்துப் போனேன்..அவர் சொன்னார்..'960 மார்க் வாங்கினால்..நான் ஃபீஸ் கட்றேன்னு...

அதுக்கு உன் பொண்ணு என்ன சொல்றா..

அம்மா..பணக்கார வீட்டு பசங்களால நிறைய மார்க் வாங்க முடியும்..என்னால 900 ஏ கஷ்டம்ங்கறா..

நீ என்ன சொன்னே..

அப்படி சொல்லாதே..போன வருஷம்..நம்ம அடுத்தத் தெருவில செருப்பு தைக்கிறாரே..அவர் பொண்ணு 1100 வாங்கலன்னு.அதுக்கு சொல்றா..'போம்மா ..முதல்ல என் பரீட்சையை..பயம் இல்லாம எழுதவிடுன்னு..


இதனால் நாம் அறிய வருவது என்னன்னா..
(1)மக்களிடையே படிப்பு அறிவு வளரணும்னு எண்ணம் ஏற்பட்டிருக்கு..ஆனா அதுக்கான வசதி இன்னும் வரல்லே.

(2) மாணவர்களின் திறமையை..வாங்கும் மதிப்பெண்கள் மட்டுமே தீர்மானிக்கின்றன

3) +2 பரீட்சை எழுதும் மாணவர்களின் வீடுகளில்...மனக் குழப்பமே உள்ளது..

கடைசியாக ஒரு ஜோக்..

டாக்டர் _ உங்க அடி வயத்துல எப்படி இவ்வளவு தீக்காயம் ஏற்பட்டது.
 நோயாளி- என் பையன் +2 எழுதறான்..நல்லா படைக்கணும்னு மடில நெருப்பைக் கட்டிக்கிட்டு இருந்தேன்

Tuesday, March 5, 2013

வாய் விட்டு சிரிங்க..




1) இன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியா இருக்கிற நீங்க..அவங்களுக்கு ஏதேனும் சொல்ல ஆசைப்படுகிறீர்களா?
அவங்க விலாசங்களைத் தெரிவிச்சா..அவங்க கனவில நான் வர்ற நேரத்துக்கான என் கால்ஷீட் பணத்தை வாங்க சௌகரியா இருக்கும்

2)தலைவர் பேசும்போது.நடுவே..நடுவே..மீட்டர்..மீட்டர்னு சொல்றாரே ஏன்.
அவர் எதையும் அளந்து தான் பேசுவாராம்.

3)ஆட்டுக்கு தாடி போல நாட்டுக்கு கவர்னர்...இதே போல ஒரு வாக்கியம் சொல்..
ஆட்டுக்கு தாடி போல..ஆட்டோவிற்கு மீட்டர்


4) அந்த டாக்டர் முன்னால துணிக்கடை வச்சிருந்தார்னு எப்படி சொல்ற?
ஆடித் தள்ளுபடி..அறிவிச்சிருக்கார்..ஒவ்வொரு பேஷண்டும்..இன்னொரு பேஷண்டைக் கூட்டிக்கிட்டு வந்தா..ஒருத்தருக்கு வைத்தியம் இலவசமாம்

5)நம்ம பையன் நாலணாக் காசை விழுங்கிட்டான்..
சரி..சரி..டாக்டர் கிட்ட ஐந்து ரூபா காயினை விழுங்கிட்டான்னு சொல்லு..நாலணா ன்னா நம்மைப் பத்தி கேவலமா நினைப்பார்

6) சம்பந்தமில்லாமல் பெயரை வைச்சிருக்காங்க
எந்த படத்துக்கு சொல்றீங்க?
படத்துக்கு இல்ல....இவ்வளவு ஒல்லி ஊசிக்கு குண்டூசின்னு பெயர் வைச்சாங்களே அவங்களைச் சொல்றேன்

Monday, March 4, 2013

விவாகரத்துகள் ஏன் (ஒரு பக்கக்கட்டுரை)




 சாமான்யர்கள் எவ்வளவு பேர் குடும்ப வழக்கு மன்றங்களில் விவாகரத்து வேண்டி காத்திருக்கிறார்கள் தெரியுமா?இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.இதில் ஆச்சரியம் என்னவெனில் இவற்றுள் பெரும்பாலானவை பெற்றோர் பார்த்து நடத்திய திருமணங்கள்.

விவாகரத்து அதிகமாக என்ன காரணம் என்று பார்த்தோமாயின்..பெரும்பாலும் இரு பாலினரிடமுமே புரிதல் இல்லாமைதான்.ஆணாயினும்..பெண்ணாயினும்..மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் மணவாழ்வை தொடங்குகிறார்கள்.அந்த எதிர்ப்பார்ப்பில் சிறிதளவு குறைந்தாலும் ஏமாற்றமே ஏற்படுகிறது.நாளடைவில் அந்த ஏமாற்றமே ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.

சரியான புரிதலில்தான் வாழ்க்கை இன்பமயமாகிறது..அடுத்து விட்டுக்கொடுத்தல் இருக்க வேண்டும்.இது பெண்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என எண்ண வேண்டாம்..ஆண்களுக்கும் இருக்க வேண்டும்.ஆணாதிக்கம் கூடாது.நம்மை நம்பி வந்தவள் அவள்..அவளுக்கென ஒரு மனம் இருக்கிறது...அவள் உறவையெல்லாம் விட்டு..நம்முடன் ஏற்பட்ட உறவை பிரதானமாக்கி நம்முடன் வருகிறாள்..என்பதை எல்லாம் உணர்ந்து..அவளை நடத்த வேண்டும்..அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்..பணம் மட்டுமே வாழ்வில் பிரதானமில்லை..பணம் சம்பாதிக்க வேண்டும்தான்..ஆனால் வாழ்வில் மகிழ்ச்சியில்லை எனில் எவ்வளவு சம்பாதித்து என்ன பயன்.ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும் போதுதான் இல்லறம் நல்லறமாகிறது.

அதற்கு..நம் நேரத்தை குடும்பத்தைக் கவனிப்பதிலும் சற்று ஒதுக்க வேண்டும்..மனைவி,மக்களுடன் மாலை நேரத்தை சந்தோஷத்துடன் கழிக்க வேண்டும்.குடும்ப விவகாரங்களில் ஒருவரை ஒருவர் ஆலோசனைக் கேட்க வேண்டும்.எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத் தலைவர் ..எப்போது பார்த்தாலும் பணம்..பணம் ..என அலைபவர்..தனது இருபது வயது மகளுக்கு திருமணம் செய்து வீட்டை விட்டு அனுப்பிட வேண்டும் என்றார்..நான் அவரிடம்'அவளை நன்கு படிக்க வையுங்கள்.திருமணத்திற்கு அவசரம் இல்லை' என்றேன்..நண்பரோ பிடிவாதமாக இருந்தார்.அவர் மனைவியிடம் நான் பேசினேன்..அவர்'எனக்கும் என் மகள் படிக்க வேண்டும்..நல்ல வேலையில் சேர வேண்டும்..என்றெல்லாம் ஆசை இருக்கிறது..ஆனால் அவர் வார்த்தைக்கு மறு வார்த்தை நாங்கள் பேசக்கூடாது.அவர் நினைப்பதுதான் எங்க குடும்பத்தில் நடக்கும்' என்றார்.அந்த அம்மாளின் வாயிலிருந்து சாதாரணமாக அந்த வார்த்தைகள் வந்தாலும்..அதில் தோய்ந்திருந்த வேதனையை உணர்ந்தேன்.

ஆணின் துணையின்றி பெண்ணும்..பெண்ணின்றி ஆணும் வாழ்வது என்பது முடியாதது அல்ல.ஆனால் அது இயற்கைக்கு முரணானது.ஒன்று மட்டும் போதும் என்பதல்ல..இயற்கை தருவது எல்லாமே இரண்டு..இரண்டுதான்.

இன்பம்-துன்பம்,நன்மை-தீமை,பிறப்பு-இறப்பு,சிரிப்பு-அழுகை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அதுபோல இயற்கையின் படைப்பு ஆண்-பெண்.இந்த இரண்டின் இணைப்பிலேயே ஒன்று உருவாகமுடியும்.கணவன் ,மனைவி என்பது வெறும் உடலின்பத்திற்கு மட்டுமல்ல..உடல் இன்பம் என்பது உடலில் தொடங்கி உடலிலேயே முடிந்து விடும்.

தூய்மையான அன்பு மட்டுமே இறுதிவரை துணை இருக்கும்.

அமைதியான குடும்ப வாழ்க்கை அற்புதமே!

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

(நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்.அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது)

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

(நற்பண்பு பெற்றவனைக் கணவனாக பெற்றால், பெண்களுக்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்)

Sunday, March 3, 2013

படித்ததில் பகிர எண்ணியவை...



1. அமெரிக்காவின் அதிபராக நிக்ஸன் இருந்த நேரம்.அவர் இந்தியா வந்த போது காமராஜரை பார்க்க விரும்பினாராம்.காமராஜர் அப்போது நாகர்கோவில் எம்.பி.,யாய் இருந்ததால் தில்லியிலேயே இருந்தார்.ஆனாலும்..அவர் நிக்ஸனை சந்திக்க விரும்பவில்லை.உதவியாளரோ'ஐயா..உலகே பெருமைப்படும்..அமெரிக்க அதிபர் அவர்...என்றார்..

'யாராவேணும்னாலும்..இருக்கட்டும்னேன்..நம்ம ஊர் அண்ணாதுரை..அமெரிக்கா போனப்ப...இந்த நிக்ஸனைப் பார்க்க விருப்பப்பட்டாரு.ஆனா நிக்ஸன் அவரைப் பார்க்க மாட்டேன்னுட்டாரு.நம்ம ஊர்க்காரரை பார்க்கமாட்டேன்னு சொன்னவரை நான் ஏன் பார்க்கணும்னேன்' என்றாராம்.

2.ராமாயணத்தில்..ராமனின் இளவல் லட்சுமணன் என நமக்குத் தெரியும்.ஆனால்..மகாபாரதத்திலேயும்..ஒரு லட்சுமணன் வருவது..நம்மில் பலருக்குத் தெரியாது.துரியோதனின் மகன் பெயர் லட்சுமணன்.பாரதப் போரில் 13ம் நாள்..அர்ச்சுனன் மகன் அபிமன்யுவிடம் போரிட்டு மாண்டான் அவன்.

3.the sufferings of the past and the fears of the future shouldnot be allowed to disturb the pleasure of the present.

4.பொன்னை எறிந்தாலும்...பொடிக்கீரையை எறியாதே! பொன்னால் அழகு சேர்க்க முடியும்.ஆனால்..பொடிக்கீரையால் ஆரோக்கியத்தையே அடைய முடியும்.அதிலும் பொன்னாங்கனி கீரை மிகவும் நல்லது.

5.ஆண்களுக்கு முடி கொட்ட..சிகரெட் பிடிப்பதும்..ஒரு காரணமாம்.அமெரிக்க நிபுணர்கள் சொல்கின்றனர்.சிகரெட் பிடிப்பதால், தலையில் முடி வளர காரணமான மூலக்கூறுகளை உருவாக்கும் சுரப்பி
இயங்குவதற்கான திறனை குறைக்கிறதாம்.இது 40 வயது வரை தெரியாது.40க்குப் பின் வழுக்கை நிச்சயம்.

6.விலை மகளிரைப் பற்றி..நா.காமராசனின் ஒரு புதுக்கவிதை
நாங்கள்
நிர்வாணத்தை விற்கிறோம்
ஆடை வாங்குவதற்காக!



Friday, March 1, 2013

வாய் விட்டு சிரிங்க..




1.மன்னா..நீங்க சொன்னபடி நம்ப எதிரி நாட்டு மன்னனின் படை ரகசியத்தை தெரிஞ்சுக் கிட்டு வந்துட்டேன்
சொல்லுங்கள் மந்திரியாரே
அவர்கள் தங்கியுள்ள பகுதியில் கொசு தொந்தரவு தாங்காமல் சொறிஞ்சு..சொறிஞ்சுதான் படை வந்திருக்காம்.

2.தலைவருக்கு எப்பவும் தங்க ராசி உண்டு..
எப்படிச் சொல்றே
முதல் மனைவி பெயர் 'தங்கம்' இரண்டாம் மனைவி பெயர்'பவுனு'மூணாவது மனைவி 'சொர்ணம்"

3.ஜன்னல் வழியே எலி புகுந்துடுத்து
அப்புறம் என்ன பண்ணினே
டைலர் கிட்ட ஜாக்கெட்டை கொடுத்து ஜன்னலை மூடச் சொல்லிட்டேன்.

4.அந்த கவர்ச்சி நடிகையை கல்யாணம் பண்ணினப் பின்னாடி தெரிஞ்சுது
ஏன் முன்னாடி தெரியலையா?
முன்னாடிதான் பல படங்கள்ல பார்த்திருக்கேனே..

5.பிரசவத்துக்கு பின் உன் வயிற்றிலே இருந்த சுருக்கங்கள் எங்கே?
என் கணவர் தண்ணீர் தெளிச்சு இஸ்திரி போட்டுட்டார்.

6.(நடுவானில்) பிளேன் நகராமல் திடீரென நின்னுப்போச்சு..யாராவது பத்து பேர் இறங்கி தள்ளுங்க.