Wednesday, April 4, 2012

புதிய தலைமை செயலக கட்டிடம் அரைகுறையாக கட்டப்பட்டது: -ஜெயலலிதா



திமுக ஆட்சியில் எல்லாமே அரைகுறையாக இருந்தது. புதிய தலைமை செயலக கட்டிடமும் அரைகுறையாகவே கட்டப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் கூறுகையில்....

துரைமுருகன் பேசும்போது ஏதோ இந்த சட்டமன்றத்தில் இட நெருக்கடி இருந்ததாகவும், அதனால் வேறு இடம் பார்த்ததாகவும் கூறினார். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை புறக்கணித்து இந்த அரசு வீணடிப்பதாக கூறினார். அவர் சொல்லும் அடிப்படையே தவறு. இந்த சட்டசபையில் இட நெருக்கடி என்று நான் சொல்லவில்லை. ஒட்டு மொத்த தலைமை செயலகத்தில் தான் இட நெருக்கடி என்று கூறினோம். சரி, திமுக ஆட்சியில் விசாலமான இடத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம் முழுமையாக தலைமை செயலகத்துக்கு பயன்பட்டதுபோல் துரைமுருகன் குறிப்பிட்டார்.

தமிழக அரசில் மொத்தம் 36 துறைகள் உள்ளன. புதிய தலைமை செயலகத்துக்கு கடைசி வரை 6 துறைகள் தான் மாற்றப்பட்டு செயல்பட்டன. மீதி 30 துறைகள் கோட்டையில் தான் செயல்பட்டன. இவர்கள் அரைகுறையாக கட்டிவிட்டு அங்குமிங்குமாக அதிகாரிகள் அலைய வேண்டிய நிலையை உருவாக்கினர். அங்கு 36 துறைகளின் அமைச்சர்கள் இருப்பார்கள். ஆனால் 6 துறைகளுக்கு மட்டுமே இடம் இருக்கும். மீதி 30 துறைகளுக்கு அலுவலகம் கிடையாது. இதனால்தான் நிர்வாகத்தில் குழப்பம், தாமதம் ஏற்பட்டது.

கோட்டையில் இருந்து அலுவலகத்தை மாற்ற வேண்டுமானாலும் ஒரே ஒரு துறைக்கு மட்டுமே இடம் இருந்தது. எல்லாமே அரைகுறையாக இருந்தது. அந்தக் கட்டிடமும் அரைகுறையாகவே கட்டப்பட்டுள்ளது என்றார்.

செய்திகள் - நிகழ்வு

No comments: