Wednesday, November 18, 2009

கொஞ்சி விளையாடும் தமிழ் - 8


அருணாசலக் கவிராயர்

அருணாசலக் கவிராயரின் ராம நாடகத்தில் இன்பச்சுவைக்கு அளவே இல்லை.

திருமணப்பந்தலில் அழகு வாய்ந்த சீதை வருகிறாள்.ராமன் சிவதனுசை வளைக்கக் காத்திருக்கிறான்.மண்டபத்தில் கூடியுள்ள மக்கள் 'மங்கையர் கட்டழகில் மயங்கிய காதலர்க்கு உலகில் முடியாத செயலும் உண்டோ?காதலியின் பேரழகை நினைத்தால் புதிய வலிமை உண்டாகுமே..நள்ளிரவில் பாம்பையும் பழுதையென நினைத்துப் பார்த்து ஏறி தம் காதலியை அடையும் காதலர் எத்தனை பேர்?அவ்வாறிருக்க சீதையின் பேரழகில் மயங்கிய ராமன்..இந்தச் சிறு வில்லை மட்டுமா ஒடிப்பான்? ஏழுமலையையும் கொடுத்தாலும் பிடித்து, எடுத்து ஒடிப்பானே' என்கின்றனர்.

மூவுலகமும் செலுத்தும் ராவணனுக்குப் பண்டு
முத்தி கொடுக்கவந்த சித்திர வடிவைக்கண்டு
தேவியிவள் என்றாள் ராகவன் இந்தச் சின்ன
சிலையோ ஒடிப்பான் ஏழுமலையும் ஒடிப்பான் என்ன
-ராம நாடகம்

என்பது சீதையிடம் ராமன் கொண்ட காதலின் பெருமையைக் கவிஞர் சுவைபடத் தீட்டும் கவிச்சித்திரமாகும்.

சீதை ராமனிடம் கொண்ட காதலையும் நாடகத்தமிழுக்கு ஏற்ப கவிராயர் சுவைப் படக் கூறுகிறார்.

ராமன் தன் சிற்றன்னையின் கட்டளையைத் தலைமேற்கொண்டு வனம் செல்ல ஆயத்தமாகிறான்.தனது பிரிவைத் தன் காதலி சீதைக்கு உணர்த்துகிறான்.

தலைவனைப் பிரிந்து தான் உயிர் வாழ இயலாத காதல் நிலையை...

செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை

-திருக்குறள்
பிரிந்துசெல்வதில்லை என்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல்..நீ போய்த்தான் தீரவேண்டுமாயின்..நீ திரும்பிவரும்போது யார் உயிருடன் இருப்பார்களோ அவர்களிடம் சொல்லிவிட்டுச் செல்...என்கிறாள் திருக்குறள் தலைவி தன் தலைவனிடம் குறிப்பாக .

ஆனால் கவிராயரோ மேலும் ஒரு படி செல்கிறார்..

தான் தலைவனைப் பிரிந்து வாழ இயலாத காதல் மிகுதியை சீதை புலப்படுத்துவதுடன் மற்றொன்றும் கூறுகிறாள்..

என்னைப் பிரிந்துசெல்லத் துணிந்தீர்..ஆயின் நீர் பிரிந்து சென்று தங்கும் காட்டின் பெயரையேனும் எனக்குக் கூறிச் செல்லுங்கள்.நீர் பிரியின் நான் இறப்பது உறுதி.இறப்பின் மீண்டும் பிறப்பது உறுதி நீர் பிரிந்துறையும் காட்டின் பெயரை அறிவிப்பின் அதனை நினைத்துக் கொண்டே நான் இறக்க நேரும்.அப்படி பெயரை நினைத்துக் கொண்டே இறந்தால் அதே காட்டில் மீண்டும் பிறந்து உங்களை அடைந்து மகிழ்வேன்..என்கிறாள்

நாடிநீர் போயிருக்கும் வனத்தின்பேர்
சொல்லவேணும் - அதை
நான்நினைத்துக் கொண்டிறந்தால்
அங்கே பிறக்க லாங்காணும்
-ராமநாடகம்

என்பது கவிராயர் படைத்த சீதையின் காதல்மொழி..

இறக்கும்போது நினைப்பது அடுத்த பிறவியில் கைகூடும் என்பது தத்துவ நூலார் கூறும் கருத்து.அக்கருத்தை இங்கு புகுத்தி சீதையின் காதல் மிகுதியை சுவைபடக் கூறுகிறார் கவிராயர்.

8 comments:

naanjil said...

திருக்குறளின் காமத்துப்பால் பாடலுடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பது அருமை.

நன்றி
நாஞ்சில் பீட்டர்
www.thirukkural2005.org
www.worldthamil.org

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி naanjil

vasu balaji said...

தீந்தமிழ் சுவைத்தேன். நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
வானம்பாடிகள்

நர்சிம் said...

மிகப் பிடித்திருந்தது சார் பதிவு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நர்சிம் said...
மிகப் பிடித்திருந்தது சார் பதிவு//


நன்றி நர்சிம்

வல்லிசிம்ஹன் said...

அருணாச்சலக் கவிராயரின் பாடல்களை யாரவது முழுவதுமாகப் பாடியிருக்கிறார்களா என்று தெரிந்து கொள்ள ஆவல்.
சீதையின் மனநிலையை கவிராயர் உரைத்தவிதம் அற்புதம். மிக நன்றாக இருக்கிறது/.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வல்லிசிம்ஹன்