Wednesday, January 23, 2013

புத்தகக் கண்காட்சியும்...பிரபல எழுத்தாளர்களும்..




புத்தகங்கள் படிக்கும் வழக்கம் மக்களிடையே குறைந்துவிட்டது என்னும் புலம்பல் அடிக்கடிக் கேட்டுக் கொண்டிருந்தாலும்..புத்தகக் கண்காட்சிக்கு வருகின்ற கூட்டம் சற்றும் குறைவதில்லை.தவிர்த்து..கண்காட்சி காலத்தில் வெளியிடப் படும் புத்தகங்களின் எண்ணிக்கையும் வருடா வருடம் அதிகரித்து வருகிறது.

எழுத்துகள்..குறிப்பாக பல பிரபல எழுத்தாளர்களின் எழுத்துகள், நம்மை எப்படி கட்டிப் போட்டு விடுகின்றன.பல பிரபல எழுத்தாளர்கள் அமரர் ஆன நிலையிலும் சரி, எழுதுவதை நிறுத்திக் கொண்டுவிட்ட போதும் சரி..நம்மால் அவர்கள் எழுத்தை மறக்கமுடிவதில்லை.

உதாரணத்திற்கு..கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்கியின் நாவல்கள். அதிலும் குறிப்பாக பொன்னியின் செல்வன்..எத்தனை முறை வார இதழில் வந்திருந்தும்..பல பதிப்பகங்கள் புத்தகமாக அதிக விலையிலும் சரி, மலிவு பதிப்பாகவும் சரி வெளியிட்டிருந்த போதும்..கண்காட்சிகளில் முக்கியமாக பலரால் வாங்கப்பட்டுக் கொண்டே இருக்கும் புத்தகமாகும்.

கவியரசு கண்ணதாசனின் தித்திக்கும் பாடல்கள், எழுத்துக்களிடையே..மாபெரும் சரித்திரம் படைத்துக் கொண்டு இருப்பது 'அர்த்தமுள்ள இந்து மதம்' .மக்கள் அள்ளிக்குவிக்கும் புத்தகங்களில் ஒன்று.

சாண்டில்யனின், கன்னி மாடமும், கடல்புறாவும் இன்னமும் வேகமாக பறந்து கொண்டிருக்கின்றன.

தேவனின் கதைகள்..இன்னமும் உம்மணாமூஞ்சிகளை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

சுஜாதாவின் எழுத்துகள்..மக்களை வசீகரித்துக் கொண்டிருக்கின்றன இன்னமும்.

தி ஜா ரா வின் மரப்பசு, நளபாகம்,மோகமுள் மீதான மோகம் தீரவில்லை வாசகர்களுக்கு.

சுந்தர ராமசாமியின் புளியமரத்தை மக்கள் இன்னமும் விரும்புகின்றனர்.

பாரதிக்கும், வள்ளுவனுக்கும் என்றுமே இங்கு இடம் உண்டு.

சரி..இன்றுள்ள எழுத்தாளர்கள் புத்தகங்கள் எப்படி..

ஜெயகாந்தனின் புத்தகங்கள் இன்னமும் விலை மதிப்பில்லாதவையாக விருப்பப்படுகின்றன.

சிவசங்கரி, அனுராதா ரமணன், ரமணி சந்திரன், லட்சுமி ஆகியோர்  நாவல்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் மக்கள் வீடுகளில் குவிக்கப்படுகின்றன.

வண்ணதாசன், எஸ்.ரா., நாஞ்சில் நாடன் இப்படி அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாசகர் ஆதரவு உண்டு.

கண்காட்சியில்..வெளியே ஒரு நடிகரைக் கண்டால் மயங்கும் அளவுக்கு தங்கள் விருப்ப எழுத்தாளரைக் கண்டால் மக்கள் மகிழ்கின்றனர்.

ஐயா ..பாரதி நீ இருந்திருந்தால் இன்று என்ன கூறியிருப்பாய்..

பேதை சொன்ன 'மெல்ல தமிழ் இனிச் சாகும்' என்ற வார்த்தைகளுக்கு பதிலாக..'எட்டுத் திக்கிலிருந்தும் மக்கள் கூடி கண்காட்சிக்கு வந்து தங்கள் அறிவு,இலக்கியத் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளுமட்டும் தமிழ் சாகாது 'என உரைத்திருப்பாய்..

தமிழுக்கு..கடைசித் தமிழன் உள்ளவரை மறைவு இல்லை.

1 comment:

Avargal Unmaigal said...

பிரபல எழுத்தாளர் லிஸ்டில் சாரு இல்லையே உங்கள் பதிவை படித்தால் அவர் உங்களை திட்ட ஆரம்பிப்பார் ஹீ.ஹீ