Monday, March 28, 2011

இங்கே யாரும் யோக்கியன் அல்ல





ஆளும் கட்சியானாலும் சரி..எதிர்க் கட்சி ஆனாலும் சரி அவ்வப்போது அடித்துக் கொண்டாலும்...ஊழல் செய்வதில் ஒருவருக்கொருவர் குறைவு இல்லை.

ஆனால் அது தெரியாதிருக்க அவ்வப்போது ஒன்றன் மீது ஒன்று அவதூறு சேற்றை வாரி வீசிக் கொள்ளும்.

கடைசியில்..இதைப் பார்க்கும் மக்கள் 'ஆகா..இந்தக் கட்சி எவ்வளவு யோக்கியம்' என்று எண்ணுவர்.

ஆனால் காமராஜர் சொன்னாற் போல்..'எல்லாருமே ஒரே குளத்தில் ஊறிய மட்டைகள்' தான்.

இந்த எண்ணமே ..இன்றைய தினமணியின் இத் தலையங்கத்தைப் படித்ததும் தோன்றியது.
 
 
 

:என்ன உறவோ, என்ன பிரிவோ!


ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒத்த கருத்துடையவையாக இருப்பது எந்த அளவுக்கு அவசியமோ அதேபோல பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆட்சியிலும் எதிர்க்கட்சி வரிசையிலும் இருப்பது நல்லதல்ல. பொருளாதாரக் கொள்கைகளில் நிரந்தரத்தன்மை இருப்பதுதான் தேசத்தின் சீரான வளர்ச்சிக்கு உத்தரவாதம் தரும் என்கிற வாதம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்குமே தவிர, சமுதாய ஏற்றத்தாழ்வைக் கட்டுக்குள் வைக்க உதவாது.

மக்கள்தொகையில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் அடிப்படை வாழ்க்கை வசதிகள்கூட இல்லாத நிலையில் வாழும் நாட்டில், பன்னாட்டு நிறுவனங்களும் தொழிலதிபர்களும் மட்டுமே பயனடையும் திட்டங்களையும் கொள்கைகளையும் அரசு கடைப்பிடிக்குமேயானால், ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துத் தீவிரவாதம் தலைதூக்கும் அபாயம் தவிர்க்க முடியாததாகிவிடும். ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இருவேறு பொருளாதாரக் கொள்கைகளை உடையவையாக இருந்தால் மட்டுமே தகுந்த கண்காணிப்பும் எச்சரிக்கையும் அரசின் செயல்பாடுகளில் காணப்படும்.

இந்தியாவில் 1991-ல் பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் அன்றைய நரசிம்ம ராவ் அரசு பல்வேறு பொருளாதாரத் தடைகளை அகற்றி சுலபமாக அந்நிய முதலீட்டுக்கும், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்படுத்தவும் முனைந்தது. அன்றுமுதல் பல விபரீதங்கள் இங்கே அரங்கேறி வருகின்றன. முறைகேடுகளுக்கும், மெகா ஊழல்களுக்கும் பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டு, பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை சர்வசாதாரணமாக சில நிறுவனங்களும் தனிநபர்களும் கொள்ளையடித்துக் கொள்வதற்குத்தான் உலகமயமாக்கலும் சந்தைப் பொருளாதாரமும் உதவி இருக்கின்றன என்கிற அச்சமும் சந்தேகமும் ஏற்படுகின்றன.

காங்கிரஸ், ஐக்கிய கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்று ஆட்சிகள் மாறினவே தவிர, காட்சிகள் மாறவில்லை. ஹர்ஷத் மேத்தா ஊழலில் தொடங்கி சமீபத்திய "ஸ்பெக்ட்ரம்' ஊழல் வரை இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் சந்தித்திருக்கும் ஊழல்களின் மொத்த மதிப்பு, இந்தியாவின் ஓராண்டு நிதிநிலை அறிக்கையில் காணப்படும் வரவை மிஞ்சிவிடும் போலிருக்கிறது. பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் இங்கே நடக்கக்கூடாததெல்லாம் நடக்கிறது. எந்தவிதக் கண்காணிப்போ, கட்டுப்பாடோ இல்லாமல் மக்கள் வரிப்பணமும் தேசத்தின் வளங்களும் கொள்ளை போகின்றனவோ என்கின்ற அச்சம் எழுகிறது.

அவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான கடந்த வெள்ளிக்கிழமை, மக்களவையில் ஒரு கபட நாடகம், ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படாமல், மக்கள் மன்றத்தின் கவனத்தைக் கவராமல் காதும்காதும் வைத்ததுபோல அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஆளும் மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக எல்லாத் தளங்களிலும் நெருக்குதல் கொடுக்கும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஒரு மிகப்பெரிய தர்மசங்கடத்திலிருந்து அரசுக்குக் கைகொடுத்து உதவியிருக்கிறது என்று சொன்னால் நம்பவா முடிகிறது. ஆனால், நடந்திருப்பது அதுதான்.

சில ஆண்டுகளாகவே, குறிப்பாக, கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்தே எப்படியாவது ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைப்பது தொடர்பான மசோதா பிரச்னைக்குரியதாகத் தொடர்ந்து வருகிறது. அதாவது, தன்னிடம் இருக்கும் ஓய்வூதியப் பங்களிப்புப் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிறது அரசு. அப்படிச் செய்தால் பல கோடி தொழிலாளர்கள் ஓய்வூதிய நிதிக்காகப் பங்களிப்பாக நல்கும் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து விளையாடிவிடக் கூடும் என்கிற நியாயமான அச்சம் எழத்தானே செய்யும்.

வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போது அவரது வளர்ப்பு மகளின் கணவர் ரஞ்சன் பட்டாச்சார்யாவுக்கு நெருக்கமான நண்பர் ஒருவரின் நிறுவனத்தில் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா முதலீடு செய்ததும், அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கானவர்கள் தாங்கள் போட்ட முதலை இழந்த சரித்திரத்தை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் துணுக்குறுகிறது. ஓய்வூதியப் பங்களிப்புப் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்கிற விபரீத யோசனை ஏற்கப்பட்டால், பல ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் பினாமி நிறுவனங்களின் பங்குகளில் அது முதலீடு செய்யப்பட்டு கபளீகரம் செய்யப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் ஒன்றை ஏற்படுத்தி தவறுகள் எதுவும் ஏற்பட்டுவிடாமல் கண்காணிக்கிறோம் என்று இதற்கு அரசு பதில் அளிக்கிறது. தொலைத்தொடர்புத் துறையில் ""டிராய்'' ஒழுங்காற்று ஆணையம் இருந்தும் "ஸ்பெக்ட்ரம்' என்கிற பல லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடக்கவில்லையா என்று பதில் கேள்வி எழுப்பத் தோன்றுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைக்க அனுமதி கோரும் மசோதா மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவையில் அந்த மசோதாவை நிறைவேற்றப் போதுமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருக்கவில்லை. நிலைமையைச் சட்டெனப் புரிந்துகொண்ட மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் வாசுதேவ் பட்டாச்சார்யா, மசோதாவை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்தக்கோரி அவைத்தலைவரின் அனுமதியும் பெற்றுவிட்டார்.

எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி என்ன செய்திருக்க வேண்டும்? மசோதாவைத் தோற்கடிப்பதால் ஆட்சி கவிழ்ந்துவிடாதுதான். ஆனால், ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைவது தடுக்கப்படாவிட்டாலும் அந்த முயற்சி ஒத்திவைக்கப்படும். யார் யாரிடம் பேசினார்களோ, யார் யாருக்கு வழிகாட்டினார்களோ தெரியாது, அரசுக்கு ஆதரவாகப் பிரதான எதிர்க்கட்சி வாக்களித்து, மன்மோகன் சிங் அரசைத் தர்மசங்கடத்திலிருந்து காப்பாற்றிவிட்டது. உடனடியாக மசோதா சட்டமாக்கப்பட்டுவிடாது என்றாலும், விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டதால், இனி சட்டமாக்குவது எளிதுதானே.

இதனால் சகலருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்தால், மக்கள் வரிப்பணத்தைச் சூறையாடும் நிழல் மனிதர்களின் பாடு கொண்டாட்டமாகிவிடும்!

(நன்றி தினமணி )

3 comments:

Chitra said...

இதனால் சகலருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்தால், மக்கள் வரிப்பணத்தைச் சூறையாடும் நிழல் மனிதர்களின் பாடு கொண்டாட்டமாகிவிடும்!


... :-(

MANO நாஞ்சில் மனோ said...

நாடு உருப்படுமாய்யா...

vasu balaji said...

கூட்டுக் கொள்ளை. பிரச்சினை வந்தா கூட்டுக் குழு விசாரணை. முடிஞ்சு போச்:(