Friday, March 9, 2012

மன்மோகன் கவனிப்பாரா? பட்டினியால் கிட்னியை விற்றுப் பிழைக்கும் அவலம்



மேற்கு வங்காள மாநிலத்தில் பல கிராமங்களில் வறட்சியும், பஞ்சமும் தலை விரித்தாடுகிறது, பஞ்சம், வறட்சி குறித்து எவ்வளவோ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும் மத்திய அரசும், மேற்கு வங்க அரசும் வாய்மூடி மௌனிகளாக இருந்து வந்தன. அதன் பலன் இன்று இதோ: சோற்றுக்காக கிட்னியை விற்கும் அப்பாவி மக்கள்!

சில கிராமங்களை 'கிட்னி கிராமங்கள்' என்றே அழைக்கப்படும் அவலம் நடந்துள்ளது.

வடக்கு டியாஞ்ச்பூர் மாவட்டத்தில் உள்ள பிந்தால் கிராமத்தில் உள்ளவர்கள் ஒரு கிட்னியுடன் உயிர்வாழ்வதாக அங்கிருந்து வரும் சமூக நல ஆர்வலர்கள் செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இங்குள்ள மக்களிடம் இருந்து பெறப்படும் கிட்னி மாநில தலைநகர் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கிராமத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானோர், பழங்குடியினர்.

இவர்களின் பிழைப்புக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது விவசாயம்தான். சில வருடங்களாக போதிய மழை பெய்யாததால், பூமி வறண்டு விட்டது. நெல்லோ, கோதுமையோ சாகுபடி செய்ய முடியவில்லை. விவசாயம் கைவிட்டதால், வீட்டிலேயே சாராயம் தயாரித்து விற்று வருகின்றனர். இதிலும், அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டதால் வருமானம் குறைந்து, கிட்னியை விற்கும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதில் இடைத்தரகர்கள் கொள்ளை வேறு; கிட்னி ஒன்றுக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை விலை நிர்ணயிக்கின்றனர். ஆனால், கிட்னி கொடுக்கும் கிராம மக்களுக்கு சொற்ப தொகையே தருகின்றனர். அதிகபட்சமாக 80 ஆயிரம் ரூபாய் வரைதான் கொடுக்கின்றனர்.

கிட்னியை விற்கும் இளைஞர்கள் நாளடைவில் உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலை எதுவும் செய்ய முடியாமலும் போகிறது. அப்படிப்பட்டவர்கள் பெற்றோர் அல்லது மனைவியால் புறக்கணிக்கப்பட்டு, வீட்டை விட்டு வெளியேற்றப்படுகின்றனர்.

இன்னும் சில இடங்களில் பெண்களை கிட்னியை விற்குமாறு காணவன்மார்கள் வற்புறுத்தி வரும் அவலமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தொண்டு நிறுவனம் ஒன்று சமீபத்தில் இங்கு நடத்திய ஆய்வில், கிட்னியை விற்ற பலர் சில ஆண்டுகளிலேயே இறந்து போனது தெரியவந்தது.

அயல்நாட்டு, உள்நாட்டு முதலாளிகளின் மனம் கோணாமல், அவர்களது கஜானா காலியாகாமல் காலியாகாமல் 'எப்பாடுபட்டாவது' காத்துக் கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகள், காலியாக இருக்கும் வயிற்றை நிரப்ப என்றுதான் முடிவெடுக்கப்போகிறார்களோ?

முன்னேற்றவாத பொருளாதாரக் கொள்கைகளினால் ஏற்படும் ஒட்டுமொத்த பக்க விளைவுகளையும் சமாளிக்க இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு அறிவோ, அறமோ இல்லாத நிலையில் விவசாயமழிப்பு கொள்கைகளினால் யார் பயனடைந்தால் என்ன அடையாவிட்டால் என்ன?

நன்றி வெப்துனியா



2 comments:

கூடல் பாலா said...

அதிர்ச்சியூட்டும் தகவல்!

ஹேமா said...

என்ன கொடுமை இது !